Showing posts with label க சீ சிவக்குமார். Show all posts
Showing posts with label க சீ சிவக்குமார். Show all posts

Sunday, August 22, 2010

க சீ சிவக்குமாரின் "கானல் தெரு" ஒரு வாசிப்பனுபவம்

ஒரு நாளைக்கு குறைந்தது 50  பக்கங்களாவது படிக்க வேண்டுமென்பது நிமிடத்திற்கு இத்தனை முறை நாடி துடிக்க வேண்டும் என்பது போல எழுதா விதி எனக்கு .

எத்தனை புத்தகங்கள் படித்தாலும் விமர்சன பார்வையில் படித்தால் வாசித்தலின் சுவை குறையும் என்பதால் அதில் இஷ்டமில்லை.

ஆனால் திரு க  சீ  சிவகுமாரின் "கானல் தெருவை" வாசித்த பிறகு அதனழகை பகிர வேண்டுமென்ற பேரவா ..

உலகமே ஒப்புக்கொண்ட ஒரு சிறந்த ஆசிரியரை அறிமுகப்படுத்துதல் அதுவும் ஒரு சாதாரண வாசகியான நான் செய்தல்  புருவங்களை உயர்த்தச்  செய்யும் .அத்தவறை புரியாமல் ,நான் ரசித்த ,என் மனதிற்கு பிடித்த வரிகளை பகிர்ந்து கொள்ள மட்டும் முயற்சி செய்திருக்கிறேன் .

என் கன்னி முயற்சியை பொறுத்தருள்க .

தனக்கு தொடர் எழுதும் திராணியை இதை எழுதி ஆசிரியர் உணர்ந்ததாய் ஆரம்பிக்கிறது கானல் தெரு .

திரு சிவக்குமாரின் மிகச்சிறந்த படைப்பாய் "கன்னிவாடி " சிலாகிக்கப்படுகிறது எனினும்
இக்கானல்தெரு  படித்த பின் ஏற்படும் நினைவோட்டங்களும் ,பலமுறை படித்து மகிழ நிரம்பியிருக்கும் படிமங்களும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் என்பதில் மிகை இல்லை

இவ்வளவுதான்  உலகம் என கற்பிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவியும் ,இவ்வளவுதான் உலகம் என் இறுதியில் உணரும் இளைஞன் பார்த்தியும் முக்கியமாக உலா வருகின்றனர் .

கதையின் முதல் வரியிலேயே அந்த 'வளரிளம் அலைகள்'    என்ற சொற்றொடரில் மயங்கி நிற்கிறோம் .அவ்வலைகளை கற்பனையில் கண்ணுற்று களிக்கிறது மனம் .

பள்ளியில் மாணவிகள் ரோஜா மலரை டிபன் பாக்ஸில் நீரில் போட்டு சூடிக் கொள்வதும் ,
''ஏதோ ஓர் உணர்வை தேரையை போல் சுவரில் கற்களூடே பள்ளி வைத்திருக்கக்கூடும்" என்ற ஊகமும்,  ஒரு nostalgic  உணர்வை ஏற்படுத்துகிறது .

திரு சிவக்குமாரின் தனித்தன்மையான  satire  கதை  முழுவதும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கிறது .

ஸ்ட்ரைக் ஆதரவு திரட்டும் மாணவர்களை குறிக்கும் போது
"பெயிலாகிறவர்களை நம்பி தேசம் இயங்க வேண்டிய காலம் கனிந்து விட்டது "எனும் போதும்

"ஆண்டிறுதி உடற்றிறப்போட்டி" இதன் தொடர்ந்த வல்லின உச்சரிப்பு பற்களின் உறுதிக்குப் பயிற்சி " என கூறும் போதும் ,

"எல்லா வைபவங்களும் களைப்பில் தன முடிகின்றன " என்ற உண்மையை உணர்த்தும் போதும் ,

"இலக்கியத்தில் வந்த முப்பத்தெட்டு நிலவுகள் பற்றி அற்றை பகலில் பேசினார்" என கிண்டலடிக்கும் போதும்

"எவ்வளவு குறைவாக வாங்கினாலும் அதற்கு மதிப்பெண் என்ற பெயரிருப்பது ஆச்சரியம் "

"இந்த பெரு வெய்யிற் கோடையில் அரும் காதல் எப்படித்தான் வேர் பிடித்து விருட்சங்கள் ஆகின்றனவோ?"
என வியக்கும் போதும் ,

நாலணா காசை தியேட்டர் கவுண்டரில் துளைபோட ,மரங்கிறுக்க என்றே அரசு தயாரித்து வருகிறது எனும் போதும்

அந்த satire இல் உள்ள சுவையை ருசிக்காமல் இருக்க முடியுமா?

கதையினூடே கவிதை மழையும் உண்டு .

ஓரிரு வரிகள் எனினும் அவ்வரிகளின் கவிதாவனப்பு சிற்சில சொற்களை வைத்தே கிறுக்கும் என் போன்றோரை வெட்கமடையச் செய்கிறது .

ஒரு புன்னகையை "புத்தருக்கும் ,மோனாலிசாவிற்கும்   இடைப்பட்டதாய் "என வர்ணிப்பதிலாகட்டும்,

"நேசம் சில சமயம் பின்ன எண்களைப் போல் இருக்கிறது" என வியப்பதிலாகட்டும் ,

"சிலையை தவிர்த்து சிற்பியை வணங்கினான் ஒரு  பொற்கணம்"  என சிலாகிப்பதிலாகட்டும்,

"மூச்சு விடும்போதே மூச்சு விடாத  ரகசிய மௌனம் " எனும் போதும்

திணறித்தான் போகிறோம்

இறுதியில் சில வரிகள்

"வயதுகளற்ற காலம் வயதுகளை சுமத்துகிறது எதன்  மீதிலும் ,
காலத்தின் புத்திளமையோ கோள்களின் எடையோடு சிந்தனை மேல் கவிகிறது "

இச் சிந்தனை நம் மீது கவிந்து பேச்சற்றவர்களாய் போகிறோம் .

இவ்வாசிப்பனுபவத்தில் மூழ்கி இவ்வளவு தான் வாழ்க்கை என்று நாயகனுடன் நாமும் உணருங்கால் ,"காதல் என்றால் என்ன?" என்ற ஒரு பெருங்  கேள்வியோடு  மற்றொரு பக்கத்தை திறந்து வைக்கிறார்.


நான் இங்கு கானல் தெருவில் ரசித்து படித்ததையும் மகிழ்ந்து சிந்தித்ததையும்  பற்றி மட்டுமே எழுத முயன்றிருக்கிறேன் .

ஒரு நெடுங்கதையில் பலவித வாசிப்பனுபவம் கிடைத்து திளைத்ததை எனக்கு தெரிந்த அளவு பகிர்ந்துள்ளேன் .

வாய்ப்பு கிடைத்தால் வாசித்தது மகிழுங்கள் .