Thursday, November 14, 2013

திரு ராஜசுந்தரராஜன் சார் அவர்களின் என் நூலைக் குறித்த மதிப்புரை. நன்றி சார்.

                                நாய்க்குடைகள் மலர்ந்த கொல்லை


கவிதை எழுதுகிறோம், வாசிக்கிறோம்; அதனால் என்ன பயன்? தொலைக்காட்சித் தொடர்களாற் பொழுது போக்குவதை ஒப்பிட, கவிதைப் பரிபாடிகளினால் வந்து கூடும் ஆக்கப்பேறு என்ன?

புரிதல், புரிந்துகொள்ளுதல்,
இந்த இரண்டு தண்டவாளங்களின்
நடுவே
நகர்கிறது நம் நட்பு...

என்கிறார், “புரிதல்” என்னும் கவிதையில் கவிஞர் பத்மா. முதற் சொல் ‘புரியத்தருதல்’ என்று வந்திருக்க வேண்டுமோ என மண்டையைக் குழப்பிக்கொண்டேன். ஆனால், “துல்லியம் நிறுத்து எழுதாக் காலையும் உள்ளுறை உணர்த்துவ கவிஞர் வாய்ச்சொல்” என்னும் தன்னறிவினால், ‘புரிதல்’ வேறு என்னென்ன பொருள் தரும் என்று, அகரமுதலியைக் கலந்தேன்: புரிதல் = முறுக்குதல், ஆக்குதல், பொருந்துதல், மேவி ஆராய்தல், மனம் விரும்புதல் என்றெல்லாம் புரியக் கிடந்தது. ‘ஆக்குதல்’ என்னும் பொருள் தேர்ந்து வாசித்துப் புரிந்துகொண்டேன். அதாவது, என் வாசிப்பில், ‘புரிதல்’ = செயல்பாடு என்றும், புரிந்துகொள்ளுதல் = உள்ளுறை அல்லது மனக்கிடை உணர்தல் என்றும் பொருள்பெற்றன. இங்கே, கவிதை புரிதலுக்கு (யாத்தலுக்கு) அப்பாற் பட்டதாகக் கவிதை வாசித்தல் (புரிந்துகொள்ளுதல்) கட்டுமானிக்கப் படுவதைக் கவனிக்க!

உலகமயமாக்கலினால் ஊதியம் இன்னின்ன என்று, வானொலித் தொகுப்பாளினி ஒரு பட்டியல் இட்டாள். மறுத்துப் பேசிய மறுமுனை ஒருவர், மட்டைப் பந்தாட்டத்து இந்திய உட்குழுக்கள் பன்னாட்டினராலும் இயன்றவை ஆயினும், தமிழ்நாட்டினராகிய நாம், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ வென்றாக வேண்டும் என்றே விரும்புகிறோம். இதே உணர்வுதான் தேசிய எல்லைகளாலும் நம்மைப் பீடிக்கிறது. பாதுகாப்புக்காகச் செலவுசெய்கிற பணத்தை ஆக்கப் பணிகளுக்குத் திருப்பினால், இவ்வளவு நலிவு நம்மிடையே இருக்க வாய்ப்பில்லை; ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்பதே நடைமுறை என்றார். அதாவது, ‘நாய் பூனை எலி கூடி அணி கோர்த்தாலும் ஓயாதே வரப்பு வாய்க்காற் சண்டை’ என்கிறார்.   

பிரிவினைப் பொருத்தின் பன்மைத் தன்மையாற் பாகம்பட்டதே சமுதாயம். பல இனக்குழுக்களின் பல சமய வழிபாடுகளின் கூட்டுக் கலவை அது. ஒரே இனக்குழுவின் ஒரே சமயத்தினரிடையே கூட வேறுவேறு கொள்கைகள் தறிகெடக் கூடும் - யானைக்கு நாமம் தெற்கா வடக்கா என்பது போல.

வேண்டாம் என அறிவு மாற்றி வைக்க,
வேண்டும் என இதயம் இரங்கி நிற்க,
ஆம் இல்லை என மனம் பிரித்துப் பேச,
தேடலின் விடையாய்
...
என் சிரிப்பின் விலையாய்
...
அருகிலேயே இருப்பினும்

நெடுந்தூரப் புள்ளியாய் நீ

இவை கவிஞரின் “புரிந்ததா?” என்னும் கவிதையின் வரிகள். தொலைக்காட்சித் தொடர்களிற் போல, ‘இன்னார் ஆளுக்கு இன்னாரோடு இது’ என்று முடிச்சுப் போட்டு அவிழ்ப்பது இல்லை கவிதை. இடைநிலை விண்ணக மயன்வினை அது. உவமித்தல் வழி, உள்ளதை உணர்த்துவது.

அறியக் கிட்டுகிற உலகம் கட்டுமானிக்கப் பட்ட ஒன்று என்று புத்த பெருமான் சொல்லிச் சென்றதின் பின்னும், ஆயிரக் கணக்கில் ஆண்டுகள் அலைவுண்டு, இன்றுதான் கண்டதே போலப் ‘பின்நவீனத்துவம்’ என்று பெயரிட்டுப் பேசுகிறோம். வேறுவேறு கடவுள்கள், வேதங்கள், சைத்தான்கள் உட்பட, இவ்வுலகம் கட்டுமானிக்கப் பட்டதாகவே வந்திருக்கிறது. கவிதையும் கூடக் கட்டுமானிக்கப் பட்ட ஒன்றே. கவிதை வாசிப்பும் அப்படியே. ஆனால் அதன் இலக்கு, எங்கெப்போதும், கட்டுக்குள் சிக்காதது.

சிறிது மூடியிருந்த
கதவின் இடையில்

தெரிந்த
உன் பாதங்களுக்கேற்ற
முகத்தை
நான் மனதில்
வரைந்து விட்டேன்
.
வரைந்த அது

சிதையப் போகிறது

தயவு செய்து

என் கண்படாமல் போ நீ!

‘அறிந்த உண்மை கட்டுமானிக்கப் பட்டது’ என்னும் கருத்தினை மறுத்து, 1) ‘அது செய்முறை ஆய்வு கொண்டு நிறுவப் பட்டது’ என்றும்; 2) ‘அது தொன்றுதொட்டு மரபுவழி வகுக்கப் பட்டது’ என்றும்; 3) ‘அது உள்ளுணர்வோடும் இயற்கையோடும் ஒருங்குபட்டது’ என்றும் கருத்து வேறுபடுவார் உளர்.

இவர்களில், அறிவியற்-படிவரைக் கொள்கையரும் சமய-மரபியற் கொள்கையரும் ‘பரிணாமம்’, ‘படைப்பு’ என்பதில் அல்லால் பாரியதாக மாறுபடுபவர் அல்லர். எனவே  இவர்களுக்கு உண்மை என்பது ‘ஆகி வந்தது’ அல்லது ‘ஆக்கித் தரப்பட்டது’ அவ்வளவே. உள்ளுணர்வு-இயற்கைக் கொள்கையர் தமக்கோ உண்மை என்பது பின்நவீனத்துவக் கூற்றொப்பவே கட்டுமானிக்கப் பட்டது, ஆனால் தொன்மைக்குள் வேர் மீள நீட்டி ஈரந் துழப்பது.

இருவரிகட்கிடை உறை 
பொருளறியாதவன் வெறும் 
வார்த்தைகளை மட்டுமே வாசிக்கிறான்.  (“யாருக்கும் புரியாக் கவிதை”)

கட்டுமானிக்கப் பட்டதே கவிதை என்றாலும், கட்டுமானிக்கப் படாததை இலக்கு எனத் தேர்வதால், மேலே சொன்ன கொள்கைகளில், உள்ளுணர்வு-இயற்கைக் கொள்கையொடு ஒருங்குபடுவதே கவிஞர்தம் இயல்பு. ஆனால் அம்மட்டோடு அமையாமல், அறிவியலோடும் மரபினோடும் கூடிப் ‘புரிதல்’ கொள்வதும் அவர்தம் பண்பாடு. ஆக, ‘படைக்கப் படா’ததை ‘பரிணமிக்கப் பெறா’ததை எய்தவே கவிதைள் எழுதுகிறோம்; வாசிக்கிறோம். தொலைக்காட்சித் தொடர் போலப் பொழுதுக்கொலை புரிவதற்காக அல்ல. (ஓ! இத்துணை செறிஇயைவுச் செயல்பாடா கவிதைத் தொழில்!!!)  

  •  

பத்மஜா என்கிற கவிஞர் பத்மாவை, பா.ராஜாராம் அவர்களின் புதல்வி, மகாவின் திருமண விழாவில் சிவகங்கை வந்திருக்கக் கண்டேன். “என் கவிதைகளை வாசித்து இருக்கிறீர்களா?” என என்னை வினவினார். “இல்லையேம்மா,” என்று உண்மையால் குறுகினேன். “அப்படிச் சிறப்பாக ஒன்றும் இருக்காது. நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்!” என்று அவரும் அவையடக்கம் காண்பித்தார்.

சென்னை திரும்பியதும் அவரது வலைத்தளத்தைத் திறந்து நான் வாசித்த முதற் கவிதை (உண்மையில் அது ஒரு பாட்டு), “கண்ணா!!". என் பதின்ம வயதுகளில் நானும் சந்தக் கவிதைகள் எழுதிக் கிழித்தவன் என்கிற வாசனை காரணமாகலாம், “கண்ணா!!” எனக்குப் பிடித்துப் போயிற்று. அதை அடுத்து நான் வாசித்தவை எல்லாம் காதற் கவிதைகள். நவீனத்துவக் காலகட்டத்தில் கவிதை எழுதிப் புத்தகம் போட்ட எங்களில் யாரும் அவ்வளவாகக் காதற் கவிதைகள் எழுதியதில்லை. அப்படியே எழுதியிருந்தாலும் அதற்குள் ஓர் இறுக்கம், வறட்சி காய்ப்புக்கண்டு வாசிப்பவரை உணக்கக் கூடும். அப்படி அல்லாமல் கவிஞர் பத்மாவின் காதற் கவிதைகள் புதுவனவாக, எளியனவாக, மூளையோடு அல்லாமல் உள்ளத்தோடு மொழிவனவாக இருந்தன.

இவ் வார்த்தை விளையாட்டில்
நாமறியாமல் ஈடுபட்டு

வார்த்தைகள் தேடிக்கொண்டே

கண்களால்
கதைக்கிறோம் நாம்      (“வார்த்தை விளையாட்டு”)

என்று கவிதையின் மிடையம் (மிடைதல் > முடைதல் = ஊடு பாவிக் கட்டுதல்) ஆகிய வார்த்தைகளின் வழியேதானே வார்த்தைகளைக் கழித்துக்கட்டக் கண்டேன். மட்டுமல்ல, இந்தக் கழித்தல் வினை, ஒப்பனை வார்த்தைகளால் கவிதைக்கு முகப்படாம் சார்த்துவாரோ என்று எனக்கிருந்த அச்சத்தையும் போக்கியது. ஆனால், வாசித்து மேற்செல்லுகையில்,

டெக்டொனிக் தகடாய்
தடுமாறும் மன அணுமயக்கம்
சிறு பொறி காட்டுத்தீ

ஸ்பரிச மின்னல்
காலம் அழிந்து
விண்வெளி அணுக

நிலம் நோக்கி

வியர்வைக் கடல்.   (“தீங்குளிர்”)

என்னும் ஒரு கவிதை கண்டு, உண்மையில், வெருண்டு போனேன். ஏனென்றால் இது நவீனத்துவ காலத்துப் படிம இறுகல். பின்நவீனத்துவ காலத்துக்குப் பிந்திய ஒரு பெண்பாற் கவிஞரிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இவரிடம் நான் எதிர்பார்த்தது என்னவென்றால் காமர்விதந்தோதல் (romanticism). ஆனால், நல்ல வேளை, இப்படி ஒன்றிரண்டு இறுகல்தான் இத் தொகுப்பில் உள்ளன.

கொன்ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம்இல் அயலது ஏழில் உம்பர்
மயில்அடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே (குறுந். 138) 

கொல்லன் அழிசி எழுதிய இக் கவிதையின் இலக்கு, தனிமை அல்லது தாபம் அல்லது வீழ்ச்சி அல்லது வேறு ஏதோ...

(‘நொச்சி’ என்பது, சூலுறுப்புக் கோளாறுகளை நீக்கவும் பால்வளம் பெருக்கவும் பயன்தரும் ஒரு மருத்துவத் தாவரம். இதனை உட்கொண்டால், பெண்ணுக்கு இச்சைத் தூண்டலும் ஆணுக்கு மட்டுப்படுத்தலும் விளைவு வரும். அதாவது முழுக்கமுழுக்கப் பெண்தன்மைப் பெற்றியுள்ள தாவரம் இது. ‘கொன்’ என்பதற்கு, வீண், பெரிய, கொலை என்றெல்லாம் பொருள். ‘துஞ்சு’ என்பதற்கு, மடிதல் என்றும் பொருள். ‘ஏழில்’ என்பதற்கு, நன்னனது மலை, ஏழு ஸ்வரம், ஏழிலைப் பாலை (பேய் குடியிருப்பதாக நம்பப்படும் மரம்) என்றெல்லாம் பொருள். ‘மயில்அடி’ - இதை உணர்த்தவே முப்பிரிவு-இலைக் கருநொச்சியைச் சொன்னார் ஆகலாம். மயிற் புணர்ச்சியோ அலட்டலும் கூச்சலும் நிறைந்தது. ‘ஊழ்த்தல்’ என்பதற்கு, முதிர்தல், பதனழிதல், உதிர்தல், சொரிதல் என்றெல்லாம் பொருள். ‘பாடு’ என்பதற்கு, உலகவொழுக்கம், ஓசை, முறிதல், வீழ்தல், துயில் என்று பொருள்.)

பூ உதிரும் சத்தம் ஒருத்திக்குக் கேட்கிறதா? அதுவும் எட்டுக் கட்டையில் (ஏழில் உம்பர்) உரத்துக் கேட்கிறதா? என்றால், அது எப்பேர்ப்பட்ட தனிமை! இப்படித்தான் பொருள் புரிந்து வந்திருக்கிறோம். தப்பில்லை. ஆனால், விரகம், விரக்தி, நாயகி-பாவம் என்றெல்லாம் விரிந்தாழும் இதன் பரிமாணங்கள்...!!!

இருக்கட்டும், அதனால் என்ன பயன்?

கொல்லன் அழிசி படைத்த அவளுக்கு நேராததா உனக்கு நேர்ந்துவிட்டது? பொத்து! ‘யாம் துஞ்சலமே’ என்பதற்கு, “இவ்வளவுக்குப் பிறகும் நான் மடியவில்லை பார்!” என்று நேர்முறைப் பொருள்கொண்டு வாழ்க்கையை நேரிடு!


சிலந்தியின் வலை பின்னும் ஓசையும்
மரண ஒலியாய்...                  (“பொழுதோட்டல்”)

அந்த ஓட்டைக் குழாயின் நீர்சொட்டும் ஒலியில்
நாள் தவறாது உனது பெயர்.
எப்படித் தூங்குவேன் நான்?         (“எப்படி இயலும்?”)

என்று அதே தனிமை, விரக்திக்கு ஒலியைப் பெரிதுகேட்டுத் தொல்லைப்படும் ஒருவராய்க் கவிஞர் பத்மாவும். இது ‘நகல்’ எடுத்தலா என்றால், அப்படி எல்லாம் இல்லை. அவரதும் இவரதும் முதல்/கருப் பொருட்கள் (settings) வேறு வேறு. பிறகும், “சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்/ சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்” என்று பாரதியும் சொல்லியிருக்கக் காண்கிறோம். {||சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்/ சொல்லிய வண்ணம் செயல்|| - (குறள் 664)}

If there were the sound of water only
Not the cicada
And dry grass singing
But sound of water over a rock
Where the hermit-thrush sings in the pine trees
Drip drop drip drop drop drop drop 
But there is no water                 (“The Wasteland”)
  
என்று இன்மையை ஒலிக்குறிப்புகளால் கட்டமைக்கிறார் டி. எஸ். எலியட்டும். இது நம் மரபு. அவ்வளவுதான்.

கொள்கை சார்ந்து எழுதுபவர்கள் கூட, கவிஞர்கள் ஆகிற போது பிரிவினைப் பொருத்துகளுக்கு மேலாகி, வாசிக்கிற நம்மையும் கட்டுமானத்துக்கு அப்பாற்பட்டதை உணர ஆற்றுகிறார்கள். பிளாட்டோ எழுதிய “தெவ்வழக்குகள்” (“Dialogues”) வாசிக்கையில், சாக்ரெட்டீஸால் வினவப்பட்டு எவராலும் வரைவிலக்கணம் காணமுடியாத உண்மைகள் பல உள்ளதை அறிந்திருப்பீர்கள். அவ் உண்மைகள் பால் ஆற்றுப்படுத்துவதே காலதேசமாகக் கவிஞர்தம் பணி. 

உன்னை முதல் முதலாய் பார்த்த போது
எச்சில் பறக்க விசிலடித்து

இல்லாத பேருந்தை ஓட்டிய சிறுவனின் பயணியாய்

சீட்டு வாங்கிக்கொண்டு இருந்தாய்;
இறங்குமிடம் வந்ததும்
அந்த ஓட்டுனர் மல்யுத்த வீரனாக,
அவனிடம் அடி வாங்கி தோற்றுபோய்
கைகால் வான் நோக்கி
விட்டுவிட கதறியபடி இருந்தாய்;
இந்த விளையாட்டுக்கெல்லாம் வராத
எனக்குமட்டும்
எப்படி ஒரு பரிசாய்
அந்தப் புன்னகையைத் தந்தாய்?
இப்போது நானும்

இல்லாத இராட்டினத்தில்..
சுற்றும் ஒரு சிறுமியாய்!        (“சிறுமியானேன்!”)


இதுதான் கவிஞர் பத்மா. அனுபவம்; காட்சி; காண்பவர் தம்மில் வரும் மாற்றம். அம் மாற்றமும் வெள்ளந்தியான ஒன்று. ‘பிரச்சனைகளை நேர்கொள்ளாமல் தப்பித்தலா இது?’ என்று அவரை நேரிட நேர்ந்த சில சந்தர்ப்பங்களை வைத்து யோசித்தேன். கண்டதோ, ஆனால்,  
அவளழுத அந்த 
மழை நின்ற மாலையில் தான்
கொல்லை முழுக்க 
நாய்க் குடைகள் 
மலர்ந்து நின்றன..
                                                              
அவளைப் போலவே!

-     ராஜசுந்தரராஜன்
சென்னை
ஏப்ரல், 2012

Tuesday, September 10, 2013

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் புத்தகத்திற்கு திரு கலாப்ரியா எழுதிய முன்னுரை (நன்றி சார்)

செண்பகப்பூவின் மணமும் சில கவிதைகளும்.....

Intimacy, as I am using it, is sharing my reality with you.
Keith Miller

         பத்மாவின் கவிதைகளை நான் கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகளாக அவரது காகித ஓடம் வலைமனையில் படித்திருக்கிறேன். எப்பொழுதுமே ஒற்றைக் கவிதையாக அல்லது சில கவிதைகளாகப் படிக்கும் போது ஏற்படும் அனுபவத்தை விட ஒரு தொகுப்பாக, குறைந்தது ஐம்பது அறுபது கவிதைகளாகப் படிக்கையில் அது தரும் அனுபவம் வித்தியாசமானது என்ற என் ‘விருப்பக் கருத்தைஇந்தத் தொகுப்பு உறுதிப் படுத்துகிறது.இன்னொன்று குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சுவது என்பதும் ‘வெப்காமிரா வழியாகக் கொஞ்சுவதும் வேறு வேறு தானே.புத்தகமாகப் படிக்கையில் அதைக் குறித்து விரிவான அபிப்ராயம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
     பத்மாவின் கவிதைகள் ஒருவகையான அந்நியோன்யஉலகு சார்ந்தவையாய் உள்ளன. அல்லது மன நெருக்கடிகளிலிருந்து உலகாயுதம் நோக்கி விரிபவையாக இருக்கும். உலகம் என்கிற போதும் அது அவரைச் சுற்றியுள்ள அவரது உலகமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கும்.ஆனால் அது பலருக்கும் அனுபவமான உலகம்.எனவே அவரது மொழிதல்கள், நம் அனுபவங்களைக் கிளர்த்தி கவிதைக்குள் நம்மை நடத்திச் செல்வதை உணர முடியும்.ஒரு கவிதை,

பாடகன்
மாபெரும் திரையடைத்து
புரியாத மொழியில்
ஏதோ பாடிக் கொண்டிருந்தாய்
காமிரா உன் கண்ணை உதட்டை
மீசையை
மிக அருகில் தொலை பரப்பிக் கொண்டிருந்தது
இசை புக மறுத்து
உன் கழுத்து மருவை
நாவால் வருடி
யாராவது முத்தமிட்டு இருப்பார்களா?
என்ற கேள்வியே
மேலோங்கி நின்றது..
அதனை இடக்கையால் ஒதுக்கி
ஒலி உட் புக விட்டபோது
நீ கூறிக் கொண்டிருந்தாய்
இதுவரை நீ பாடியது
தாபத்தையாம்.

     தாபத்தின் போது ஏதாவது தழும்பை வருடுவது (மருவை முத்தமிடுவது) பற்றி நான் ஒரு கதைக்கட்டுரை எழுதியிருக்கிறேன். பத்மாவின் துணிச்சலான் முயற்சி இது. கடைசி இரண்டு வரிகள் இதை கவிதையாக்கி விடுகிறது.

ஒவ்வொரு விதையிலும்/ ஒளிந்திருக்கிறது/ பிறப்பிற்கானதோர் இசை/மழையின் தாலாட்டில் கண்ணுறங்கும் அது/ஒரு இடியோசையில்/வெடித்து பொழியத் துவங்குகிறது/பின் பிரபஞ்சத்தின் பாடலாய்/ வின்[R1]  மண் வியாபிக்கிறது/வியாபிக்கின்ற ஒவ்வொரு விதையிலும்/ ஒளிந்திருக்கிறது/இறப்பிற்கான/ ஓர் இசையும் கூட

இந்தக்கவிதையிலும் சில க்ளிஷேயான பிரயோகங்கள் இருந்தாலும் கடைசி மூன்று வரிகளில் கவிதையாகி விடுகிறது.
     இன்று நாளை நேற்றாகும் என்று ஒரு கவிதை.   TODAY IS THE TOMORROW YOU HAVE WORRIED YESTER DAY” போன்ற வாழ்த்து அட்டை/ போஸ்ட்டர்கள் போல ஒலித்தாலும் ஒருவகை அக உளைச்சலைச் சொல்லும்போது அதற்கு சற்றே ஒரு கனம் கிடைத்து விடுகிறது.
             .ஜிங்கிள் ஆல் த வே என்ற ஒரு கவிதையில் ஸ்லெட்ஜின் அச்சாணி என்று வருகிறது. அதற்கு அச்சாணி உண்டா.?
     காகிதக்கப்பல் செய்து தண்ணீரில் விட்டு விளையாடாமல் யாரின் பால்யமும் கழிந்திருக்காது. குறைந்த பட்சம் ஒரு கப்பலாவாது செய்து பார்த்திருப்போம். பத்மாவுக்கு காகிதக்கபல்[R2]  மீதும் கப்பல் மீதும் தீராத ஒரு ஆசை., ஒரு வகை அப்ஸெஷன் போல. முத்தக்கப்பல் (மிக நல்ல கவிதைகளில் ஒன்று), காகிதக்கப்பல், காகிதக் கப்பலாய் மாறிய நான், என்று நிறைய எழுதியிருக்கிறார்.ஒரு கவிதையில் காகிதக்கப்பலாகவே மாறி விடுகிறார்.
      இளம் கவிஞர்களின் பல நல்ல கவிதைகளில் நான் விரும்பிப் படிப்பவற்றில் றியாஸ் குரானாவின் கவிதைகளை[R3]  மிகவும் விரும்புகிறேன். அவற்றில் ஒன்றை பத்மா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.மிக நல்ல கவிதை அது. அவரின் பாதிப்பா அல்லது அப்படியொரு கவிதையாக்கம் குறித்த சிந்தனைகள் பத்மாவுக்குள்ளும் தோன்றியதா, தெரியவில்ல.வார்த்தை விளையாட்டுஎன்ற கவிதை ‘சுத்தமாக(with perfection)வந்துள்ளது. இதிலும் முத்தாய்ப்பான கடைசி வரி கவிதைக்கு நல்ல வலுச் சேர்க்கிறது.
     தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதையாக- அப்படியெல்லாம் ஒரு படைப்பாளி யோசிக்க முடியுமா, அல்லது எழுதிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் இப்படி ஒரு ‘ஆகச் சிறந்த கவிதை எழுது என்று சொல்ல முடியுமா தெரியவில்லை.-இருளின் நிறம் கவிதையைச் சொல்லலாம்.
     கன்ஃபர்ம்ட்- என்றொரு கவிதை. கருவுற்ற நிறைகுட மகிழ்ச்சியில், அடுத்த வீட்டில் விளக்கெரிவதைப்பிடிக்காத, மாமிகள் (மாமாக்களும்தான்) சந்தேகக் கேள்வியென்னும் விஷம் துப்பிக் கெடுப்பது பற்றிய கவிதை. எளிமையான வரிகளுடன் நகர்ந்து ஒரு குட்டி சுத்தியலடியோடு முடிகிறது.அவரது வங்கி வேலைகளின் தொடர்ச்சியாக எழுதப் பட்டதோ என்னவோ.. ‘பாலன்ஸ் ஷீட், ட்ரையல் பாலன்ஸ் எல்லாம் வருகிற ஒரு ‘ச்சும்மாஎழுதுகிற ஒரு கவிதையும் இருக்கிறது தொகுப்பில்.
 அம்மாகவிதையில், வாதைப்படும் அம்மாவைப் போட்டு விட்டு,சிறு குற்றச் சமாதானத்தோடு, மாட்னி ஷோ போகிற நடுத்தரவர்க்க மனோபாவத்தை மறைக்காமல் மறுக்காமல் சொல்லுகிறார். யதார்த்தமும் சோகமுமான நல்ல கவிதை.
     “ செண்பகப் பூவின் மணத்தை நுகரும் போது ஒரு சோக பாவம் மனதில் அப்பிக்கொள்ளும் என்று ரசிகமணி டி.கே.சி சொல்வது போல, பத்மாவின் கவியுலகில் உலவுகிற போது செண்பகப் பூவின் மணமும் ஏதோ ஒரு சோகமும் நாசி நெருடுவதைக் கூறாமல் தீராது.அதையெல்லாம் மீறி அவரின் அகண்ட வாசிப்புக்கும் ரசனை விசாலத்திற்கும் சாட்சியம் சொல்லுகிற பல நல்ல கவிதைகளை உள்ளடக்கிய பாரிய தொகுப்புத்தான் இது.

வாழ்த்துக்கள் பத்மா.

அன்புடன்
கலாப்ரியா

Sunday, September 8, 2013

இன்றென் கருவறை ஒரு முறை புரண்டது



சொல்
தசை மீது போர்த்தப்பட்ட திமிர் கொண்ட தோல்
காற்றின் வாடைக்கெல்லாம் வயப்பட்டு
காலனாய்
மேல் கர்ச்சிக்கிறதே!

மருந்தொன்று கொண்டு வா
இல்லை ஒரு திராவகம்!
பொசுங்கட்டும்
என் தூக்கம் கலைக்கும் துரோகி.

உடன் அவ்வையாய் மாறும்
உபாயம் அறியப் படாததால்
குஷ்டக் கிருமிகள்
என் மீது புகுந்து
விரல் தின்று விகசிக்கட்டும்.

போ இனி அவ்வாறு பார்க்காதே

தோலைக் கிழிக்கும்
வழியறியா பிச்சிக்கு
மனமொளிக்கத் தெரிவதில்லை.

கருப்பை சுழன்று
அவள் மூளை அடைந்ததை
எந்தச் சபையில்
கூறுவாளவள்?

விலகு!ஐயோ!அணை!
இல்லை !
இவள் பெண்மையைக் கொல்!

அல்லது மற்றொரு முறை
அந்தக் கண்களைக் கொஞ்சம்
மூடிக் கொள் .

இவளைக் கொல்வது
இலகுவாய் போகும்.

Wednesday, September 4, 2013

இரண்டு சீனக் கவிதைகள்



இன்றைய சீனக் கவிதைகளுக்கு ஒரு திறவுகோல் என அறியப்படுபவர் ஹுயு ஷீ (HU SHI ) 1891-1962.


கனவும் கவிதையும்


சாதாரண அனுபவங்கள் தாம் அனைத்தும்
பிம்பங்கள் கூடசாதாரணவை தாம்
மிகவும் எதேச்சையாய் அவை கனவுகளில் மலர்கின்றன
பின் ஒரு புதுவுரு அடைகின்றன
சாதாரண உணர்வுகள் தாம் அனைத்தும்
வார்த்தைகள் கூட சாதாரணவை தாம்
எதேச்சையாய் அவை கவிஞனை அடைந்து
முடிவுறா புதுக் கவிதையாய் மலர்கின்றன.
மதுவின் வீரியம் அது தரும் போதையில்
காதலின் பலம் அதன் தோல்வியில்
என் கவிதையை நீ எழுத முடியாதது போல
உன் கனவை நான் காண இயலாது .
--------------------------------------------------------------------------------------------------------------------------------



பழைய கனவு


பச்சை இலைகளுக்கூடே
ஒரு பறக்கும் கூரை வெளிப்படுகிறது
ஒரு பழைய கனவை அது எழுப்பி
என்னுள் கண்ணீரை துளிரச் செய்கிறது .
ஏனெனில் நான் பாடுவது
யாருமே அறியா இசையில்
பழைய பாடல்களைத்தான்
ஓ !நான் உண்மையில் பாடுவதெல்லாம் இல்லை
ஒரு பழைய கனவில் தான்
வசித்துக் கொண்டிருக்கிறேன் .....

Wednesday, August 21, 2013

வரிகளிடை மறைகவி

அவன் அனுப்பிய 
வரிகளை படிக்கத் தொடங்கினேன் 
எதாலோ ஏதோவோர் 
உயிரைத் துரத்த 
ஆயத்தம் கொண்டிருந்த 
வரிகள் 
அவ்வுயிரை அவை தொடும் நேரம் 
ஒரு நல்ல கவிதையாக 
மாறக்கூடிய சாத்தியங்கள் இருந்தது
அதுவரை அக்கவியின் 
பச்சை நிழல் 
அவ்வரிகளின் மேல் 
படிந்து மினுங்கியது.
பச்சை தந்த மயக்கத்தில் 
நல்ல கவிதையென 
செய்தி அனுப்பி விட்டு 
அமர்ந்த பின் தான் புலப்பட்டது
எல்லா வரிகளினூடே 
அமர்ந்திருந்த 
கவியின் உரு
அப்போது நிழல் கருப்பாய் மாறுவதை 
தடுக்க முடியாமல் 
திகைத்து நோக்குகையில் 
கவியின் நிறம் உண்மையில்  
சிவப்பாய் இருந்தது .

Sunday, August 18, 2013

இந்த மரத்தில் மட்டுமே கிளிகள் குடியேறுகின்றன

அதுவாகத்தான் அமைகிறது
அசைந்தழைப்பதில்லை எப்போதும்
இலைகள் கூட அங்கங்குதான்
பெரிதாக சுகந்தம் கூட பரவுவதில்லை
எப்போதோ பூக்கும் பூக்கள்
எப்போதாவது தான் காயாகி
விலகாமல் காற்றிலசைகின்றன
வெட்டப் பட்ட கிளைகள் மட்டும்
எப்படியோ உடன் வளர்ந்து விடுகின்றன
ஊழிக் காற்று  எத்துணை அசைத்தும்
சிறு சலனம் கூட காண்பதில்லை வேர்கள்
பூவும் மணமும் புகழும் சுற்றுதலும் இல்லாதிருப்பினும்
விதி கூட இதனை விலக்கி வைத்திருப்பினும்
இந்த மரத்தில் மட்டுமே கிளிகள் குடியேறுகின்றன
கூடிக் கூவிக் களிக்கின்றன .
என்ன !
உயரப் பறக்கும் பருந்திற்கு மட்டும்
இதனகம் கண்ணில் படுவதில்லை .

Tuesday, August 6, 2013

முத்த மலை

காற்றில் பறந்து வந்து
ஒரு முத்தம் என் கன்னத்தில்
அமர்ந்து விட்டதே!
ப்ரம்மஹத்தி பீடித்த
சிவன் போல்
அதை சுமந்து அலைகிறேன்
தோஷ நிவாரணம்
உன்னிடம் உள்ளதாமே
மற்றொன்று தொற்றுமுன்
வரம் தர வந்துவிடு
எனில்
முத்த மலையை
முதல் முறையாய் சந்தித்து விடுவாய்
சொல்லிவிட்டேன் ஆமாம்!

பேராசைதான்





ஒரு குழந்தையின் முதலடி
கவனம் போலோ
மழைக்காலத்தின் முதற்துளியின்
தண்மை போலோ
மொட்டவிழும் மலரின்
முதல் மணம் போலோ
கடல் காணும் ஒரு யானைக் குட்டியின்
ஆச்சரியத்தோடோ
தன் சிசு முதல் கையேந்தும்
தகப்பன் போலோ

நூல் கண்டு பிரித்தாடும் பூனையின்
உற்சாகத்தோடோ
முதல் மதுவருந்தும் ஒருவனின்
தயக்கத்தோடோ
சுழித்தோடும் ஆற்றிலிறங்கும்
படபடப்போடோ
முதல் நீச்சல் கற்றுணர்ந்த
சிறுவைப் போலோ
உண்டு மகிழ்ந்து கண்ணயறும்
த்ருப்தியோடோ
என்னைக் கொண்டாடு
என்றெல்லாம்
நான் கேட்கவில்லை!

என்னை நானாகப் பாரேன்
ஒரு முறை

அதற்காக
பேராசைக்காரி என்று மட்டும்
என்னைக் கூறிவிடாதே!

Tuesday, July 23, 2013

கடனாற்றல்

சாப்பிட்டு,துடைத்து,
மறு நாள் சமையலுக்கு கோலமும் போட்டுவிட்டு,
ஒற்றை விளக்கெறியும் சமையலறையில்,
அணைக்க மறந்த ட்ரான்ஸிஸ்டரின்
தனிமைப் பாடல்களைப் போல்
ஏதோ முணகுது மனம்.

நீர் குடிக்க வந்து
தனக்குப் பிடித்த பாடல் ஒலிக்க
மெய் மறந்து நிற்பது போல்
என் முணுமுணுப்பை ரசிக்கிறாய் நீ.

நீரருந்தியவுடன் பாடல் மறந்து
சென்றுவிடுவாய் என
அந்த ரேடியோவைப் போல்
எனக்கும் தெரிந்து தான் இருக்கிறது.
அணைக்கும் வரை ஆற்றுவது தானே கடன்!

Monday, July 22, 2013

முத்தப் புன்னகை

எதையும் எடுத்துக் கொள் என
கைதூக்கி சரணடைந்து விட்டாய்
 

ஆனால் உன் புன்னகையைத் தவிர
வேறு ஏதும் வேண்டுமாயிருக்கவில்லை

உனக்குத் தெரியாமல் ஒரு சிறுசுளை புன்னகையை என் கைக்குட்டையில் திருடிக் கொண்டு வந்து விட்டேன்.

சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும் என மேனியில் இளைப்பாற விட்டது ஏனோ தவறாகிப் போனது

என் உதடடைந்து ஒரு முத்தம் பறித்து என்னை கிச்சுகிச்சு மூட்டத் தொடங்கி

உடலெங்கும் புன்னகை மலர தொடங்கிவிட்டது.

போதும்!


உன்னுடையதை நீயே வைத்துக் கொள்

இல்லை உடல்மலர்ந்தவைகளையாவது உடனே கொய்து விடு

சாந்தியடையட்டும் நான்

Tuesday, June 11, 2013

மரங்கீழ் மிழற்றல்



உதிர் மலர் மிதிக்க
அஞ்சு மனம்
காமத்தீயில் காற்றென ஆடும்

எரி தழலென தகிக்கும்
ஆடை கிழித்து
பெருமழை சேற்றில் வீழும் .

அடி மரம் கொய்யும்
பேர் மூச்சு
அடங்காதலை  பாய்ந்து கொல்லும்.

சீறி எழும் உள்மூச்சு
ஓர்  உன்மத்த
நிலை நோக்கித் தள்ளும்.

இலை  அடர்ந்த மரங்கீழ்
ஓருரு  மட்டும்
அவ்வப்போது  மிழற்றி மாயும்

புத்தம் சரணம் கச்சாமி !

Monday, June 10, 2013

புத்தனாதல்


நண்ப!
கையில் ஒரு கோப்பையை
திணித்து விட்டு
புத்தனாகு  என்றபடி
மாயமாகிப் போனாய் நீ ,
கோப்பை ததும்பி
மது சிதற
பரவுமிடமெல்லாம்
புத்தன் சிரிக்கத் துவங்கினான்
அப்போது அவனைக் கொல்வது
அத்துணை இலகுவாய் இல்லை
புத்தனைக் கொல்லுதல்
அல்லது கோப்பையை
இடம் மாற்றுதல்
எது ஒன்றை செய்தால்
புத்தனாவேன்
என்றோசித்தபடி
சுட்டு விரல் மதுவை
சுவைக்கத் துவங்கினேன்
உடைந்தது கோப்பை !

Friday, May 31, 2013

கமலா தாஸின் " ஆடி"

31/05 கமலாதாஸின் நினைவு நாள்.

அவரின் கவிதை ஒன்றை மொழி மாற்றம் செய்துள்ளேன்.

                                     ஆடி

ஓர் ஆணை, உன்னை நேசிக்கசெய்வது
மிகவும் எளியதானதாய் இருக்கிறது,
அதற்கு
ஒரு பெண்ணாய் உன் தேவைகள் பற்றி
அவனிடம் நீ உண்மையாய் மட்டும் இருக்க வேண்டும்.
அவனுடன் கண்ணாடி முன்
வெற்றுடம்பில் நின்று பார்.
அதில் அவன் தன்னை பலவானாய் உணரட்டும்.
அதை அவன் நம்பட்டும்
அவனை விட நீ இளமையாகவும் மிருதுவாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறாய் என்று கூட.

அவனை நீ  வியக்கிறாய் என்று ஒத்துக்கொள்.
அவனுடைய கைகால்களின் நேர்த்தியையும்,
நீர்த்திவலைகளுக்குக் கீழ் சிவக்கும் கண்களையும்,
குளியறையின் ஊடே நடக்கும் அந்த வெட்க நடையையும்,
துண்டினைத் தளர்த்தி அவன் நீரினைக் கழிப்பதையும்  கூட.

இது போன்ற இனிமையான
அவனை உன்னுடயவன் மட்டுமாய்
ஆக்கக் கூடிய குறிப்புகள் அனைத்தையும் வியந்திரு.

அவனுக்குப் பரிசளி
உன்னைப் பெண்ணாய் ஆக்கும் அனைத்தையும் பரிசளி.
உன் நீண்ட கூந்தலின் மணத்தையும்
உன்னிரு மார்புகளுக்கிடை மலர் வேர்வையையும்,
உன் தூமையின் அதிர்வையும்,
உன் முடிவிலா பெண்மையின் பசியையும்.


ஓர் ஆணை  நேசிக்க வைப்பது சுலபம் தான்.
ஆனால் பின் அவனில்லாத வாழ்க்கையையும் நீ எதிர் கொள்ள நேரலாம் குறித்துக் கொள்.
நடை பிணமாய் வாழும்வாழ்க்கையில்
தேடலை கைவிட்ட கண்களுடன்
உன் பெயரைக் கூவி அழைத்த
அவனின் கடைசிக் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுடன்,
துலக்கிய பித்தளையாய்,அவன் தொடுதலில் மின்னி,
இன்று மங்கி, ஆதரவில்லாத உன்னுடலுடன்
நீ புதியவர்களை சந்திக்க நேரலாம்.
எனினும்
ஆண்களை நேசிக்க வைப்பது லகுவானது தான்.

                                                                      ******கமலாதாஸ்    

Wednesday, May 22, 2013

நன்றி நன்றி------- முதல் புத்தகம் ---முதல் விருது

கொஞ்சம் கிள்ளிக் கொள்ளுங்கள் என்று தான் ஆரம்பித்தார் அன்று தொலை பேசியவர் .
உங்கள் கவிதை புத்தகம் 'மலைப்பாதையில் நடந்த வெளிச்சத்திற்கு 'கவிதை உறவின் பரிசு கிடைத்துள்ளது என்றார்
நம்பத்தான் முடியவில்லை .
என் கவிதைகள் இலக்கியத் தரம் மிக்கதென்றோ இன்ன பிறவென்றோ கூற மாட்டேன் ஆனால் அதில் நிச்சயம் உண்மை உண்டு .அந்த உண்மைதான் இதை வாங்கித் தந்திருக்க வேண்டும்.

இருப்பினும் இந்த பரிசுக்கு நான் மட்டுமே உரியவள் அல்ல .

பின் வருபவர்கள் அனைவருக்கும் இது சமர்ப்பணம் .

முதலில் எழுதுங்கள் என்று ஆரம்பித்து வைத்த தினேஷ் என்ற சாம்ராஜ்ய பிரியன்;

அதை வாசித்து அதற்கு ஊக்கமளித்த சக வலைப்பூ நண்பர்கள்

அதை புத்தக வடிவமாக்க கருத்து கூறிய அமிர்தம் சூர்யா மற்றும் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள்

அதை வெளியிடத் துணிந்த டிஸ்கவரி பாலஸ் வேடியப்பன் அவர்கள்

அதற்குப் பெயர் சூட்டிய ராஜா சந்திர சேகர் அவர்கள்

அதை வாசித்து முன்னுரை எழுதித்தந்த ஆளுமைகள் கலாப்ரியா மற்றும் ராஜ சுந்தர்ராஜன் அவர்கள்

அதை வடிவமைத்து தந்த வெற்றி மற்றும் அவர் துணைவியார் அவர்கள்

தன் மகன் திருமணத்தில் அதை வெளியிட அரங்கம் அமைத்துத் தந்த திரு வெற்றிவேல் தம்பதியர்

காரைக்காலில் அதை அறிமுகப்படுத்திய இரா எட்வின் அவர்கள்

சென்னையில் அதை அறிமுகப்படுத்திய திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் திரு ஆத்மார்த்தி ,திரு சுந்தர்ஜி அவர்கள்

கோவையில் அதை கௌரவப்படுத்திய கோவை இலக்கிய சந்திப்பை சார்ந்த யாழி கிரிதரன் மற்றும் நண்பர்கள் .

சிவகாசியில் அதை மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்ற திருமதி.திலகபாமா அவர்கள்.

வெளிவந்த பிறகு அதற்கு மதிப்பீடு வழங்கிய ஆர் வி எஸ் தமிழரசி,தேனம்மை,கணேஷ் பாலா,கல்கி வார இதழ் ,அன்னா கண்ணன் மற்றும் ஹிந்து

இவர்கள் எல்லோருடன் பகிர்ந்து கொள்கிறேன் .

யாரையாவது விட்டிருந்தால் அது என் வயதினால் ஏற்படும் மறதியினால் அன்றி நன்றி மறந்ததால் அல்ல .

அவர்கள் என்னை நன்றாகத் திட்டலாம் 

 மீண்டும்  நன்றி நன்றி