Wednesday, October 22, 2014

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்.(திரு அண்ணா கண்ணன் அவர்களின் மதிப்புரை)


ஃபேஸ்புக்கில் என் நண்பர்கள் பட்டியலில் பத்மஜா நாராயணன் இருக்கிறார். அவ்வப்போது அதில் அவர் இடும் நிலைத்தகவல்களையும் படங்களையும் பார்ப்பதுண்டு. அவர் பெயரைக் கண்டதும் மேலும் பலரும் என் நினைவுக்கு வந்தனர். என் சித்தி மகளின் பெயர், பத்மஜா. என் மாமாவின் பெயர் நாராயணன். என் தாத்தாவின் பெயரும் அதுவே. பத்மஜா நாராயணன் என்ற பெயரைக் கண்டதும் இந்தப் பெயருக்கு உரியவர்கள் எல்லோரும் என் நினைவில் அசைந்தனர். என்னைப் போல் பலரும் இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியவர்களே. மனிதர்களின் இந்த இயல்பினை மிகச் சரியாகப் பத்மஜா ஒரு கவிதையில் பதிந்திருக்கிறார்.
யாராவது யாரையோ போல் தான்
இருந்துவிடுகிறார்கள்.
கண்ணோ, மூக்கோ, நடையோ
சாயலோ, பெயரோ, யாரையாவது ஒத்ததாக.
யாரிலோ யாரையோ காணும் மனம்
யாரைத் தேடுகிறது யாரிலோ?
யாராவது என்னிலும் யாரையோ
காணக்கூடும்..
யாருக்காவது யாரோவாக இருக்கும் சாத்தியம்
இருக்க வேண்டும்
என ஆசை கொண்டு யாரிலாவது
யாரையோ தேடுகிறேன்.
பத்மஜாவின் 'மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்' என்ற கவிதைத் தொகுப்பில் அகமும் புறமும் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிப் பிணைந்து, வலுவான கவிதைகளை நெய்திருக்கின்றன. வாழ்வின் பல்வேறு தரிசனங்களை இவரின் கவிதைகளில் காண முடிகிறது. ஏழாங்கல் ஆட்டத்தில் ஜெயந்திக்காவின் ஜிமிக்கி ஆடுகிறது.
மேலாக்கில்லாமல் வெளியே வந்த ராஜியைக் கண்ணாமூச்சி விளையாடுகையில் தனசேகர் பிடிக்க முயல்கிறான். ஸ்வப்னத்தின் கிதாரில் எத்தனை கம்பி என ஜூலி எண்ணிக்கொண்டிருக்கிறாள். பிண்டச் சோற்றைக் கொத்தும் காக்கையைப் பாட்டி வெறித்துப் பார்க்கிறாள். அது உறுதியான நிலையில், கல்யாணம் ஆகி வந்த பிறகு குளிச்சா இல்ல? என அடுத்த வீட்டு மாமி கேட்கிறார். மருத்துவமனை வராண்டாவில் வீழ்ந்து உருண்டு புரண்டு அழ வேண்டிய நேரத்தில் மதிய காட்சி சினிமாவுக்குப் போகிறார்கள். வால் வெட்டப்பட்ட குரங்கு ஒன்று, நாயைப் பெண்டாளத் தொடங்குகிறது...... இப்படியாக கவிதைகளுக்குள் இருந்து வெவ்வேறு கதைகளும் காட்சிகளும் அடுக்கடுக்காக எழுந்த வண்ணம் உள்ளன.
பத்மஜாவின் அக உலகம், மிகுந்த கூர்மையும் வீச்சும் பெற்றுள்ளன. கவிதைகளில் உலவும் அவனும் அவளும் தங்கள் காதலுடன் ஊடாடும் விதம், அலாதியானது. அவள், காகிதக் கப்பலில் முத்தங்களை நிரப்பி அனுப்புகிறாள். தன் நெருக்கத்துக்கு உரியவரின் பெயரைக் கடவுச் சொல்லாய் வைக்கிறாள். அவனோ, அவளின் கால் விரல்களை வருடி, உள்ளங்காலில் முத்தமிடுகிறான். அவள், ஒற்றை நட்சத்திரத்துடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அவனோ, இருளில் ஒளிரும் மூக்குத்தியைக் கழற்றி வைக்கச் சொல்கிறான். அவன் பழைய பனியனின் மணம், வேட்கையைக் கிளர்த்துகின்றது. ஓட்டைக் குழாயின் நீர்சொட்டும் ஒலியில் அவன் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, வான் பொய்க்காது காதலும் கூட என்கிறாள் அவள்.
நீ எனக்குத் தர நினைக்கும் சின்ன முத்தம்
ஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும் (நீயாகும் நான்)
தராமல் போன முத்தமொன்று
நம்மிடையே வளர்ந்துகொண்டே
போகிறது...
பேருரு எடுக்கும் அதனை
புன்னகையோடே வளர விடுகிறேன்.
வியாபித்து
என்னையது
கொல்லும் நாளுக்காக. (வளரும் முத்தம்)
காமத்தையும் மிக அழகாகக் கவிதைப்படுத்தியிருக்கும் பத்மஜாவின் திறம், பாராட்டுக்கு உரியது.
வாழ்வில் எத்தகு பெரும் துன்பங்கள் தோன்றினாலும் ஆங்காங்கே சின்னச் சின்ன இன்பங்களும் காத்திருக்கத் தான் செய்கின்றன. அவற்றை ரசிக்கவும் ஆனந்தமாய்ச் சிரிக்கவும் இலேசான ஒரு மனசு வேண்டும். பத்மஜாவிடம் அந்த மனசு, இருக்கிறது. அதனால் தான் இல்லாத ராட்டினத்தில் சுற்றும் ஒரு சிறுமியாய் அவரால் சுழல முடிகிறது.
வார்த்தைகளும் மவுனமும் மாறி மாறி விளையாடிக்கொண்டிருக்கின்றன, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாய். அந்த வார்த்தைகளுக்குள் நாம் புகுத்தும் உணர்வுகள், அதே அளவில் சென்று சேர்கின்றனவா என்றால் சந்தேகமே. சென்று சேராத உணர்வுகள், வழியில் எங்கோ வழி தவறி விழித்துக்கொண்டிருக்கக் கூடும். சென்று சேர்ந்த வார்த்தைகள் கூட, முழுமையான பொருளை ஏந்திச் சென்றனவா என்றால் அதுவும் உறுதியில்லை. சொல், பொருளையும் கூட அங்கங்கே இறக்கிவிட்டுவிடுகிறது. போகும் வழியிலேயே பொருளையும் உணர்வையும் கரைத்து ஒழுகவிட்ட சொல், வெறுமையாகப் பல நேரங்களில் சென்று சேர்ந்துவிடுகின்றது. ஆயினும் பலருக்கு அந்தச் சொல்தான் முக்கியமாய் இருக்கிறது. சொல்லுக்கு இருக்கும் முக்கியத்துவம் சில இடங்களில் மவுனத்துக்கு இருப்பதில்லை. மவுனத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் பல நேரங்களில் சொல்லுக்கு இருப்பதில்லை. இப்படியாக இந்த விளையாட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
சொற்களைப் பின்தொடரும் விளையாட்டு, இறுதியில் மவுனத்தில் தான் முடிகிறது. இது, பத்மஜா நாராயணனுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.
உனக்கும் எனக்கும்
நடுவே அலைகின்றன
நமக்கான வார்த்தைகள் எனக் கவிதையைத் தொடங்கிய அவர்,
வார்த்தைகள் தேடிக்கொண்டே
கண்களால்
கதைக்கிறோம் நாம் என முடிக்கிறார். (வார்த்தை விளையாட்டு)
மவுனம் எப்படி இருக்கும்? அதற்கு யாரேனும் உருவம் கொடுத்திருக்கிறார்களா? பத்மஜா கொடுக்க முயன்றிருக்கிறார்.
ஒரு பஞ்சுப் பொதியின் மென்மைபோல்
நம்மிடையே ஆன மவுனம்
நம் கண்களிலிருந்து வார்த்தைகள் ஒரு
சிறகுப் பந்தைப் போல் மாறி மாறிப் பறக்கின்றன (எரியும் மௌனம்)
ஆலயத்தின் கருவறைக்குள் நுழைந்து, தெய்வத்துடன் ஐக்கியம் ஆகாமல், வாசலோடு நிற்பது போல், கவிதையின் உட்பொருளை உணராமல் வெறும் வார்த்தைகளுடன் நின்றுவிடுபவர்கள் பலர். அதை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
தன்னை வாசிக்கும் அவனை
உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது
அந்தக் கவிதை.
இருவரிகட்கிடை உறை
பொருளறியாதவன் வெறும்
வார்த்தைகளை மட்டும் வாசிக்கின்றான்.
பின் உரக்க சிலாகிக்கின்றான்.......
.......புரிதாததொன்றை புரிந்ததென
அவன் புன்னகைக்கையில்
உள்ளே அழுதுகொண்டிருக்கும்
அந்தக் கவிதை (யாருக்கும் புரியா கவிதை)
கவிதைக்குள் பயணிக்கத் தொடங்குவோம். அது, நம்மைக் கைப்பிடித்துக் கூட்டிச் செல்லாவிட்டாலும், தூரத்து ஒளிக்கீற்றாக வழிகாட்டும். மலைப்பாதையில் நடந்த வெளிச்சத்திலும் சுடர்மிகு ஒளிக்கீற்றுகள் மின்னுகின்றன. அவற்றைப் பின்தொடர்ந்தால் புதுப் பாதையில் நடக்கவும் வாய்ப்பு உண்டு.
(மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - ஆசிரியர் :பத்மஜா நாராயணன். பக்கம் - 96. விலை - ரூ.70. வெளியீடு - டிஸ்கவரி புக் பேலஸ், எண் - 6, மகாவீர்
 காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு, சென்னை - 600078)


 அண்ணாகண்ணன்
[யாஹூ தமிழ்ச செய்திப்பிரிவு ஆசிரியரும் அமுதசுரபி மாத இதழின் முன்னாள் ஆசிரியரும் வல்லமை மின்னிதழ் நிறுவன ஆசிரியருமான அண்ணாகண்ணனின் இரண்டு கவிதைகள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் மூலப் படைப்பான திருக்குறள் தவிர வேறு எந்த படைப்பும் இத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் இல்லை . இருப்பின் வாசக அன்பர்கள் அறிவிக்கலாம். பிரசுரிக்கிறோம் .அமுதசுரபி இதழில் கவிதாயினிகள் குறித்து இவர் எழுதிய தொடர் சமகாலத தமிழ்ப் பெண் கவிஞர்களின் .முறையான அறிமுகமாக இருந்தது.  இணையவெளி இதழில் அவை மறு பிரசுரமாக இருக்கின்றன ]

Sunday, August 31, 2014

ப்ரமாண்ட வானொலிப் பெட்டி (கல் குதிரையில் வெளியான மொழிபெயர்ப்புக் கதை)ஆங்கிலத்தில் ஜான் சீவர்



  ஒரு கல்லூரியின் பழைய மாணவர்கள் செய்தியறிக்கைளில் வரக்கூடிய சராசரி வருமானமும், முயற்சியும், மரியாதையுடையவர்களைப் போன்றவர்கள்தான் ஜிம்மும் ஐரீன் வெஸ்ட்காட்டும். திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழிந்திருந்தன, இரண்டு குழந்தைகளுடன்சுட்டன் ப்ளேஸ்அருகில் ஒரு அடுக்கத்தில் 12 ஆவது மாடியில் வசித்து வந்தனர். ஒரு வருடத்தில் சராசரியாக 10.3 முறை திரையரங்கத்திற்கு செல்லும் வழக்கமிருந்தது. என்றாவது ஒருநாள் வெஸ்ட்செஸ்டெரில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்து வந்தனர்.

ஐரீன் வெஸ்ட்காட் ஒரு இனிமையான, எளிமையான, பழுப்பு நிற முடியும், எதுவும் எழுதப்படாத அழகான நெற்றியும் கொண்ட பெண். குளிர்காலங்களில் மிங்க் என்ற கீரியின் மென்மையான மயிர்த்தோலைப் போல் சாயமேற்றப்பட்டிடுக்கும். மரநாயின் தோலுடைய மேலாடையை அணிந்து கொள்வாள்.

தன் வயதை விட இளமையாக ஜிம் தோற்றமளித்தான் என்று கூற இயலாது என்றாலும்,அவ்வாறு அவன் தன்னை எண்ணிக்கொண்டான் என்று தான் கூற வேண்டும். ஒட்ட வெட்டப்பட்டிருந்த நரை முடியுடன், ஆன்டோவரில் அவன் வகுப்பு மாணவர்கள் அணிந்த அதே விதமான உடையும், அக்கறையுள்ள, ஆவேசமான, வேண்டுமென்றே வெகுளிபோல் தோற்றமளிக்கும் குணத்துடன் காட்சியளித்தான்.

சிறந்த இசையில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தில் மட்டுமே வெஸ்ட்காஸ்ட் இருவரும் தங்கள் நண்பர்கள், வகுப்பறை தோழர்கள், அக்கம்பக்கம் வசிப்பவர்களிடமிருந்து வேறுபட்டனர். இருவரும் யாரிடமும் தெரிவிக்காது அடிக்கடி பல இசைநிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தனர், தங்கள் நேரத்தை கணிசமான அளவு, வானொலியில் இசை கேட்டுக் கழித்தனர்.

அவர்களுடைய வானொலிப்பெட்டி, ஒரு புராதனமான, பதிவீட்டு நுட்பமான, முன்னறிந்து கூறவியலாத, சரியே செய்யமுடியாத ஒரு கருவி. அதனின், மற்றும் அதைச் சார்ந்த கருவிகளின் இயந்தரவியலை இருவரும் அறிந்திருக்கவில்லை. ஆகவே அவ்வப்போது கருவி மக்கர் செய்யும் வேளைகளில் ஜிம் அதன் பக்கவாட்டில் ஒரு தட்டு தட்டுவான். அது சில சமயம் போதுமாயிருந்தது.

ஒருநாள் மதியம், ஷீபெர்ட்டின் இசையை கேட்டுக் கொண்டிருந்த போது, வானொலியில் இசை நின்றே போய்விட்டது. வழக்கம்போல் ஜிம் பக்கவாட்டில் தட்டித் தட்டிப் பார்த்தும் எதுவும் ப்ரயோஜனமில்லை. அன்று ஷீபெர்ட்டை அவர்களுக்கு கேட்க முடியாமலே போனது. ஐரீனிடம் புதிதாக ஒரு வானொலிப் பெட்டி வாங்கி விடலாம் என்று கூறியவன், அதுபோலவே திங்களன்று வேலையிலிருந்து திரும்பி வரும்போது, ஒன்றை தான் தேர்ந்தெடுத்துவிட்டதாகக் கூறினான். ஐரீனுக்கு ஒரு ஆச்சரியமாக அது இருக்கவேண்டுமென்பதற்காக அதைப் பற்றி மேலும் எதுவும் கூற மறுத்துவிட்டான்.

மறுநாள் மதியம் வானொலிப்பெட்டி இல்லம் வந்து சேர்ந்தது. வேலைக்காரர்களின் உதவியுடன் அதனைப் பிரித்து முன்னறைக்கு கொண்டு வந்த போதே அதன் அழகற்றதோற்றம் ஐரீனுக்கு ஒப்புதலாயில்லை. ஐரினிற்கு தன் முன்னறை பற்றிய பெருமிதம் எப்பொழுதுமுண்டு, தன் உடைகளைத் தேர்வு செய்வது போலவே, மிகக் கவனமாக, அறையின் வண்ணத்தையும், அதில் உள்ள பொருட்களையும் தேர்ந்தெடுத்திருந்தாள். இப்போது இந்த வானொலிப்பெட்டி, அவளுடைய அணுக்கமான தேர்வுகளுக்கிடையில் வேண்டாத ஒரு பொருளாய் நின்று கொண்டிருந்தது. அதிலுள்ள சுழல்வட்டுகளும் விசை இயக்கிகளும் அவளுக்கு குழப்பமுண்டாக்கின. அதை நன்கு பலமுறை கண்டு திருப்தியான பிறகே அதை பொருத்தி இயக்கினாள். உடன் சுழல்வட்டுகள் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தன. தூரத்தில் பியானோவின் இசை கேட்டது. அது ஒரு சில வினாடிகளுக்குத்தான்.

ஒளியை விட வேகமாய் இசை அவளைத் துளைத்துச் சென்று, மேசையிலிருந்த ஒரு பீங்கான் பாத்திரம் கீழே விழுந்து உடையும் உச்சத்தில் வீட்டை நிரப்பியது. ஓடிச் சென்று ஒலியைக் குறைத்தாள். அந்தப் பெட்டிக்குள் சிறைப்பட்டிருந்த மூர்க்கமான ஏதோவொன்று அவளை பதட்டப்பட வைத்தது. பள்ளியிலிருந்து திரும்பிய குழந்தைகளை பூங்கா அழைத்துச் சென்றாள். அதன்பின் அன்று மதியத்திற்குப்பின் தான் அவளால் வானொலிப் பெட்டியை நெருங்க இயன்றது.

குழந்தைகளுக்கு தாதி உணவளித்துவிட்டு அவர்களை குளிக்க வைத்துக் கொண்டிருந்தபோது ஐரீன் வானொலியைத் திருப்பி, தனக்கு தெரிந்த, தான் மிகவும் ரசிக்கும் மொசார்ட்டை கேட்க அமர்ந்தாள். தெளிவாக இசை பொழிந்தது. பழையதைவிட ஒலி சிறப்பாய் இருப்பதாய் அவளுக்குத் தோன்றியது. ஒலிதான் முக்கியமென்பதால் இருக்கைக்குப் பின் அதை மறைவாக வைத்தால் போயிற்று என்று நினைத்துக் கொண்டாள். இவ்வாறு மனதளவில் சமரசம் செய்துகொண்ட உடன் ஒரு இடையூறு ஆரம்பித்தது.இசையுடன் ஏதோ எரியும் ஓசை கேட்கத் தொடங்கியது. இசையை மீறி விரும்பத்தகாத அலையோசையும்கூட.

இசை செல்லச்செல்ல வேறு பல ஓசைகளும் கேட்கத் தொடங்கின. அனைத்து சுழல்வட்டுகளையும், இயக்கிகளையும் முயன்று பார்த்தும்கூட, அந்த இடையூறைக் குறைக்க இயலவில்லை. ஏமாற்றத்துடனும் அதிர்ச்சியுடனும் அமர்ந்து, இசையின் ஓட்டத்தைக் கண்டுபிடிக்க முயன்றாள். அவர்கள் வீட்டின் சுவரை ஒட்டி மின்தூக்கி அமைந்திருந்தது, அதனுடைய ஓசையை வைத்து ஓரளவு வானொலியில் வரும் அதிர்வோசையை அவளால் யூகிக்க முடிந்தது. மின்தூக்கியின் உருளையிடம் சத்தத்தையும், அதை மூடித் திறக்கும் ஓசைகளையும், வானொலி உள்வாங்கி ஒலிபரப்பியது. எல்லாவகை மின்சார அதிவுகளும் இவ்வாறு வானொலியால் ஒலிபரப்பப்படுகின்றன என்பதை அவள் புரிந்து கொண்டதும், மொஸார்ட்டினூடே தொலைபேசி ஒலிகளையும், வாக்குவம் க்ளீனரின் ஒலியையும் கேட்கத் தொடங்கினாள். கொஞ்சம் உற்றுக் கேட்டால் சுற்றியுள்ள வீடுகளில் இருந்த அழைப்பு மணியையும், மின்சார சவரக்கத்தியின் ஓசையையும், உரக்கக் கத்தும் மின் அரைப்பானின் ஒலிகளையும் அது கிரகித்து ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. மிகச் சிறிய ஓசையெல்லாவற்றையும் கவரும், மிகுந்த ஆற்றலுடைய அழகற்ற அக்கருவியுடன் போராடித் தோற்று, தன் குழந்தைகளைக் காணச் சென்றாள்.

ஜிம் இரவு வீடு திரும்பியபோது, மிகுந்த தன்னம்பிக்கையுடன் விசைகளை இயக்கினான். ஆனால் ஐரீனுக்கு நேர்ந்ததே அவனுக்கு நேர்ந்தது. ஜிம் தேர்ந்தெடுத்த நிலையத்தில், யாரோ ஒருவரின் பேச்சு திடீரென்று அறையையே கிடுகிடுக்க வைத்தது. ஜிம் சத்தத்தைக் குறைத்து வைத்தான். பின் ஓரிரு நிமிடங்களின் இடையூறு ஆரம்பித்தது. தொலைபேசிகளின் சத்தமும், அழைப்புமணி, மின்தூக்கி மற்றும் சமையலறை உபகரணங்களின் ஓசை கேட்கத் தொடங்கியது. ஐரீன் கேட்டதைவிட இது கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது உண்மை. சூரியன் மறைந்த பின் ஒரு நகரத்தில் ஓசைகளில் ஏற்படும் மாற்றத்தை அது பிரதிபலித்தது. மின்சவரக்கத்திகளும், வாக்குவம் க்ளீனர்களும் அடங்கிவிட்டன. விசைகளுடன் பலமுறை போராடியும் ஏதும் செய்யமுடியாமல் ஓய்ந்து போனான். மறுநாள் இதை விற்றவர்களைக் கூப்பிட்டு ரகளை பண்ணுகிறேன் பாரென்று கூறினான்.

மறுநாள், வெளியில் ஒரு விருந்திலிருந்து திரும்பிய ஐரீனுடன், யாரோ ஒருவன் வந்து வானொலியை சரி செய்ததாக வீட்டிலுள்ள பணிப்பெண் கூறினாள். தன் தொப்பியைக் கூட கழற்றாமல் வானொலியை இயக்கினாள். அதிலிருந்துமிஸ்ஸெளரி வாஸ்ட்ஸ்என்ற இசை மிதந்து வந்தது. கோலைக்காலத்தில் ஒரு தேய்ந்த ரெக்காடரிலிருந்து ஓடைக்கு அந்தப்புறம் கேட்ட ஓர் இசையை ஞாபகப்படுத்தியது. இசை முடிந்து அதன் அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அது ஏதும் இல்லை. மறுபடியும் அந்தப் பாட்டே ஒலிக்கத் தொடங்கியது. விசையை மாற்றியவுடன், காக்கேசிய இனத்தவரின் இசை ஒலிக்கத் தொடங்கியது. வெறுங்கால்கள் உதைக்கும் ஓசையும், காசு மாலைகள் கிணுகிணுக்கும் ஒலியும். ஆனால் அதன் பின்னணியில் மணியோசையும் குழப்பான குரல்களும் கேட்டன. குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பியிருந்தனர். வானொலியை அணைத்துவிட்டு அவர்களின் அறைக்கு சென்றாள். அன்றிரவு ஜிம் அலுவலகத்திலிருந்து மிகவும் களைப்புடனே திரும்பினான். குளித்து உடைமாற்றி முன்னறையில் உள்ள ஐரீனுடன் அமர்ந்தான். வானொலியை இயக்க ஆரம்பித்த சில வினாடிகளில் தாதி உணவிற்கு அழைத்ததால் இருவரும் உணவுமேசைக்கு சென்றனர்.

பேசக்கூட இயலாதபடி களைப்பாயிருந்தான் ஜிம். சாப்பாட்டில் ஏதும் புதுமை இல்லாததால் மெழுகுவர்த்தி ஸ்டாண்டில் உள்ள அழுக்கிலிருந்து அடுத்த அறையில் கசிந்து கொண்ட இசைக்கு ஐரீனின் கவனம் தாவியது. வானொலியில் ஒலித்தசாப்பின்இசை சிறிது நேரம் ஓடினது. திடீரென்று இசை நின்று போனது.

ஒரு ஆணின் குரல், “கேத்தி! நான் வீடு திரும்பும் நேரத்தில், இந்த பியானோவை வாசிக்கத்தான் வேண்டுமா?” என்று கேட்டது. “இப்பொழுது தான் எனக்கு சமயம் கிடைக்கிறது. நாள் முழுவதும் ஆபிஸில் அல்லவா இருக்கிறேன்?” என்று ஒரு பெண் குரல் பதிலளித்தது. அந்த ஆண் குரல் ஏதோ ஆவேசமாகப் பேசி விட்டு, கதவை சாத்தும் ஓசை கேட்டது. உடன் மனதையுலுக்கும் இசை பொழியத்தொடங்கியது.

உங்களுக்குக் கேட்டதா?” ஐரீன் கேட்டாள்.

என்ன?” என்றான் இனிப்பருந்திக் கொண்டிருந்த ஜிம்.

இந்த வானொலிதான். யாரோ ஒருவன் இசையின் நடுவே ஏதோ ஆபாசமாகப் பேசினான்.”

ஏதாவது நாடகமாயிருக்கும்.”

நாடகம் போல் தோன்றவில்லைஎன்றாள் ஐரீன்.

மேஜையை விட்டகன்று முன்னறையில் காபி அருந்தச் சென்றனர். மற்றொரு நிலையத்தை முயற்சி செய்யலாமே என்று ஐரீன் கேட்டாள். விசையைத் திருப்பினான். ‘என் கயிறைக் கண்டாயா?’ என்றொரு ஆண்குரல் கேட்டது. “என் பொத்தாங்களையெல்லாம் பொருத்தி விடுங்கள். உங்கள் கயிறை கண்டுபிடிக்கிறேன் என்றது ஒரு பெண்குரல். ஜிம் அடுத்த நிலையத்திற்குத் தாவினான்.

தட்டில் ஆப்பிளின் விதைகளையும் மீதியையும் போடாதே. அந்த மணம் எனக்கு வெறுப்பாயிருக்கிறது என்றது ஓர் ஆண் குரல்.

விசித்திரமாய் உள்ளதே!” என்றான் ஜிம்.

ஆமாம்என்றால் ஐரீன்.

மீண்டும் விசையைத் திருகினான் ஜிம்.

ஒரு சரியான ஆங்கில உச்சரிப்பில் ஒரு பெண்மணி குழந்தைகளைப் பாடி தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். ‘கடவுளே! இது நம் ஸ்வீனியின் தாதியின் குரல். அதை நிறுத்துங்கள். அவர்களுக்கும் நாம் பேசுவது கேட்கப் போகிறது’.

ஜிம் வானொலியை அணைத்தான். ‘அது ஆர்ம்ஸ்ட்ராங்கின் குரல். அவள் ஸ்வீனியின் தாதி. குழந்தைகளுக்கு பாடிக் கொண்டிருக்கிறாள் போலும். அவருகள் 17-B இல் வசிக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங்குடன் நான் பேசியிருக்கிறேன். அவளின் குரல் மிகவும் பரிட்சயமாயுள்ளது. நாம் மற்ற வீடுகளில் இருந்தும் குரல்களை கேட்கப்போகிறோம்’.

‘நம்பவே முடியவில்லை’ என்றான் ஜிம்.

‘நிச்சயமாக அது அவள் குரல்தான். எனக்குத் தெரியும். நாம் பேசுவது அவர்களுக்கு கேட்குமா என்றுதான் சந்தேகம்” என்றாள்.

விசையைத் திருப்பினான் ஜிம். மீண்டும் ஸ்வீனியின் தாதியின் குரல் தெளிவாகக் கேட்டது. வானொலியின் அருகில் சென்று ஹலோ என்று குரல் கொடுத்தான்.

தாதி அதே பாட்டை திரும்ப பாடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு கேட்கவில்லை என்று நினைக்கிறேன். வேறெப்படியாவது முயற்சி செய்யுங்கள்.

ஜிம் மற்றொரு நிலையத்திற்கு மாற்றினான். ஒரு பார்ட்டி அதன் உச்சத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. யாரோ பியானோவில் வாசித்துக் கொண்டிருந்தார். அதனுடன் சேர்ந்து பாடும் குரல்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தன. அந்த சாண்ட்விச்சுகளை சாப்பிடுங்கள் என்று ஒரு பெண் கத்திக் கொண்டிருந்தாள். சிரிப்பு உச்சஸ்தானத்தில் கேட்டது. ஒரு பாத்திரம் கீழே விழுந்து நொறுங்கியது.

“அது ஃபுல்லர்ஸ். 11E யில் இருக்கிறார்கள். அவர்கள் இன்று ஏதோ விருந்தளிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். இன்று குடிக்க ஏதாவது வாங்க கடைக்கு வந்திருந்தாள். இது பிரமாதமாக இல்லை. வேறு ஏதாவது முயற்சி செய்யுங்களேன். 18-C இல் உள்ளவர்களைக் கேட்க முடிகிறதா பார்ப்போம்.

வேஸ்கோஸ்ட் இருவரும். அன்றிரவு. சால்மென் மீன் பிடிப்பதை பற்றியான ஓர் உரையையும், ஒரு சீட்டுக்கட்டு விளையாட்டையும், விடுமுறையில் பிடிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின்.. படங்களைப் பற்றிய கருத்துக்களையும், கடனைப் பற்றிய ஒரு கடுமையான சண்டையையும் கேட்டனர். முடிவில் நள்ளிரவில், சிரித்து சிரித்து ஓய்ந்தவர்களாய் வானொலியை அணைத்துவிட்டு படுக்கச் சென்றனர்.
சிறிதுநேரம் கழித்து அவர்கள் மகன் தண்ணீர் வேண்டுமென கத்தத் தொடங்க ஐரீன் ஒரு குவளைத் தண்ணீருடன் அவன் அறைக்குச் சென்றாள், அது விடியற்காலை, அக்கம்பக்கம் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருந்தன. ஜன்னலினூடே வெறிச்சோடிய தெரு கண்ணில் பட்டது. முன்னறைக்கு சென்று, வானொலியை இயக்கினாள். யாரோ மெதுவாய் இருமினார்கள். பின் ஓர் ஆண் குரல் கேட்டது. “இப்பொழுது எப்படி இருக்கிறாய் டார்லிங்?”
“இப்பொழுது சரியாக இருக்கிறேன்” என்ற களைப்பான பெண் குரல் கேட்டது. “ஆனால் சார்லி நான் முன்பைப்போல் இப்பொழுது இல்லை என்று களைப்புடன் தொடர்ந்தது. அவர்களின் குரலிலிருந்து அவர்கள் நடுவயதினர்களாய் இருக்கலாம் எனத் தோன்றியது. அந்தக் குரல்களின் சோகமும், ஜன்னலில் வந்த குளிர்காற்றும் ஐரீனை கொஞ்சம் உடல் சிலிர்க்க
வைத்தன. அவள் படுக்கைக்குத் திரும்பினாள்.

மறுநாள் காலை மற்றவர்களுக்காக காலையுணவு தயாரித்தாள். தாதி அவளின் அறையிலிருந்து வரவில்லை. குழந்தையின் தலையை வாரி பின்னலிட்டு பின் அனைவரையும் மின் தூக்கியில் வழியனுப்பி விட்டு முன்னறைக்குத் திரும்பினாள்.

“ஸ்கூலுக்கு போகமாட்டேன். எனக்குப் பள்ளிக்கூடம் பிடிக்கவேயில்லை. நான் போகவே மாட்டேன்” என்று ஒரு குழந்தையின் அலறல் கேட்டது. “போய்த்தான் ஆகவேண்டும்” என்று ஒரு பெண்மணி அதட்டினாள். ‘உன்னை 800 டாலர்கள் செலுத்தி அதில் சேர்த்திருக்கிறேன். நீ செத்தாலும் போய்த்தான் ஆக வேண்டும்” என்று மேலும் அதட்டினார்.

அடுத்த நிலையம், “மிஸ்ஸெளரி வால்ட்ஸ்” என்ற இசையை ஒலிபரப்பியது. விசைகளை மாற்றி மாற்றி பல மேஜைகளில் காலையுணவின் போது நடைபெறும் உரையாடல்களைக் கேட்டாள். அஜீரணம் பற்றியும், காம பேச்சுகளையும், வீண் பெருமைகளையும், நம்பிக்கையான, மற்றும் வெறுப்பு தோய்ந்த வார்த்தைகளையும் அவள் கேட்டாள். அவளுடைய வாழ்க்கை, மிகவும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் இருந்தது, வானொலியில் இருந்து சில சமயம் வெளிவரும் கடுமையான வார்த்தைகள் அவளை பயமுறுத்தின, தொந்தரவு செய்தன. பணிப்பெண் வரும் வரை வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்தவள், அவள் வந்தவுடன் அவசர அவசரமாக அணைத்தாள். ஏனெனில் இது கபடத்தனமானது என்று அவளுக்கு தெரிந்திருந்தது. அவளின் தோழியோடு அன்று மதிய உணவு அருந்த வேண்டியிருந்ததால் 12 மணிக்கு அவள் வெளியே கிளம்பினாள். மின்தூக்கியில் பல பெண்கள் இருந்தனர். அவர்களுடைய அழகான, உணர்ச்சியற்ற முகங்களை, அவர்கள் தொப்பியிலுள்ள மலர்களை, அவர்களின் மேலங்கியை உற்று நோக்கினாள். இதில் யார் உல்லாசப் பயணம் சென்றிருக்கலாம்? யாருடைய வங்கிக் கணக்கில் அதிகம் பணமெடுக்கப் பட்டுள்ளதோ என்று யோசிக்கலானாள். மின்தூக்கி 10 ஆவது மாடியில் நின்றது. இரண்டு டெரியர் நாய்களுடன் ஒரு பெண்மணி ஏறினாள். அவளின் முடி மேலே சேர்த்து கட்டப்பட்டிருந்தது. உண்மையான மிங்க் மேலங்கி அணிந்து கொண்டிருந்தாள். அவள் “மிஸ்ஸெளரி வால்ட்ஸ்” பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

ஐரீன் உணவும் பானமும் அருந்திக் கொண்டு, தன் தோழியை உற்று நோக்கியபடி இவளின் ரகசியம் என்னவாயிருக்கும் என்று எண்ணலானாள். உணவிற்கு பிறகு இருவரும்  கடைகளுக்குப் போவதாக ஏற்பாடு, ஆனால் தன்னால் வரமுடியாதெனக் கூறி ஐரீன் வீட்டிற்கே வந்துவிட்டாள்.

பணிப்பெண்ணிடம் தன்னை தொந்தரவு செய்யவேண்டாம் எனக் கூறிவிட்டு, முன்னறைக்குச் சென்று, கதவுகள் எல்லாவற்றையும் சாத்திவிட்டு வானொலியை உயிர்ப்பித்தாள். மதியம் முழுவதும், தன் அத்தையிடம் பேசும் ஒரு பெண்ணின் குரலையும், மிகுந்த சத்தத்தில் முடிந்த ஒரு மதிய விருந்தையும, தன் விருந்தினரை பற்றிய தகவல்கள் கூறும் குரல்களையும் கேட்டாள். “யாருடைய முடியெல்லாம் வெளுக்காமலிருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் சிறந்த மதுவைத் தராதே. எனக்கு ஒரு ஐந்து டாலர் தரமுடியுமா, இந்த மின்தூக்கி உதவியாளனுக்கு தரவேண்டும்.”என்று விருந்தளிப்பவள் கூறிக்கொண்டிருந்தாள்.

நேரம் செல்லச் செல்ல, உரையாடல்கள் அதிகமாகிக் கொண்டே சென்றன. ஐரீன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து திறந்த வானம் தெரிந்தது. வானத்தில் நூற்றுக்கணக்கான மேகங்கள் அலைந்தன. தெற்கிலிருந்து வரும் காற்று, பனியை உடைத்து வடக்கு நோக்கி ஊதிவிட்டாற் போலிருந்தது. வானொலியில் பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள் மற்றும் அலுவலகம் முடிந்து திரும்புபவர்களின் குரலுடன், காக்டெயில் விருந்துக்கு வருபவர்களின் குரல்களும் கேட்டன. “ஒரு பெரிய வைரத்தை குளியலறையில் கண்டெடுத்தேன்” என்று ஒரு பெண்குரல் கேட்டது. திருமதி டன்ஸ்டனின் வளையலில் இருந்து விழுந்திருக்க வேண்டும். “நாம் அதைவிற்று விடுவோம்” என்றது ஓர் ஆண்குரல்.

“மாடிஸன் அவென்யூவில் உள்ள நகைக்கடைக்கு அதை எடுத்துச் சென்று விற்றுவிடலாம். திருமதி டன்ஸ்டனுக்கு இது தெரியப்போவதில்லை. நமக்கு நூறு இருநூறு டாலர்கள் உபயோகமாயிருக்கும்” என்றான் அவன்.

திரும்ப ஸ்வீனியின் தாதி பாடுவது கேட்டது. யாரோ ‘அது தொப்பியில்லை, அது தொப்பியில்லை, அது ஒரு காதல் நாடகம். அப்படித்தான் வால்டர் ஃப்ளோரெல் கூறினார். அவன் சொன்னான் அது தொப்பியில்லை! காதல் என்று” என்று கத்தியது. பின் தணிந்த குரலில, “யாருடனாவது பேசித் தொலை. யாருடனாவது பேசு. நீ இப்படி ஊமையக நிற்பதை அவள் பார்த்தால், நம்மை விருந்தினர் பட்டியலில் இருந்து எடுத்துவிடுவாள். எனக்கு இவ்வகையான விருந்துகள் எவ்வளவு பிடிக்குமென்று உனக்குத் தெரியும்தானே!” என்று கூறியது.

அன்றிரவு இருவரும் வெளியே ஒரு விருந்திற்கு போக வேண்டியிருந்ததால் ஜிம் வரும்போது அவள் உடைமாற்றிக் கொண்டிருந்தாள். மிகவும் கவலையுடனும், வெற்றுநோக்கு பார்வையுடன் காணப்பட்டாள். ஜிம்மிற்கு குடிக்க கொண்டுவந்து கொடுத்தாள். அருகில் இருந்த நண்பர்களும் உணவருந்துவதாக திட்டம். ஆகையால் போக வேண்டிய இடத்தை நோக்கிச் சென்றனர். வானம் வெளுத்து ஒளி மிகுந்திருந்தது. ஆசையையும், நினைவுகளையும் கிளரக்கூடிய ஒரு மாலையாக அது இருந்தது. அவர்களின் உடலையும் முகத்தையும் தழுவிய காற்று மென்மையாய் இருந்தது. ஒரு ஓரத்தில் பாண்ட் ஒலித்துக் கொண்டிருந்தது. ஐரீன் ஜிம்மின் கையைப் பற்றி நிறுத்தி இசையைக் கேட்க நின்றாள். இவர்கள் எத்தனை நல்ல மனிதர்கள், நிஜத்தில் நமக்குத் தெரிந்தவர்களைவிட இவர்கள் மிகவும் நல்லவர்கள் எனக் கூறிக்கொண்டு, அவர்களுக்கு தன் கைப்பையிலிருந்து சிறிது தொகையைப் பரிசளித்தாள். திரும்பி வரும் போது, ஜிம் பார்த்தேயிராத ஒரு ஒளிமிகுந்த சோகச்சாயல் இருந்தது. மேலும் விருந்தில் அவள் நடந்து கொண்டவிதம் அவனுக்கு வியப்பூட்டியது. விருந்தளிப்பவரிடம் கடுமையாகப் பேசியும், தன் குழந்தைகளைத் திருத்தும் கண்டிப்புத் தோரணையுடனும் மற்றவர்களிடம் பழகினாள்.

வீடு திரும்பும் நேரம் இரவு இளமையாகவே இருந்தது. வான நட்சத்திரங்களை நோக்கி, “அந்த சிறிய மெழுகுவர்த்தி எத்தனை தூரம் ஒளியைப் பரப்புகிறது! அப்படித்தான் இந்த பொல்லாத உலகில் ஒரு நல்ல செயலும்” என்றான். ஜிம் தூங்கும்வரை காத்திருந்துவிட்டு, முன்னறைக்கு சென்று வானொலியை இயக்கினாள்.

மறுநாள் ஆறுமணி அளவில் ஜிம் அலுவலகத்திலிருந்து திரும்பினான். பணிப்பெண் எம்மா கதவைத் திரந்துவிட்டாள். தன் தொப்பியையும், மேலங்கியையும் கழற்றும் சமயம், ஐரீன் ஓடி வந்தாள். அவளின் தலையெல்லாம் கலைந்து கண்களில் நீர் பெருகியது. “16-C க்கு போ ஜிம்”, மேலங்கியைக் கழற்றாதே. ஒஸ்பேர்ன் தன் மனைவியை அடித்துக் கொண்டிருக்கிறார். நாலு மணியிலிருந்து அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்போது அவர் அவளை அடிக்கத் தொடங்கிவிட்டார். போய் அதை நிறுத்து” என கதறினாள். முன்னறையில் இருந்த வானொலியிலிருந்து ஆபாச வார்த்தைகளும், அடிக்கும் ஓசையும், அலறலும் கேட்டன. “இதையெல்லாம் நீ கேட்கத் தேவையில்லை” என்றான். அறைக்குள் நுழைந்து வானொலியை அணைத்தான். “இது இழிவான செயல். ஒருவருடைய ஜன்னலில் எட்டிப் பார்ப்பது போன்றதிது. இதெல்லாம் நீ கேட்க வேண்டிய அவசியமில்லை. வானொலிப் பெட்டியை அணைத்து விடு” என்றான்.

“ஓ மிகவும் கொடுமையாய் உள்ளது, மிகவும் கேவலமாயுள்ளது. நாள் முழுதும் கேட்டுக் கொண்டிருந்தேன். மிகவும் சோர்வுக்குள்ளாகிறது” என்று ஐரீன் அழத் தொடங்கினாள்.

“சோர்வூட்டுகிறதென்றால் ஏன் இதை கேட்டுத் தொலைக்கிறாய். இந்த வானொலியை உனக்கு சந்தோஷம் ஏற்படுத்தத்தான் வாங்கினேன். அதற்காக மிகுந்த செலவு செய்துள்ளேன். அது உன்னை சந்தோஷப்படுத்தும் என நினைத்தேன். உன்னை சந்தோஷப்படுத்தத்தான் நான் நினைக்கிறேன்” என்றான்.

“தயவு செய்து என்னிடம் சண்டையிடாதீர்கள்” என்று கூறியபடி அவன் தோளில் தலை சாய்த்துத் தேம்பினாள். அனைவரும் நாள் முழுவதும் சண்டையிடுகின்றனர். பணம் பற்றிய கவலை அவர்களைப் படுத்துகிறது. திருமதி ஹட்சின்சனின் தாயார் புற்றுநோயால் பீடித்து இருக்கிறார். அவரை


மாயோ க்ளினிக் அழைத்துச் செல்ல அவர்களிடம் போதிய பணமில்லை. இந்தக் கட்டடத்தில் ஒரு பெண்மணி வேலைக்காரனுடன் தொடர்பு வைத்திருக்கிறார். மிகவும் அருவருப்பாய் இருக்கிறது. திருமதி மெல்வில்லிர்க்கு இருதய நோயுள்ளது, திரு.ஹென்றிக்ஸின் வேலை ஏப்ரலில் பறிப் போகவுள்ளது. அதனால் திருமதி ஹென்றிக்ஸ் வருத்தத்தில் உள்ளார். அந்த ‘மிஸ்ஸெளரி வால்ட்ஸ்’ கேட்கும் பெண் ஒரு விலைமகள், மின்தூக்கி பணியாளிற்கு காச நோயுள்ளது, இப்பொழுது திரு.ஒஸ்பேர்ன் அவர் மனைவியை அடித்துக் கொண்டிருக்கிறார்” என்று துயரத்துடன் கதறி அருவியெனப் பொழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“இதை எல்லாம் நீ ஏன் கேட்கவேண்டும்?” என்றான் ஜிம் மறுபடியும். “உன்னை சோகத்தில் ஆழ்த்தும் இதை நீ ஏன் கேட்கிறாய்?” என்றான்.

இல்லை! இல்லை! என்று அவள் கதறினாள். “வாழ்க்கை மிகவும் கொடுமையானதாகவும், கீழ்த்தரமாகவும், அச்சம் தருவதாகவும் உள்ளது. ஆனால் நாம் அவ்வாறு இல்லை! இல்லையா ஜிம்? நாம் எப்பொழுதும் நல்லவர்களாகவும், கண்ணியமாகவும், அன்பாகவும் ஒருவருக்கொருவர் இருக்கிறோம் இல்லையா? நமக்கு 2 செல்வங்கள் உள்ளனர். இரண்டு அழகிய குழந்தைகள். நம் வாழ்க்கை கீழ்த்தரமில்லை. இல்லையா ஜிம்” என்று கேட்டபடி தன் கைகளால் அவன் முகத்தை தன்னுடன் இணைத்தாள்.

“நாம் மகிழ்ச்சியோடிருக்கிறோம் இல்லையா ஜிம்?”

“நிச்சயமாக” என்று களைப்புடன் கூறினான். கோபத்தை ஒத்தி வைத்துவிட்டு, “நாம் மகிழ்ச்சியாய்த்தான் உள்ளோம். நாளைக்கே இந்த வானொலியை சரி செய்யவோ அல்லது எடுத்துச் செல்லவோ கூறிவிடுகீறேன்” என்றான். அவள் முடியைக் கோதி, “பாவம் நீ” என்றான்.

“நீ என்னை விரும்புகிறாய்த் தானே!” என்று கேட்டாள் ஐரீன். நாம் பணத்தைப் பற்றி கவலைப் படுபவர்களாகவோ, நடிப்பவர்களாகவோ, நேர்மை அற்றவர்களாகவோ இல்லைதானே?” என்று கேட்டாள்.

“இல்லவே இல்லை” என்றான் ஜிம்.

மறுநாள் கடையிலிருந்து ஒருவன் வந்து வானொலியை சரிசெய்தான். அவன் சென்ற பிறகு மிகவும் கவனத்துடன் வானொலியை இயக்கினாள் ஐரீன். கலிபோர்னியவைன் விளம்பரம் ஒலித்தது. அதைத் தொடர்ந்து பீதோவனின்  நைன்த் சிம்பொனியும் ஒலித்தது. நாள் முழுவதும் அவள் வானொலியைக் கேட்டும்கூட, ஏதும் அசம்பாவிதமாக ஒலிபரப்பப்படவில்லை.

ஜிம் வீட்டில் நுழையும் போது ஸ்பானிஷ் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. “எல்லாம் சரியாய் இருக்கிறதா?” என்று கேட்டான். வழக்கத்தைவிட அவன் முகம் வெளுத்திருந்ததாய்த் தோன்றியது அவளுக்கு. சிறிது பானம் அருந்திவிட்டு “ஆன்வில் கேரஸில்” இரவு உணவு சாப்பிடச் சென்ரனர்.

“வானொலிக்கான தொகையை செலுத்திவிட்டென். 400 டாலர்கள். உனக்கு சந்தோஷம் கிடைக்குமென்று நம்புகிறேன்” என்றான் ஜிம்.

“நிச்சயமாக” என்றாள் ஐரீன்.

“400 டாலர் என் சக்திக்கு மீறிய தொகை. உன்னை சந்தோஷப்படுத்த ஏதாவது செய்யவேண்டும் என்பதே என் ஆசை. இந்த வருடம் செய்யக்கூடிய பெரிய செலவு இதுமட்டும்தான். உன் உடைகளுக்கான தொகையை நீ இன்னும் செலுத்தவில்லை போல?, அதன் பில்லை உன் மேசைமீது பார்த்தேன். செலுத்தியாயிற்று என்று ஏன் பொய் சொன்னாய்?” என்று கேட்டான்.

“நீ கவலைப்படுவாய் என்றுதான் கூறவில்லை. இந்த மாதம் செலுத்தி விடுகிறேன். போன மாதம் வீட்டில் விருந்து செலவல்லவா?”

“நான் கொடுக்கும் தொகையை கொஞ்சம் புத்திசாலித்தனமாக செலவு செய்யக் கற்றுக் கொள் ஐரீன். போன வருடம் போல் இந்த வருடம் பணவரவு இருக்காது. இன்று மிட்சேலிடம் மனம்விட்டு பேசினேன். யாரும் எதையும் வாங்குவதில்லை. எங்கள் நேரமெல்லாம் புதியதொன்றை பிரபலப்படுத்தும் முயற்சியில் கழிகிறது. அது எத்தனை சமயமெடுக்கும் என்று தெரியுமல்லவா? எனக்கும் வயதாகிறது. அடுத்த வருடம் முடி நரைக்கத் துவங்கிவிடும். இதுவரை நான் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. இனியும் நடக்குமா என்று தெரியாது” என்றான்.

“ம்” என்றாள் ஐரீன்.

“நாம் நம் செலவைக் கட்டுபடுத்தவேண்டும். நம் குழந்தைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பணத்தைப் பற்றிய கவலை எனக்கு நிறைய உள்ளது. வருங்காலம் தெளிவாகவே இல்லை. யாருக்குமேதான்! எனக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் காப்பீடு உள்ளது. ஆனால் அது எதுவரை வரும் என்று தெரியாது. உங்களுக்கு செளகரியமான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க நான் கடுமையாக உழைக்கிறேன். என் இளமையும், ஆற்றலும், உழைப்பும், மேலங்கிகளிலும், வானொலியிலும், விருந்துகளிலும் வீணாவதை நான் விரும்பவில்லை” என்று கசப்புடன் கூறினான்.

“ப்ளீஸ் அது அவர்களுக்குக் கேட்கப் போகிறது.”

“யாருக்கு? எம்மாவிற்குக் கேட்காது.”

“வானொலி!”

“ஐயோ! எனக்குத் தாங்காது. உன் ஊகங்கள் என்னைக் கடுப்பேத்துகின்றன! வானொலிக்கு இது கேட்காது. யாருக்கும் கேட்காது! சரி கேட்டாலும் என்ன? எனக்கு ஏதும் கவலையில்லை!”

ஐரீன் எழுந்து வெளியே சென்றாள். ஜிம் கதவருகே சென்று கத்தினான். “என்ன திடீரென்று தெய்வீகமாகி விட்டாய்? ஓரிரவில் ஒழுக்கமாகி விட்டாயா? உன் அம்மா உயில் எழுதும் முன்பே அவள் வைரங்களைத் திருடியவள்தானே நீ! உன் சகோதரிக்கு, அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில்கூட அவளுக்குரிய பணத்தை தராதவள் தானே நீ! உன் ஒழுக்கமும் தெய்வ பக்தியும் அன்று நீ கருவை கலைக்கச் சென்று போது எங்குப் போனது? நீ எவ்வளவு அமைதியாய் உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு விடுமுறையைக் கழிப்பதுபோல் உன் குழந்தையைக் கொல்லச் சென்றாய்? உனக்கு மட்டும் அறிவிருந்தால்.....!

அந்த அருவருப்பான பெட்டியின் முன், அவமானத்துடனும் வருத்தத்துடனும் நின்று அதன் விசையை இயக்கினாள். அதிலிருந்து அவளை சமாதானப்படுத்தும் குரலோ அல்லது ஸ்வீனியின் தாதியின் குரல் கேட்காதா என்று எதிர்பார்த்தாள். கதவின் அருகிலிருந்து ஜிம் கத்திக் கொண்டிருந்தான்.  வானொலியில் இருந்து வந்த குரல் கனிவாகவும், இயந்திரத்தன்மையுடனும் இருந்தது.

“டோக்கியோவில் ரயில் தடம் புரண்டது. 29 நபர்கள் மரணமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பஃபல்லோ அருகிலுள்ள கண்ணிழந்த சிறார்களின் மருத்துவமனையில் பரவிய தீ, இன்று காலை கன்னியாஸ்திரிகளால் அணைக்கப்பட்டது. வானிலை – வெட்ப அளவு 47, ஈரப்பதம் 89”.

.