Thursday, February 17, 2011

இன்று,நாளை நேற்றாகும்

எனக்கு இப்போது புரிந்து விட்டது!
என் வருங்காலத்தை 
உயிர்ப்பிக்கப் போவது 
நீ எனும் 
கடந்த காலம் தான் .
கடந்தவைகளில் வாழாதே 
என கூறுபவர்களுக்குத் 
தெரியுமா என்ன 
நான் வாழும் 
இன்று தான் 
நாளையின் 
கடந்த காலம் என?

Sunday, February 13, 2011

சூரிய வருடல்

என்றோ தன்னைத் தொட்ட காற்று
மீண்டும் தொட வரும்  
என
வெளிசுற்றும் நான் .

காற்றலைகள் தேடி
காய்ந்த தேகம்
மேலும் மேலும் சுக்காகிறது

பாவப்பட்டு மேல்விழும்
ஓரிரு மழைத்துளிகளை
ஆங்காரத்துடன்
உதறி விலக்குகிறது.

பரிகாசத்துடன்
அதன் நைந்த ஆடைகளை
இன்றைய காற்று
இழுத்துக் கொண்டோடுகிறது ..

வெளிப்படும் புண்கள்
புரையோடியது  கண்டு
சூரிய விரல் வருடத் தொடங்க
காற்றில் தொலைத்த ஆடை மறந்து
அதை நோக்கி நகர்கிறது அது!

யாரோ
பாவம் பிச்சி !என்பது மட்டும்
ஏனோ காதில் வந்து விழுகிறது .