Friday, October 29, 2010

காலும், காதலும், காமமும்,


மிக மிக 
மெலிதான தொடுதலுக்கு 
உன் விரல்கள் 
ஆயத்தம் கொள்வதை 
ஏனோ உன் கண்கள் 
முன்னதாகவே 
வெளிப்படுத்தி விடுகின்றன.

அவை ஏற்படுத்தப் போகும் 
சலனங்களுக்கு 
அஞ்சி 
நான் சிறிது சிறிதாய் 
விலகி அமரும் போது 
என் கால் விரல்கள் 
உன் தொடுதலுக்கு 
இலக்காகின்றன .

கால்கள் 
மரியாதையை மட்டுமல்ல 
காதலையும் சமர்ப்பிக்கும் 
இடம்தான் 
என அந்த வருடல் 
கற்றுத் தந்த க்ஷணத்தில் 
நம் காதலும் காமமும் 
ஒன்றாயின .

Friday, October 22, 2010

Kanmani Anbodu Kadhalan - Guna - Kamal Haasan & Roshini

Monday, October 18, 2010

பாழாய்ப் போன மனசு


எத்தனை முறை 
கடக்க நேரிட்டாலும் 
திண்ணை வைத்த 
அந்த பழைய வீட்டை 
யாரும் இடிக்காமல் 
இருக்கவேண்டுமென 
ப்ரார்த்தித்துக்கொண்டே இருக்கிறது 
மனசு!

8888888888888888888888888888888888888888888888888888888888888

ஓடும் வண்டியினை 
கைகாட்டி நிறுத்தி,
மல்லிப்பூ விற்கும்
சிறுமிகளின் தலையில்,
ஒரு நாளேனும் 
கிள்ளுப் பூவாவது 
காண ஏங்குது மனசு!

8888888888888888888888888888888888888888888888888888888888


எங்கோ வெளியூரில் 
எதேர்ச்சையாய் 
காணும் நேரும் 
இறுதி ஊர்வலங்களில் கூட,
எடுத்துச் செல்லப்படுபவர் 
வயதானவர் 
என்றுணர்ந்த பின்பே,
ஆசுவாசமாகிறது மனசு !

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888

Wednesday, October 13, 2010

மலைப்பாதைகள் அன்று வெளிச்சமாய் இருந்தன



இருட்டு, மலைகளில் விரைவில் படரும் என்பது கூட அறியாமல்
மலைவீதிகளில் சுற்றித்திரிந்தோம் அன்று.
பனியும் கருமையும், படர் வீதிகளில்
ஓர் ஒற்றைப்  போர்வை போர்த்தி,
மூடிய ஒரு விடுதியில், நாம் இரக்கச் சோறு
உண்ணச் செல்கையில்
மெல்ல
உன் மணம்,என் நினைவுப் படிமங்களில் ஆழ்ந்தது .

 பின், சட்டைப்பையில்
ஒளித்து வைத்த காதல் கடிதம் படித்து 
நீ என் இதழ் பறித்த போது 
சேர்ந்து வீழ்ந்தது, என் வெட்கத் திரையும் தான்  .

உன் பழைய பனியனின், மணம் கிளர்த்திய 
இவ்வேட்கைகள் தீர 
மற்றொரு முறை மலைப்பாதையில் கால் பாவாமல்
உன் தோள் தொற்றி நடக்க விழையும் நேரத்தில் தான்
எனக்கான மலைப்பாதைகள், இப்பொழுதெல்லாம் 
இருட்டாகவே எப்பொழுதும் இருப்பதை 
மிக தாமதமாக
என் மனம் புரிந்து கொள்கிறது . 

Thursday, October 7, 2010

வால் வெட்டப்பட்ட குரங்கு


ஒரு பெருவெளியின் 
துகள்கள் 
பிறப்பும் இறப்புமாய் 
பெருக்கெடுத்து ஓடிய 
பொழுதில் 
காலத்தின் சக்கரம் சுழல
நுரையாய் பொங்கிய வெளி 
காற்றாய் மாறும் தருணம் 
சிலிர்த்து கிளம்பிய நான் 
ஓடத்தொடங்கியது .
இரவும் பகலுமிலா நேரம் 
திசை தெரியா ஓட்டம் 
முடியும் வேளை 
சிறுபுள்ளியாய் கரையும் 
நானின் முன்னே தான் 
முதல் முதலில் 
ஒரு நாயை 
பெண்டாளத் தொடங்கியது 
வால் வெட்டப் பட்ட 
குரங்கு ஒன்று .

Sunday, October 3, 2010

கலர் கலரில் தோற்றவள்

 
L
O
N
D
O
N

விளையாட்டாகட்டும்
காக்கை முட்டை
விளையாட்டாகட்டும்
எல்லாவற்றிலும் ஏமாந்து
தோற்று போவாள் 
மீனு ..
கலர் கலர் வாட் கலரில்
கூட
தன் சட்டையில்  உள்ள
பூ கலர்
எல்லாரும் வந்து
தொட்ட பின்பு தான்
கடைசியாக அவளுக்குத்
தெரியவரும் ...... 

தன்னை விரும்பியவனை 
மறுத்து ,
அந்த மாடி வீட்டுக்காரனை  
மணந்து
காரில் போகும் போது 
மட்டும்  
 வாழ்க்கையில் ஜெயித்தவள் 
என
      இப்பொழுது  சொல்கிறார்கள்  ... 

அதுமட்டுமெப்படி?