Sunday, July 25, 2010

வடிவு என்ற C K சரஸ்வதி

நேற்று மற்றொரு முறை தில்லானாமோகனாம்பாள்   பார்க்க நேர்ந்தது .அதிசயமாக தொலைக்காட்சி  பெட்டியில்  ப்ரௌஸ் செய்யும் போது இந்த படம் ஒளிபரப்பப்  பட்டுக்கொண்டிருந்தது ..எத்தனை முறை  பார்த்தாலும் அலுக்காத படம் என்பதால் சிறிது நேரம் அமர்ந்து பார்த்தேன் .
 
இந்த படத்தின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே கிடையாது ..அது வேறு  விஷயம். பொசுக்கென்றால் சந்தேகப்படுவதும் ..பின் உணர்வதும் ......ஒரு மனம் ஒப்பிய காதல், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது அல்லவா?...
 
பிடிக்காதது  இருந்தும் சிலது பிடிக்கும் அதற்கு காரணங்கள் தெரியாது   .அது போல இந்த படமும்.
அதுபோகட்டும் வடிவைப்பற்றி பேசுவோம் ..
 
இந்த படத்தில் மிக அழகான உடைகள் அணிந்து கதாநாயகியையும்  தூக்கி சாப்பிடுபவர் வடிவாக வாழ்ந்த C K  சரஸ்வதி அவர்கள் .
 
பெண்கள், திரையில் தோன்றும் உடைகளைப் பார்க்காமல் போனால் ஜன்ம சாபல்யம் ஆகுமா? அதிலும்  சரஸ்வதி அம்மாள் அணிந்து வரும் நல்ல அழகிய combination இல் பட்டு புடவைகளும், நகைகளும் ஆஹா வென்று சொல்ல வைக்கும் .
 
அதனால் தானோ என்னவோ எனக்கும் மனதில், அவர்கள் பட்டிலும் தங்கத்திலும் புரள்வார்கள் என்ற எண்ணம் இருந்தது ,அவர்களை நேரில் காணும் வரை....
 
நான் சென்னை  சைதாபேட்டை அலுவலகத்தில் வேலை செய்யும் போது பல திரையுலக பிரபலங்கள் எங்கள் அலுவலகத்திற்கு  வருவதுண்டு .போன புதிதில் ஆ வென்று  வாய் பிளந்து பார்த்திருக்கிறேன் .பின்பு அவர்களில் சிலர் நண்பர்களாகவே மாறினர்.
 
ஒரு நாள் என் சக ஊழியை" பத்மா ..அங்க பாருங்க யாருன்னு" !என்று  சுட்டிக் காண்பித்தார்  .
ஒரு வயதான மூதாட்டி ஒரு கசங்கிய சேலை அணிந்து மிகவும் பாவப்பட்ட நிலையில் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தார் .
 
'இவர் தான் தில்லானா மோகனம்பாவில் நடித்த சி  கே சரஸ்வதி அம்மாள்' எனவும் ,மிகவும் அதிர்ச்சியாய் போய்விட்டது .அப்படியா அப்படியா வென்று பலமுறை கேட்டு விட்டு அருகில் சென்று பேசினேன் .
 
அருகே சி ஐ டி நகரில் வசிப்பதாகவும் ,மிகவும் சிரமமான பிழைப்பாய் இருப்பதாகவும் அரசு நலிந்த கலைஞர்களுக்கு  தரும் ஊய்வூதியமான 2000 ரூபாய்  வாங்க  அருகில் ஒரு வங்கிக்கு வந்ததாகவும் கூறினார்.

மிகவும் வருத்தமாய் இருந்தது ..பின் ஒரு நாள் தி .நகருக்கு நடந்து செல்வோம் என்று போகையில் ,ஒரு வீட்டு வாசலில் தண்ணீர் பிடிக்க ஒரு கிழிந்த  nighty  அணிந்து போராடிக்கொண்டிருந்தார் .

இதுபோல வெள்ளித் திரையில் மின்னி விட்டு நிஜ வாழ்வில் கஷ்டப்படுபவர்கள்  எத்தனை பேரோ?
தியாக ராஜா பாகவதரில் ஆரம்பித்து ,பல பேர் இருக்க வேண்டும் .

இருப்பினும் திரையில் காணும் பொய் பிம்பங்களை வைத்து நம் மனதில் ஒரு கற்பனை வைத்துக்கொள்வது எவ்வளவு தவறு ?
இப்படி நிழலை நிஜம் என்று நம்புவதாலேயே தான் திரையுலகு நம்மை ஆளவும் வழி வகுத்திருக்கிறோம். நிழலின் போலித்தனத்தையும் நிஜத்தின் கொடூரத்தையும் சந்திக்கும் போது அதிர்ச்சியாய் உள்ளது  .

நிறைய பேருக்கு இது தெரிந்தும்  இருக்கலாம் .எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் உணர முடிந்தது
அது சரி, இந்த  திரை உலகத்தைப் போல் எத்தனை ஊடகங்களோ?

Thursday, July 22, 2010

சோதனைக் கப்பல்

சோதனைகென்றொரு  
கப்பலை
செலுத்திப்   பார்க்க
துணிந்து விட்டேன் 

போகுமிடம் தெரியாததால் 
அடையும் முகவரி
அறியாததால்
காற்றினை மட்டும் நிரப்பி,
விரைந்து போ
என ஆணையிட்டேன் .

காத்து காத்து
மறந்த ஒரு நாளில்
சோதனைக் கப்பலும்  
இக்கரை அடைந்தது .

காற்றடைத்த இடமெல்லாம் 
காணாவிடங்களிலிருந்து  ,
அன்பின் முகவரி ரொப்பி,
ஆயிரம் மலர்களும்  தாங்கி
என் சோதனைக் கப்பல்
ஒரு சாதனைக் கப்பலாய்!

Tuesday, July 20, 2010

கலாப்ரியா கவிதை

ஒரு மொழியில் ,ஒரு இனத்தில் ,
ஒரு முறை தான் நிகழும் அற்புதம் கலாப்ரியா 
                                                                                                           ---விக்கிரமாத்தியன் 



இந்த வருடம் சிற்பி இலக்கிய விருது  வாங்கும் திரு கலாப்ரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .அவருடைய கவிதை ஒன்றினை மொழி மாற்றம் செய்ய முயற்சித்துள்ளேன் .
என் முயற்சி வெற்றி என்றால் மகிழ்ச்சி
கவிதையினை பங்கம் செய்திருந்தால் மன்னிக்கவும்
தமிழின் இனிமையையும் அழகையும் எந்த மொழிலும் புகுத்தல் கடினம் ..எனினும் என் சிறு பிரயர்த்தனை .

----------------------------------------------------------------------------------------------------------------------------------

                                         DID WE MEET?

WE FAILED TO MEET
THOUGH
WE DID MEET

BY CONSENSUS
WE CHOSE
NOT TO SIT BY THE TREE
WITH TREPIDATION
FOR THE BIRDS DROPPINGS
ON US

THE MOMENT
WE SAT ON GRASS
WE GLIMPSED AT AN ANTHILL
FRANTICALLY TRYING TO CAVE IN ,
AND OUT CAME SOME INSECTS
UNBALANCED AND SCURRYING ....
YOUR FORE FINGER TOO REMAINED
A BOOK MARK,
TO OPEN THE PAGE YOU LIKED
HOWEVER IDLE FOR LONG

AS WE FAIL TO NOTE ,
THE FINEST ATTRIBUTES OF A MOVIE ,
JUST BY READING AND FAILING ,
AND TRAILING BEHIND THE SUBTITLES ..

WE COULD NEVER
MEET EACH OTHER
ALTHOUGH...
WE MET ONE FINE DAY

-----------------------------------------------------------------------------------------------------------------

                                           துணைத்தலைப்பு
நம் சந்திப்பு
நிகழாமல் போனது

 பறவைகள்
தலையில் தோளில்
எச்சமிடலாமெனவோ
என்னவோ
மரத்தடியை ஏற்கனவே
தவிர்த்திருந்தோம்
சற்றே மனம் பகிர்ந்து .

புல்தரை
மீதமர்ந்த உடனேயே
கலையத்தவிக்கும்
இரும்புப் புற்றை கண்ணுற்றோம்
வேறு சில பூச்சிகளும்
சமன் குலைந்து
இடம் பெயர்ந்தன
படித்துக் கொண்டிருந்த பக்கத்தை
உடன் எடுக்கத் தோதுவாய்
உன் சுட்டு  விரலை
நெடுநேரமாய் ஒரு
புத்தகத்துக் குள்ளேயே
வேறு வைத்திருந்தாய்

துணைத் தலைப்புகளையே
பார்த்துகொண்டிருந்ததில்
வாசிக்க முயன்று தோற்றத்தில்
படவிழா சினிமாவின்
மற்ற நல்ல பரிமாணங்களை
தவற விட்டது போல்

நம் சந்திப்பு
நிகழாமல் போனது
நாம் சந்தித்த அன்று

 

Monday, July 19, 2010

நெய்வேலி புத்தகக் கண்காட்சி

 இம்முறை கண்காட்சி சென்று ,நான் மிகவும் சந்தோஷப்பட்டது நம் வலைப்பூ  நண்பர்களின் புத்தகங்களைப் பார்த்து தான் ..ஏதோ நமக்கு மிகவும் வேண்டியவர்களை பார்த்தது  போல இருந்தது ....

அகநாழிகை ஏதும் stall போடவில்லை ...உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் வந்திருந்தார் ..அங்கு எஸ் ரா வாங்கி விட்டு,பின்  அவரின் "கடவுளுடன் பிரார்த்தித்தலில்" அவர் கையெழுத்தும் வாங்கிகொண்டேன் ..

அப்போதுதான் பா ராஜாராமின்  கருவேல நிழல் கண்ணில் பட்டது ..மனுஷ்ய புத்திரன் சொன்னார் ..'வாசு என் நண்பர் தான்.அவர்  தனியே  கடை போடவில்லை ..நான் தான் வைத்திருக்கிறேன்' என்று..

உடன்  அங்கிருந்த இரண்டு கருவேல நிழல் ,நீர் கோல வாழ்வை நச்சி,கூர்தலறம் ,கோவில் மிருகம் ,என எல்லாவற்றையும் வாங்கி விட்டேன்..என்னவோ சொல்ல இயலா சந்தோஷம் ..

அதேபோல் மற்றொரு இனிய surprise அடர்கருப்பு காமராஜரின் ஒரு தேவதையும் பொன்வண்டும் புத்தகம் கிடைத்தது (அதை படித்து முடித்து விட்டேன் சார் ).கூட வந்தவர்களிடம் இவங்கலாம் எனக்கு தெரியும்ன்னு பெருமை அடித்துக்கொண்டதில் அவர்கள் நொந்து போனது நிஜம் ..

வந்து ஒரே மூச்சில் இந்த புத்தகங்களை படித்தும் ஆயிற்று .(நம் வலைப்பூ  நண்பர்களின் புத்தகங்களை சொல்கிறேன்)

மதியம் 12  மணிக்கு போனதால் கூட்டம் கம்மி . கடைசி நாளானபடியால் நல்ல discount உம் கிடைத்தது (15 முதல் 50 வரை )

சாம்ராஜ்யப்ரியன்   கண்காட்சிக்கு வந்திருந்தார் ..சென்னை அளவில் இது மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்று சொன்னார்..இருப்பினும் நாங்கள் திரும்பும் சமயம் ஏறக்குறைய ஆறுமணி அளவில் அரங்கம் நிரம்பி வழிந்தது ...
நல்ல வேளை நாம் இப்போது வரவில்லை என நினைத்துக்கொண்டேன் .

அரங்க ஏற்பாடுகள் எல்லாம் அருமையான முறையில் இருந்தன ..ஆனால் விற்பவர்கள் கொஞ்சம் சுமூகமாக இருந்திருக்கலாம்

இந்தமுறை தமிழ் புத்தகங்கள் மட்டுமே வாங்குவது என்ற முடிவில் வந்ததால் ஆங்கில புத்தகங்கள் பக்கம் ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை.

திஜா அனைத்தும் தமிழ் பல்கலைகழக நூலகத்தில் படித்தது தான்.
சொந்தமாக வேண்டும் என்று பல நாள் கனவு ..அது இன்று நிறைவேறியது ..

அரங்கம் விட்டு வெளியேறுகையில் "முகம் தேன் குடித்த நரி போல இருக்கு " ன்னு   என சகோதரி மிகவும் கிண்டல் ..என்ன செய்வது நான் நரியாக இல்லாவிட்டாலும் புத்தகங்கள் தேன் தானே ?

நான் வாங்கினது

கடவுளுடன் பிரார்த்தித்தல் ----..மனுஷ்யபுத்திரன்
பிரமிள் கவிதைகள்
பின் நவீனத்துவம் என்றால் என்ன----   எம் ஜி சுரேஷ்
அஞ்சுவண்ணம்  தெரு----  தோப்பில் முகமது மீரான்
ஏழாம் உலகம்------  ஜெயமோகன்
வனம் புகுதல்------  கலாப்ரியா
நா பிச்சமூர்த்தி----  முத்திரை கதைகள்
இருவர்------  அசோகமித்திரன்
இன்று---- அசோகமித்திரன்
விழா மாலைப் பொழுதில்------  அசோகமித்திரன்
ஆர் வி சிறுகதைகள்------ 2 தொகுப்புகள்
ஒரு தேவதையும் இரு பொன்வண்டுகளும் ----காமராஜ் 
கருவேலநிழல் -------பா ராஜாராமன் 
கோவில் மிருகம் ------விநாயகமுருகன்
நீர் கோல வாழ்வை நச்சி ------லாவண்யா (உயிரோடை)
கூர்தலறம் -------TKB காந்தி  
இரவில் கனவில் வானவில் -----ஷங்கர நாராயணன்
கடலோடி ------நரசய்யா
தீர்க்க ரேகைகள் --------நரசய்யா
சாகித்ய அகாடமி தமிழ் சிறுகதைகள் தொகுப்பு
இரண்டு படி------- தகழி சிவசங்கரன் பிள்ளை
செம்மீன் ------தகழி
வானம் வசப்படும் -------பிரபஞ்சன்
மானுடம் வெல்லும் -------பிரபஞ்சன்
தமிழ் சொற்றொடர்  அகராதி (thesaurus)
பிரபஞ்ச பூதங்கள் ------ஷங்கர நாராயணன்
குறுநாவல்கள் தொகுப்பு -------ஷங்கர நாராயணன்
எஸ் ராமகிருஷ்ணனின்
யாமம்
மலைகள் சப்தமிடுவதில்லை
வாசக பர்வம்
நகுலன் வீட்டில் யாருமில்லை
பேசத்தெரிந்த நிழல்கள்
சித்திரங்களின் விசித்திரங்கள்
உறுபசி
பூனைகள் இல்லாத வீடு --------சந்திரா
மற்றும் திஜாவின்
நளபாகம்
மரப்பசு
மனிதாபிமானம்
அடி
உயிர்த்தேன்
அன்பே ஆரமுதே
செம்பருத்தி
அம்மா வந்தாள்
தி ஜா சிறுகதைகள்  இரண்டு தொகுதிகள்

வாங்க நினைத்து வாங்காமல் விட்டது கோணங்கியின் சிறுகதை தொகுப்பு ,பிரபஞ்சனின் சிறுகதை தொகுப்பு (too costly) .

எல்லாம்  வாங்கியாயிற்று .படித்தும் விடுவேன் ..வீட்டில்  வைப்பதற்கு தான் இனி இடமில்லை ..



   

Friday, July 16, 2010

எதோ ஒன்றிற்கு அல்லது எல்லாவற்றிற்கும்

பறக்க ஏலா
பறவைச் சிறகாய்
பதுங்கிச்  சிணுங்கும் மனம்...
எழுதாவொரு  வரி
பாடாதொரு  இசை
பேசாதொரு  சொல்
அணுகாதொரு நட்பு
தழுவாதொரு கை
வாராதொரு செய்தி
வீழாதொரு  மழை
நினைக்காதொரு மனம்
வீசாதொரு காற்று
எழும்பாதொரு மணம்
படிக்காதொரு  பக்கம்
பூக்காதொரு மலர்
என
எதோ ஒன்றிற்கு
காத்திருந்தபடியே .............


 

Monday, July 12, 2010

நான் இப்போ சப் ஜெயில்ல !



மாலா அக்கா எங்க ரொம்ப ப்ரிய தோழி .

முதுகலை படிக்கும் சமயம் விடுதி வாசம் .கொதிக்கும் தேநீரின் வாசம் பிடித்தே மாலைப் பொழுது  ஓடிவிடும்  ..கையில் போதுமான அளவு பணம் இருந்தாலும் செலவு செய்ய பயம் .அக்கா store keeper .நாங்கள் வர,போக திங்கும் மிட்டாய்களுக்கு கணக்கு பார்க்க மாட்டார் .அதனாலேயே ரொம்ப பிடிக்கும் .

என்னவோ அக்காவிற்கும் எங்கள் மேல் ப்ரியம் தான் .பல சமயங்களில் சிறு குன்றில் அமைந்திருந்த எங்கள் கல்லூரியில் இருந்து அவர்களோடு பேசிக்கொண்டே கீழே வந்துவிடுவோம்.
படித்து முடித்த உடனே எங்களுக்கு வேலை .கொஞ்சம் கூட ஓய்வு இல்லாமல் ,கல்லூரி முடிந்து ஊர் வந்து சேர்ந்த மறுநாளிலிருந்து வேலை.

கொடுமை என்னவென்றால் அதுவும் எங்கள் ஊரிலேயே!என்னவோ வாழ்கையை அனுபவிக்காமல் பாரம் சுமக்கிறோம் என்ற மனநிலையில் இருந்த நாங்கள் பட்டமளிப்பு என்ற ஒரு விழா வந்ததும் மகா குஷியோடு கல்லூரிக்கு புறப்பட்டு சென்றோம்.

ஒரு நான்கு பேர் பேருந்தில் ஒன்றாக பயணப்பட்டோம் .நாங்கள் செய்த அலப்பறையை கேட்கவும்  வேண்டுமா ?பேருந்தில் அனைவரும் முறைத்துக்கொண்டே வந்தனர் ...but who cares?

பேருந்து நகரை சமீபிக்கும் முன் ட்ராபிக் ஜாமில் கொஞ்சம்  நிற்க  நேர்ந்தது .அப்போது பார்த்தால் எதிர் திசையில் ஒரு பேருந்தில் மாலா  அக்கா .அவர்களை பார்த்து இங்கிருந்தே நாங்கள் பேச துவங்கினோம் .

ஒரே சிரிப்பும் உற்சாகமும் தான் .பேருந்து கிளம்ப எத்தனித்துக் கொண்டிருந்தது அப்போதுதானா நாங்கள் உரக்க 'அக்கா !இப்போ எங்க இருக்கீங்க' என கேட்க வேண்டும் ?

இருவருடைய பேருந்து புறப்படவும் ,அக்கா "நா இப்போ சப் ஜெயில இருக்கேன்...நீங்களாம்? என கேட்கவும்" சரியாய் இருந்தது ..
(அவர் சப் ஜெயிலில் அலுவலக உதவியாளராய் மாற்றம் பெற்று சென்றிருந்தார் )

அதன் பிறகு பேருந்தில் மக்கள் எங்களை பார்த்த பார்வை இருக்கிறதே !
நாங்கள்  கப் சிப் .
மாலா அக்காவிற்கோ அதற்கு மேல் தர்ம சங்கடம் ஆகி விட்டதாம்

மறு நாள் மாலை நன்றாய் வாங்கி கட்டிக் கொண்டோம் .இருந்தும் இப்போது அக்காவை பார்த்தால் கூட என்னக்கா இப்போ எந்த ஜெயில்ன்னு கேட்கத்  தவறுவதே இல்லை !

Wednesday, July 7, 2010

கரை ஒதுங்கிய ஒரு கப்பல்

 கப்பல் ஒன்று கரை ஒதுங்கியதாய்
ஊரெல்லாம் ஒரே புரளி !
அதனுள் செல்ல கடவுச் சொல்
அதன் பெறுநருக்கு மட்டும் தெரியுமாம் ...
ஊரையே கூட்டி முயல்கிறது அரசு !
என் முறை வருமுன்னே எப்படியாவது அதை மாற்றிவிடு
இல்லையெனில்
எனக்கு மட்டும் தெரிந்த கடவுச் சொல்லான
உன் பெயரை
உலகின் முன் எப்படி உரக்கச் சொல்வேன் நான்?
ப்ளீஸ் டா!

Sunday, July 4, 2010

கல்லாட்டம்

ஜெயந்திக்காவை முதன் முதலில்
பார்க்கும் போது
ஏழாங்கல் ஆடிக்கொண்டிருந்தாள் .
கல்லாடாம எடுக்கிறேனா பார்
என அவள் கல் வீசி ஆடும் போது                         
சேர்ந்தாடும்  ஜிமிக்கி
மேலேழுந்தாடும் இமைகள்
துடித்தாடும் உதடு
காற்றிலாடும் முடி
அதனோடாடும் தாவணி
இதையே பார்த்துகொண்டிருந்ததால்
கல் ஆடியதா இல்லையாவென
பார்க்காமலே விட்டுவிட்டேன் !
ஜெயந்திக்கா பின்
ஜெயந்தியண்ணி ஆகிவிட்டாள்.

Friday, July 2, 2010

வெளிச்சுவர் லவ்

யாரோ ஒருவன்
எதோ நினைவில்
புதிதாய் வெள்ளை அடித்த
வெளிச்சுவரில்
பெரிதாய் "ஐ லவ் யு "
என கிறுக்கி வைத்து விட்டு
போய்விட்டான்
திருப்பி
அதையழித்து வெள்ளை அடிக்கலாமா
என கேட்டுவந்தவனிடம்
'வேண்டாம் அங்கேயாவது
அது  இருந்து விட்டு போகட்டும்'
என ஒரு நடுங்கிய குரல் கேட்டது
வீட்டின் ஓர்  இருட்டறையிலிருந்து ....