Tuesday, January 29, 2008

பாழும் மனம்

உன் நினைவலைகள்
அடித்து அடித்து
மனமெனும் கடல்
பொங்கித்தணியும்!
பாலைவனக் கடலென
உண்மை உரைக்க
சிறுதுளி தேடி
கண்கள் அலையும்
வேண்டா வேண்டாமென
ஒரு மனது கூற
உன் மடி நாடி
உள்ளம் விழையும்
உடைந்த இதயம் தான்
மிச்சமென உணர்ந்தும்
உன் தோள் சாய
பாழும் மனம் ஏங்கும்
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசும்
கல்லான நெஞ்சம்,சொல்
என்றுதான் மாறும்?
வேறொன்றும் நினையாமல்
என் காதல் உணர
பொத்தி பொத்தி வைத்த
பூ அன்று தான் மல்ரும்.
உன் வாழ்க்கையோடை
என் எண்ணப்படகு கொள்ள
ஆண்டாண்டாய் சேமித்த
என் ஆசை தீரும்.

Tuesday, January 15, 2008

ஒரு முறையேனும்!!!

நான் உன்னைக்
கனவில் மட்டும்
கண்டு களிக்கிறேன்
நீ நனவில்
என் அருகில்
இருப்பதறியாமல்!
என் கனவினைக்
கலைக்க மனமின்றி
நீ கடந்து மறைகிறாய்
மேகமாக......
நீ நனவாய் வந்ததை
கனவென எண்ணி
களிக்கிறது மனம்
கனவோ நனவோ
ஒரு முறையேனும்
கொஞ்சம் வந்து செல்........
ந்னவாகும் கனவு
நான் காண நாளும்.

Friday, January 11, 2008

பொங்கல்

வெறுப்பு
வேதனை
அழுகை
ஆர்ப்பாட்டம்
அனத்தல்
அருவருப்பு
புறங்கூறுதல்
புண்ணாக்குதல்
இவை அனைத்தும்
பெரு நெருப்பாய் எரியும்
போகியில் இட்டு
சிரிப்பு
சிந்தனை
பகிர்தல்
பக்குவம்
அணைப்பு
ஆனந்தம்
அமைதி
அன்பு
பொறுப்பு
பொறுமை
என.........
மங்கலமாய் மனதில்
பொங்கட்டும்
பொங்கல்

Tuesday, January 8, 2008

அது போதும்

அன்னை அருகில் இல்லை,
அண்ணனோ அமையவில்லை,
தங்கையின் வாழ்வுமுறையில்
தங்கிச்செல்லவும் நேரமில்லை!
தந்தை தன் உலகில்,
தம்பியோ தன் போக்கில்,
தானாய் அமைந்த
நண்பர்கள்
நிமிட நேர மாயவலை!
இதில் எப்படி நான்
எங்கிருந்தோ வந்த நீ மட்டும்
என் உணர்வும் உயிரும்
தொட வேண்டுமென நினைத்து
மருகி மருகி உடைதல் நியாயம்?
கண்ணீர் துடைக்க
ஒற்றை விரல் நீள வேண்டாம்.........
எதிர்பார்ப்பு கொல்லும் மருந்து
எங்கேயாவது இருந்தால்
மட்டும் சொல்! போதும்!