Tuesday, August 6, 2013

பேராசைதான்





ஒரு குழந்தையின் முதலடி
கவனம் போலோ
மழைக்காலத்தின் முதற்துளியின்
தண்மை போலோ
மொட்டவிழும் மலரின்
முதல் மணம் போலோ
கடல் காணும் ஒரு யானைக் குட்டியின்
ஆச்சரியத்தோடோ
தன் சிசு முதல் கையேந்தும்
தகப்பன் போலோ

நூல் கண்டு பிரித்தாடும் பூனையின்
உற்சாகத்தோடோ
முதல் மதுவருந்தும் ஒருவனின்
தயக்கத்தோடோ
சுழித்தோடும் ஆற்றிலிறங்கும்
படபடப்போடோ
முதல் நீச்சல் கற்றுணர்ந்த
சிறுவைப் போலோ
உண்டு மகிழ்ந்து கண்ணயறும்
த்ருப்தியோடோ
என்னைக் கொண்டாடு
என்றெல்லாம்
நான் கேட்கவில்லை!

என்னை நானாகப் பாரேன்
ஒரு முறை

அதற்காக
பேராசைக்காரி என்று மட்டும்
என்னைக் கூறிவிடாதே!

Tuesday, July 23, 2013

கடனாற்றல்

சாப்பிட்டு,துடைத்து,
மறு நாள் சமையலுக்கு கோலமும் போட்டுவிட்டு,
ஒற்றை விளக்கெறியும் சமையலறையில்,
அணைக்க மறந்த ட்ரான்ஸிஸ்டரின்
தனிமைப் பாடல்களைப் போல்
ஏதோ முணகுது மனம்.

நீர் குடிக்க வந்து
தனக்குப் பிடித்த பாடல் ஒலிக்க
மெய் மறந்து நிற்பது போல்
என் முணுமுணுப்பை ரசிக்கிறாய் நீ.

நீரருந்தியவுடன் பாடல் மறந்து
சென்றுவிடுவாய் என
அந்த ரேடியோவைப் போல்
எனக்கும் தெரிந்து தான் இருக்கிறது.
அணைக்கும் வரை ஆற்றுவது தானே கடன்!

Monday, July 22, 2013

முத்தப் புன்னகை

எதையும் எடுத்துக் கொள் என
கைதூக்கி சரணடைந்து விட்டாய்
 

ஆனால் உன் புன்னகையைத் தவிர
வேறு ஏதும் வேண்டுமாயிருக்கவில்லை

உனக்குத் தெரியாமல் ஒரு சிறுசுளை புன்னகையை என் கைக்குட்டையில் திருடிக் கொண்டு வந்து விட்டேன்.

சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும் என மேனியில் இளைப்பாற விட்டது ஏனோ தவறாகிப் போனது

என் உதடடைந்து ஒரு முத்தம் பறித்து என்னை கிச்சுகிச்சு மூட்டத் தொடங்கி

உடலெங்கும் புன்னகை மலர தொடங்கிவிட்டது.

போதும்!


உன்னுடையதை நீயே வைத்துக் கொள்

இல்லை உடல்மலர்ந்தவைகளையாவது உடனே கொய்து விடு

சாந்தியடையட்டும் நான்

Tuesday, June 11, 2013

மரங்கீழ் மிழற்றல்



உதிர் மலர் மிதிக்க
அஞ்சு மனம்
காமத்தீயில் காற்றென ஆடும்

எரி தழலென தகிக்கும்
ஆடை கிழித்து
பெருமழை சேற்றில் வீழும் .

அடி மரம் கொய்யும்
பேர் மூச்சு
அடங்காதலை  பாய்ந்து கொல்லும்.

சீறி எழும் உள்மூச்சு
ஓர்  உன்மத்த
நிலை நோக்கித் தள்ளும்.

இலை  அடர்ந்த மரங்கீழ்
ஓருரு  மட்டும்
அவ்வப்போது  மிழற்றி மாயும்

புத்தம் சரணம் கச்சாமி !

Monday, June 10, 2013

புத்தனாதல்


நண்ப!
கையில் ஒரு கோப்பையை
திணித்து விட்டு
புத்தனாகு  என்றபடி
மாயமாகிப் போனாய் நீ ,
கோப்பை ததும்பி
மது சிதற
பரவுமிடமெல்லாம்
புத்தன் சிரிக்கத் துவங்கினான்
அப்போது அவனைக் கொல்வது
அத்துணை இலகுவாய் இல்லை
புத்தனைக் கொல்லுதல்
அல்லது கோப்பையை
இடம் மாற்றுதல்
எது ஒன்றை செய்தால்
புத்தனாவேன்
என்றோசித்தபடி
சுட்டு விரல் மதுவை
சுவைக்கத் துவங்கினேன்
உடைந்தது கோப்பை !