Tuesday, March 17, 2020

சகா 13

என் நினைவு வரும்போதெல்லாம்
கடல் மேல் கல்லெறியாதே
அலைகள் காதல் இசைக்கின்றன!

என்னைப் போல்
வானோக்கி கண்ணீர் வீசு
நட்சத்திரங்களாகட்டுமவை.

பின் இரவில்
ஒலியிலாது சத்தமிடு
நாமறிந்த science
கொண்டு சேர்க்கும் அதை
திரைப்படம் போல்
என்றெள்ளாதே
என் இறுதி மூச்சில்
என் இருகைகள் பற்றிச் சொல்
என் கண் முத்து.

வா!
கடை நாட்களிலாவது
பொய் தள்ளிச்
சாவோம்.

சகா 12

கொன்றும் தின்றும் விடுகிறது
ஒரே ஒரு வார்த்தை.
இந்த நாளை ஆக்கியதும்
இவ்விரவை நீட்டிப்பதும்
ஒரே வார்த்தை.
கொலை செய்யும் கருவியை எய்து
பின் கண்மூடி விட்டால்
,நானென்ன செய்ய?
வேறெங்கு போக?.
மாயாது மாய்ந்து
அச் சொல்
தின்ன விழைகிறேன்.
அச்சம் நீக்கடா நீக்கு.

சகா 11


அந்தஒற்றைக்
காகக் கரைதலின்
ஊடே உன்
காதலை உணர்த்தியிருக்க
வேண்டாம்
பிச்சிப்பூ மலரும்
அந்நான்கு மணி
வெயிலில்
ஆண்டாளாய் ஆனேன்
என்பதை அந்தத் தோளமர்ந்த
காகம் தவிர யாரறியக் கூடும்?
இனி
குயில் பாடும் நேரம் கேட்டு
காதல் பேசு
கிளிக்கெல்லாம் ஆசையில்லை
எனக்கு.

சகா 10


மழைக்குளிரில்
நடுங்கிய படி
அமர்த்தலாய் நோக்கும்
அக்காகத்தை இப்பொழுது நடந்து
கடக்க வேண்டும்.
மூன்று மணி வெயிலில்
என் வயிறதிர குரல் எழுப்பும்
அதன் அலகுகளோ
ஒட்டி மூடிகொண்டிருக்கின்றன.
இது போன்ற வேளைகளில்
மழைகூட வெறுக்கப்படுமொன்றாய் மாறிவிடுகிறது.
ஏனெனில்
ஒரு துளி பட்டுச்சிலிர்த்துக்
ஒலிக்கும் அக்காகக்குரல்
அச்சசல்
உன் உச்சக்கூவலைப்போலவே
கேட்கிறது
சொல்!எதாவது சொல்.
ஆனால் அது நீதான் என்று மட்டும்
கூறிவிடாதே!

சகா 9


பட்டாம்பூச்சிகள் சதா அலையும்
வனமொன்றை கண்டிருக்கிறாயா?
அவை நம் மனம்
அவை நம்மாசை
அவை நம் பதற்றம்
அவை நம் வயிறேரத் துடிக்கும் பரவசம்
சகா
அவ்வனத்தில் நிற்கிறோம் காண்.
வா
அவை மின்மினிப் பூச்சிகளாகுமுன்
நம் மடி ஏந்திக் கொள்வோம்
ஒரு முறையேனும் வாழட்டுமவை.

சகா 8


உன் இருண்ட நாட்களின்
தனிமைப் பாதையை
ஒளியேற்ற
ஒரு வார்த்தையை அனுப்பி வைக்கிறேன்
உன் இமைகளில் அதைப்
பற்றிக்கொண்டிரு.
என்னிருள் அகற்றும்
சாதனமும் அதுவே.
ஆம்!
இப்படித்தான்
வார்த்தை ஒளியால்
தனிமையகற்ற
கற்க வேண்டும்.
நானற்ற நீயும்
நீயற்ற நானும்.!

சகா 7


நிலா உடனோடி வரும்
ராஜா இசையை
உண்டு திளைக்கும்
பயணக் கனாவொன்று கண்டேன்.
அவ்வப்போது சிலிர்த்தது
மனதுடலும்.
என் கைத்துளாவலில்
சிக்காமல் போகும் உன் கை காணாது
பதறி எழுகிறேன் நான்
பின்னும் துளாவும் கைகளுக்கு
சிக்கியதா இல்லையா உன் கை
என்பது தெரியாமலே போகட்டும்
அதுவும் ஒரு கனாவென.

சகா 6


வயதாகிவிடும் என்றதுன் அச்சம்
வீணாகிப் போனதால்
ஊசித் தழும்புகள் நிறை
வயிறு தடவாது
போனதுன்கை
வயசி நரை கண்டு நிற்க
உன்னைச் சேரா வயோதிகம்
என் மேல் மட்டும் குவிகிறது.
திரை படர் கண்
நீரற்று காய்கிறது
கிறுக்கி கிறுக்கி கிறுக்கியாகும்
இவளை நோக்கி
உன் பற்களைக் காட்டாதே
நாளையும் வரும் காண்
இப்புலம்பல்
சேர்த்து வை உன் புன்சிரியை
கடனாகக் கூட
வேண்டலாமதை.

ஆம்

சிறுமீனுள்
புகுந்த
திமிங்கலமென
சிறு கவிதைகள்
பெரும் பொருள்
தந்து விடுகின்றன
சில சமயங்களில்.

---------------------------

இம் மனிதத் தோலுக்குள்
பாதி போரும்
பாதி அமைதியுமாய்
சபிக்கப்(வாழ்த்தப்) பட்டிருக்கிறேன்

அம்மை



சிறிது கன்னம் பருத்து
தன் அம்மை போல் தோற்றமிடும்
பெரியபாளையத்தவளையும்
வெக்காளித் தாயையும்
பூஜையறையில் மாட்டிவைத்து
மா...மா....வென்று
கொஞ்சுகிறாள்,கோபப்படுகிறாள் அவள்.
காலைகண் விழித்து உடன் காண
வாகாய் மாட்டிய
அம்மாவின் புகைப்படத்திலிருந்து
புன்சிரியுடன் கீழே விழுகிறது
மாலையிலிருந்து ஒரு மல்லிகைப்பூ.

பனிக்குல்லா



மென் பனி விழும் மாலையில்
குப்பை வண்டியை
தள்ளிக்கொண்டு வருகிறாள்
பிரசவ விடுப்பு முடிந்து அவள்
அருகிலேயே மூன்று மாத சிசுவை
ஏந்தியபடி அவள் கணவன்.
இனிப்பக வாசலின் குப்பையை
வாரும் அவள்
அபூர்வமாய் எறியப்பட்ட
நெகிழிப்பை ஒன்றை
ஆவலுடன் தேர்ந்தெடுத்து
சிசுவின் தலைக்கு
குல்லாவாக்குகிறாள்
உறக்கத்தில் சிரிக்கிறது மதலை
தாளாது துளிர்க்கிறது
கண்ணில் நீர்.

சகா 5

சகா
------------
பிரதிமை எனத் தெரிய ஒரு நொடி தான்
கூறிவிடத் தான் ஒரு சகாப்தம்.
அந் நொடி பற்றி
உயிர்த்தீ ஊழித்தீ வெம்புகிறது
கடந்து வந்த பாலங்களை
எரித்து விட்டோம்
முன் நோக்கவும் முடியாமல்
பின் செல்ல வழியில்லாமல்
இருக்கும் இருப்பை
வாழ்க்கை என்று கூறும்
உலகத்திற்கு
ஓரு smiley ஐ
அனுப்புவதைத் தவிர
வேறொன்றும் தெரியவில்லை
என் பிம்பமே சொல்
நீ என்னக் கூறப்போகிறாய்
நம்மை மறந்த வாழ்க்கையிடம்?
அதற்கு பதில் கூற
உன்னிடமும் கைவசம்
Smiley இருக்கும் தானே?

சகா 3

சகா
====
உனக்குத் தெரியும் தானே
ஜீவனற்றவை
உயிரோட்டத்தில் கலந்து விட்டால்
அஜீவன் ஜீவனடையுமென
சென்றும். உள்ள ஓரு கால வெள்ளம் தான்
உதிர்ந்த இம்மனச்சிறகை
படபடக்கச் செய்கிறது
பார்! காணும் அனைவரும்
சிறகணைக்க பறக்கின்றனர்.
கைகிட்டும் போதல்லவா தெரியும்
அது சவச்சிறகென.
உனக்கென்ன?
எப்பொழுதுமே
VOYEUR தானே நீ
சிறிது நேரம்
அப்புன்னகையை மறைத்துக் கொள்ளேன்
கொஞ்சம்

சகா 2

சகா
====
கூறினால் நிந்தனை
கேலி முகச்சுழிப்பு வரத்தான் போகிறது.
ஓரு இருபது ஆண்டுகள்
மனதை பின்செலுத்தி
பட்டாம் பூச்சி பறக்க வைக்கும்
வித்தை உன் இரு வார்த்தைகளில்
இருப்பதறிவாயா?
வயசியாய் என்று தான் உணர்வது?
இனி மறந்தும் கூட உச்சரித்து விடாதே
பார்ப்போம் என்று.
இயலாதவைகள் இயலாதவைகளாகவே
மரித்து விடட்டும் இச் ஜென்மத்தில்.
நம்பிக்கையை மட்டும் உயிர்பித்து விடாதே!

சகா 1

சகா
தார்க் கருமை கீறி
தூரத்து சிவப்பொன்றை
தொடர்கிறது என் பயணம்.
இசை தேவன் நரம்புகளில்
ஒரு புள்ளைஉலவச் செய்கிறான்
ஆயிரம் நட்ச்த்திரங்களை
மழையென அனுப்பி
ஆசிர்வதிக்கிறது வான்.
இதை மட்டும் நான் கேட்கவா?
உன் உள்ளங்கைக் கதகதப்பை
கொஞ்சம் எனக்குக் கடத்திவிடேன்
உயிர் அதில் சாய்த்து
சிறிது உறங்கிக் கொள்கிறேன்

Wednesday, December 4, 2019

பிணா கவிதைநூல் விமர்சனம் ----சரவணன் மாணிக்கவாசகம் 

பிணா- பத்மஜா நாராயணன்:
ஆசிரியர் குறிப்பு:
காரைக்காலில் பிறந்தவர். சென்னையில் வங்கியில் வேலை பார்க்கிறார். மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். நான் மலாலா, வெண்ணிற இரவுகள், தடங்கள், நெருப்பிதழ்கள், ஷ் இன் ஒலி முதலியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள்.
பிணா:
1.
ஒரு கோட்டை விதை நெல் போல் எனதன்பை சேகரம் செய்து வைத்திருக்கிறேன்
ஒரு துளி மழையும்
அதை ஏற்கும் நிலமும்
மீபிறப்பிலேயே காணட்டும்
விதையன்பு
உறங்கும் வரம்
யாசிக்கிறதிப்போது
தா!
2. கண்ணாடி வழி கையேந்தியவளின் கண்கள் பட்டுத் தெறிக்கும்
ஒற்றைக் கதிரொளி
காண மறுப்பவர்கள் கைகளில்
ஃ பேஸ் புக் உரையாடல்கள்
கசியாத இதயத்தின் பின்புறம் அழும் குழந்தை கையால் காலாழாக்கு
தானமீந்த தந்தைப் படிமம்
பட்டே படாது பழுக்காது
அழுகிச் சொட்டும்
தவளை தோல் போர்த்திய
தக்காளி மனது.
3. சிறு கோப்பையில் சிவந்த வைனை ஊற்றுகிறாய்
மெழுகுவர்த்தி ஒளியில்
ரத்னசபாபதியாய் ஜொலிக்கிறது கவுன்களுக்கிடையே ஆறு கெஜம்
கூர்ந்து நோக்கப்படுகிறது.
நோக்கும் கண்ணில்
மது பேராசையாய் வழிகிறது
என் கை பற்றுகிறாய் நீ
மதுவன்றி உன் கண்ணில்
வழிகிறது பேரன்பு
காண மறுத்து சிவந்த திரவம் பருகுகிறேன் சபாபதி உன்னிடம் தாவுகிறான்
சிவப்பில் மூழ்குகிறேன் என்னைக் கொன்று அருந்துகிறாய் என் ரத்னா நீ!
4. அதென்னவோ தெரியவில்லை
இன்று நல்ல வெயிலும்
கூடவே சிலு சிலு மழையும். வேப்பிலைகளின்
ஊடே பாயும் கிரணங்கள்
என் முகத்தை தடவித் தடவிச்செல்கின்றன. மேலுதடு வளைந்திருக்கும்
ஆணின் முத்தம் அமிர்தமாமே?
உன் உதடு என்ன வடிவென்று புகைப்படத்தை எடுத்து
உற்று உற்று நோக்குகிறேன்.
உனக்குத் தெரியாதா?
முத்தச் சுவையாவும்
போன ஜென்மமே தீர்ந்துவிட்டன
போகட்டும்
இதோ தழுவும் கிரணங்களுக்கு வாகாய் முகத்தை திருப்பி அமர்கிறேன்
அவற்றின் உதடுகள்
வளைந்தெல்லாம் இருக்கத் தேவையில்லைதான்
கூடவே மேலே தெளிக்கின்றன
சூடான மழைத்துளிகளும்
என் கண்வழி உப்புநீருக்குப் போட்டியாய்
என் சிந்தனைகள் :
அகமனதின் கூவுதல்களை வார்த்தையில் வடிக்கும் யத்தனங்கள் பத்மஜா நாராயணின் கவிதைகள்.
வார்த்தைகள் வாதையை வெல்வதுமில்லை, கொல்வதுமில்லை. நாம் தான் கவிதை மூலம் எப்படியேனும் கடத்திவிட நினைக்கின்றோம். மரணம் கருப்பொருளாய் பல கவிதைகள். அம்மாவின் கை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மஞ்சள் முடிச்சு தூக்கி எறியப்படுகையில், படிப்பதை நிறுத்தி நிமிர்ந்து தெருவைப் பார்ப்பதைத் தவிர்க்க முடிவதில்லை. ஒருவருக்கு நெருக்கமாய் இருக்கும் கவிதைகள் அவர் உணர்வை புரிந்து கொள்ளாவிட்டால் அடுத்தவருக்கு நெருக்கமாக ஆகப் போவதில்லை. இறந்தவனின் பிறந்தநாள், கிரணமுத்தம், நம்பாதே மற்ற கவிதைகளை விட என்னளவில் நெருங்கியவை.
உறங்கும் வரம் நினைக்கையில் கிடைப்பதில்லையே.
காலாலாக்கு தானத்தில் கவிதையின் அழகியல் வடிகிறது
யாகத்திற்கு வந்து யுகங்கள் பலகடந்ததால் புதுயாகம் காணவந்த புது ரத்னசபாபதி.
என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.
பிரதிக்கு :
நவீன விருட்சம் & Amazon.in
முதல்பதிப்பு 2017
விலை ரூ 160 & 49.

தெரிவை  நூல் விமர்சனம் -----சரவணன் மாணிக்கவாசகம்

தெரிவை- பத்மஜா நாராயணன்:
ஆசிரியர் குறிப்பு:
காரைக்காலில் பிறந்தவர். சென்னையில் வங்கியில் வேலை பார்க்கிறார். மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். நான் மலாலா, வெண்ணிற இரவுகள், தடங்கள், நெருப்பிதழ்கள், ஷ் இன் ஒலி முதலியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள்.
தெரிவை:
1. சாப்பிட்டு, துடைத்து மறுநாள் சமையலுக்கு கோலமும் போட்டுவிட்டு
ஒற்றை விளக்கெறியும் சமையலறையில்
அணைக்க மறந்த டிரான்ஸிஸ்டரின்
தனிமைப்பாடல்களைப் போல்
ஏதோ முணகுது மனம்
நீர் குடிக்க வந்து
தனக்குப் பிடித்த பாடல் ஒலிக்க
மெய்மறந்து நிற்பது போல்
என் முணுமுணுப்பை ரசிக்கிறாய் நீ
நீரருந்தியவுடன் பாடல் மறந்து
சென்றுவிடுவாய் நீ என
அந்த ரேடியோவைப் போல்
எனக்கும் தெரிந்து தான் இருக்கிறது
அணைக்கும் வரை ஆற்றுவது தானே கடன்.
2. அதுவாகத்தான் அமைகிறது
அசைந்தழைப்பதில்லை எப்போதும்
இலைகள் கூட அங்கங்கு தான்
பெரிதாக சுகந்தம் கூட பரப்புவதில்லை
எப்போதோ பூக்கும் பூக்கள்
எப்போதாவது தான் காயாகி
விலகாமல் காற்றிலசைகின்றன
வெட்டப்பட்ட கிளைகள் மட்டும்
எப்படியோ உடன் வளர்ந்து விடுகின்றன
ஊழிக்காற்று எத்துணை அசைத்தும்
சிறுசலனம்கூட காண்பதில்லை வேர்கள்
பூவும் மணமும் புகழும் சுற்றுதலும்
இல்லாதிருப்பினும்
விதிகூட இதை விலக்கி வைத்திருப்பினும்
இந்த மரத்தில் மட்டுமே கிளிகள் குடியேறுகின்றன
கூவிக்கூவிக் களிக்கின்றன
என்ன!!!
உயரப் பறக்கும் பருந்திற்கு மட்டும்
இதனகம் கண்ணில் படுவதில்லை.
ஹுயு ஷீ சீனக்கவிதைகள்:(மொழிபெயர்ப்பு)
கனவும் கவிதையும்
சாதாரண அனுபவங்கள் தாம் அனைத்தும்
பிம்பங்கள் கூட சாதாரணவை தாம்
மிகவும் எதேச்சையாய் அவை
கனவுகளில் மலர்கின்றன
பின் ஒரு புதுவுரு அடைகின்றன
சாதாரண உணர்வுகள் தாம் அனைத்தும்
வார்த்தைகள் கூட சாதாரணவை தாம்
எதேச்சையாய் அவை கவிஞனை அடைந்து
முடிவுறா புதுக்கவிதையாய் மலர்கின்றன
மதுவின் வீரியம் அது தரும் போதையில்
காதலின் பலம் அதன் தோல்வியில்
என் கவிதையை நீ எழுதமுடியாதது போல
உன் கனவை நான் காண இயலாது
என் சிந்தனைகள் :
தெரிவை என்ற வயதுக்கேற்ற உணர்ச்சி பிரவாகம். காமத்தை சொல்வதிலும் இனம்புரியா சோகம் கலந்த பத்மஜாவின் கவிதைகள். கவிதை மொழி இவருக்கு வெகு இயல்பாய் வருவதால் கவிதைகள் மொழிபெயர்ப்பும் இயல்பாய் அமைந்திருக்கிறது. முத்தமலை என்ற ஒரு கவிதையில் மட்டும் மிஞ்சுதல் மற்றவை எல்லாம் தணிந்த குரலில் தாபத்தைச் சொல்கிறது. முதல் கவிதை தெளிக்கும் உணர்ச்சிகள் ஏராளம். தண்ணீர் குடிக்கவந்து முணுமுணுப்பைக் கேட்டுப் போவதல்ல. இரண்டாம் கவிதையில் விதி விலக்கி வைப்பதை கவனமாகப் பாருங்கள். சீனகவிதை சொல்வது போல் யாருடைய கனவையும் யாரும் காணமுடியாது, அது போல கவிதையில் இருந்து எடுக்கும் மனம் வேண்டும். பெரும்பாலும் எளிமையான மொழி, மீண்டும் மீண்டும் ஒரு கருப்பொருளை வேறுவேறு சூழலில் வைத்து வடிவமைக்கப்பட்ட பத்மஜாவின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. என் வரையில் மொழிபெயர்ப்பை விட சொந்தக்கவிதைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகமாயிருப்பதால் அவையே நெருக்கமாகின்றன.
பிரதிக்கு :
டிஸ்கவரி புக் பேலஸ்
முதல்பதிப்பு டிசம்பர் 2013
விலை ரூ 70.

Sunday, August 25, 2019

ஆட்டிஸம்-----பேச ஆரம்பித்தல் (autism poem #1


ஆட்டிஸம்-----பேச ஆரம்பித்தல்
============================
டையானா அன்ஃபிமியாடி (Diana Anphimiadi )
ஆங்கிலத்தில் ஜீன் ஸ்பார்க்லாண்ட்
தமிழில் பத்மஜா நாராயணன்.

கம்பிகளில் தொத்திக் கொண்டிருந்த பாடல்கள்
ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கின
கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு
நான் யார் என்பதற்கான
ஒரு வார்த்தையின் பிறப்பை
செவிமடுக்க ஆரம்பித்தேன்.
பளீச்சென்ற கிளியைப் பிடிக்கத்
திறந்தே இருக்கும் கூண்டுகளைப்போல
என் கண்களைவைத்துக் கொண்டு
எனக்குள் இருக்கும் உலகைப் பிடிக்க
நடை பயில்கிறேன்
மூன்றடிகள் முன்னோக்கி
மூன்றடிகள் பின்னோக்கி
திரும்பத் திரும்ப நடக்கிறேன்.
என் பாதையினால் உலகைச் சுற்ற விழைகிறேன்.
சுற்றிச்சுற்றி வருகிறேன்
எடையற்று மேலெழும்பி கீழே விழுகிறேன்.
அம்மாவின் திரைச்சீலைகளைப் போல்
மேகங்கள் ஈரமாகவும் மென்மையாகவும் உள்ளன.
என் வாயில் ஒரு புளிப்புச் சுவை உள்ளது

படுக்கைக்கு அருகிருக்கும் ஒரு விளக்கு போல நிற்கிறேன்
இதமான கைகளின் வன்முறையான தொடுதலின் போதோ
கூர்மையாக நோக்கும் அன்பான பார்வையினாலோ
ஒரு துப்பாக்கி பின்நகர்வது போல் பின்னிடுகிறேன்
அதிர்ச்சியடைந்த காகங்களைப் போல்
வார்த்தைகள் வானத்தில் கிரீச்சிடுகின்றன
அமைதி!போதும்
வார்த்தை ஒன்றை கயிற்றால் சுருக்கிட்டு
என் தலையின் மீதும்
தலைக்குள்ளும் பிடித்து இழுக்கிறேன்
மொத்த வானமும் விழுகிறது
தொலைபேசி கம்பங்களில்
காக்கைகளின் இசையை எழுதத் தொடங்குகிறேன்
சாதாரண வார்த்தைகள் என்
வாயுனுள் கிரீச்சிடுகிறன
அவற்றுடன் இயைந்து
துணைநின்று
அவற்றை சிக்கலாக்குகிறேன்!

(Diana Anphimiadi is a poet, publicist, linguist and teacher. Currently a doctoral student at the linguistic institute at the Tbilisi Javahkishvili University, Diana has published four collections of poetry, Shokoladi(Chocolate 2008), Konspecturi Mitologia(Resumé of Mythology, 2009), Alhlokhedvis Traektoria (Trajectory of the Short-Sighted, 2012 and Kulinaria (Personal Cuisine, 2013.)

Saturday, February 9, 2019

கவிதை நூல் "பிணாவைக்"குறித்து திரு ஷைலபதி

 அகச்சித்திரங்களாக விரியும் பெண் மொழி – பத்மஜா நாராயணனின் ‘பிணா’ வை முன்வைத்து

பத்மஜாவின் கவிதைகளில் ஒலிக்கும் குரல் நமக்கு அந்நியமான பெண் குரல் இல்லை. அணுக்கமும் நெருக்கமுமான பெண் குரல். அன்னையாய், சகோதரியாய், மனைவியாய், தோழியாய், மகளாய் நம்மைச் சுற்றித் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் பெண் குரல். ஒருவகையில் பெண்ணும் ஆணும் நேசிக்கும் பெண்குரல். பெண்ணின் இத்தகைய குரலை வாழ்வில் கேட்கத் தவறியிருந்தால் அவற்றை நமக்காய் கவிதை செய்திருக்கிறார் 





வாழ்வின் தருணங்களில் இருந்து கவிதைகள் முளைவிடுகின்றன. கடக்கவியலாத ஒரு சிறுகணம், தவிக்கவிடும் அந்த ஒரு நொடி படைப்பாளனைக் காலத்தின் தீராத வெளியில் வீசியெறிந்து விடுகிறது. அதிலிருந்து சகஜமாய் மீண்டெழமுடியாமல் தான் அவன் வார்த்தைகளிடம் சரணடைகிறான். வாழ்வினை அதன் நிதர்சனத்தைக்கண்டு அதைச் சொற்களில் வழியச்செய்து அனுபவப்பகிர்வாக மாற்றுகிறது ஒருவகை என்றால் நேற்றும் இன்றும் நடந்தவற்றை, தொல்குடியின் ஒரு மூதாதையின் இடுக்கிய கண்களின் வழியாகவோ அல்லது மூச்சுவிடமுடிகிற அல்லது அசைவற்று வேடிக்கைபார்க்கிற, தொட்டால் மட்டுமே தெரிந்துகொள்கிற ஓர் பிரபஞ்ச உயிரியாகிக் கண்டு தெளிய முயன்று வார்த்தைகள் மெல்ல மெல்லக் கூடி ஓர் கயிற்றினைப் போல் திரட்டி அவனைக் காலத்தின் பெருவெளியில் இருந்து மிதந்துவந்து நிகழ்காலத்தில் வீழ்வது மறுவகை. அப்படி இருவகையாகவும் திரண்டிருக்கும் தொகுப்புதான் பத்மஜாவின் ‘பிணா’ 
ஒரு கவிதை நூலை வாசித்தல் என்பது கைவிடமுடியாத ஒரு அவஸ்தையாகவும் அதே வேளையில் இதுவரை பிரவேசித்தும் அறிந்தும் இராத ஒரு புது உலகைக் காணும் பேராவல் உணர்வாகவும் இருக்கக்கூடும். அப்படியான ஒரு அனுபவத்தைத் தான் பிணா கவிதைத் தொகுப்பு அளிக்கிறது. 72 பக்கங்களில் எண்ணி 41 கவிதைகள். இத்தனை சிறியதொரு தொகுப்பு வாசிப்பில் விரிக்கும் உலகம் மீப்பெரிது.

இந்தத் தொகுப்பின் கவிதை இருவிதமான குரல்களால் நிரம்பியுள்ளது. ஒன்று ஆதித்தாயின் நீட்சியாகத் தன்னை அடையாளம் காணும் ஓர் உலகப்பெண். மற்றொன்று மிகவும் எளிமையான ஆன்மாவாகத் தன் உறவுகளின் அன்பினால், காதலினால், துரோகத்தினால், பிரிவினால் வாடும் ஒரு பெண். முதலாமவள் கம்பீரமான ஓர் பிடியைப் போல உலா வருபவள் என்றாள் இரண்டாமவள் நடுங்கும் அல்லது அலைபாயும் விழிகளோடும் பதற்றத்தோடும் மேய்ச்சல் செய்பவள். இரண்டும் அதனதன் விதத்தில் அழகுதான் என்றபோதும் மானின் மருட்சி அனுபவங்கள் கொஞ்சம் கலக்கமூட்டுவதாகவே அமைகின்றன.

பத்மஜாவின் கவிதைகள் சின்னச் சின்ன காட்சிகளை ஓர் ஓவியம் போல உருவாக்கி அதன் வர்ணம் போன்ற வார்த்தைகளால் நிரம்பியவை. எதையும் அவர் காட்சிப்படுத்தவே முனைகிறார்.

 “என் நரம்புகளூடே
 ஒரு பறவை எப்படிப் பறந்து சென்றது?”

என்கிற வரிகள் தீட்டும் நவீன ஓவியத் தன்மை கவிதைப் பொருள் சார்ந்து உணர்தலைக் கடந்து காட்சிரூபமான ஓர் நிலையை வாசகனுக்குள் பதியவிடுகிறது. அதுதரும் கிளர்ச்சி ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை வாசகனுக்குச் சிருஷ்டிக்கப் போதுமானதாக இருக்கிறது. நவீனக் கவிதையின் தன்மையும் இது தான் என்று தோன்றுகிறது. இந்தத் தொகுப்பில் இத்தகைய வரிகள் அநேகம்.

இப்படியான எளியச் சிறு சிறு காட்சிகள் மாத்திரமல்ல, சங்கக் கவிதைகளைப் போன்ற வலிமையான காட்சிகளைக் கொண்ட கவிதைகளும் தொகுப்பில் உள்ளன. தொகுப்பின் ‘நீர்ப்பெண்’ கவிதை முன்னமே சொன்னதைப் போல தன்னை ஆதித் தாயின் நீட்சியாகக் காண்கிற ஓர் பெண்குரல். ஒரு பெரும் பாலை. பாலை என்பது தமிழ் நிலத்தில் தனித்த நிலப்பகுப்பு அன்று. குறிஞ்சியும் முல்லையும் கோடையில் திரிந்த நிலமே பாலை. அப்பாலை நிலத்தில் கடும் வறட்சி. நீரின் முகத்துவாரங்கள் எல்லாம் தூர்த்துப்போயின. புதிய ஊற்றுகளைக் கண்டடைய வேண்டியதிருக்கிறது. அவள் நீர்வளம் கண்டறியும் பெண். தாய்த் தலைமைச் சமூகத்தில் தாய் தானே எல்லாம். அவள் தன்னைக் கார்முகிலின் பெண் என்று சொல்லிக்கொள்கிறாள். துடி முழங்க மக்கள் பின் தொடர அவள் அப்பாலை நிலத்தைக் கடக்கிறாள். கவிதையின் களம் இதுதான்.

கட்டாந்தரையில் நீர்வளம் கண்டறியும் // கார்முகிலின் பெண் நான்.// துடி முழங்க பாலையைக் கடக்க// படையுடன் நடக்கிறேன் //மயிர்க்காலெல்லாம் பரபரவென // நீர்ப்பசை மணக்கும் மண்வாயிட்டு சுட்டுவேன்// நடுப்பலை கடங்கும் படை!//தரை நிழல் நீள தன் உடல் தரும்அடிமை மேல்// என் கை பற்றி? நடக்கிறான் அரசன்.//ஒட்டகத்திமில் பறித்து//       உணவுண்டு சாய்கிறார் மற்றோர்// பெற்ற குழந்தை பறிகொடுத்து // நீரற்ற வேளை தன் முலைப்பால்// உறியத் தரும் ஆதிப்பெண்குடி//இதன் நடுவே நெஞ்சீரங்காணாது// துவண்டுகிடக்கு? மென் மந்திரக்க்கோல்.//கட்டாந்தரையிலும்  நீர்வளம் காணும்//கார்முகிலின் பெண் நான் // அன்பீரங்காணாது // சோர்ந்துவெளுக்கும் கார்முகிலின் பெண்ணும் நான்!

பாலை நிலத்தைக் கடக்கையில் நீர் கிடைக்காமல் போகும் அபாயம் உண்டு. பிறந்த குழந்தையைப் பறிகொடுத்த பெண்ணை உடனழைத்துச்செல்வது வழக்கம். நீர் இன்றி வாடும் சமயத்தில் அவள் முலைப் பால் உண்டு உயிருய்யவேண்டிய கொடும் நிலை வரலாம். அத்தகு கொடிய பாலை நிலத்தின் காட்சியைக் இக்கவிதை விரிக்கிறது. உண்மையில் இக்கவிதை பேசுவது பாலை நிலத்துக் காட்சியைத் தானா? வாழ்வின் வெம்மையில் துவண்டுவிடாமல் அன்பின் ஈரத்தைக் காணப் போராடுகிற ஒரு பெண்ணின் குரல் அதனுள் ஒலிக்கிறது. தன்னை முற்றாகத் தன் தலைவனுக்குத் தந்து தன்னை அடிமையாக்கிக் கொண்டாவது வாழ்வில் அன்பின் ஈரத்தைக் காணவிளைகிற பெண் ஒருத்தி இக்கவிதையில் இருக்கிறாள். இது போலப் பல பல வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கும் கவிதை இது.

தன்னைப் பிரபஞ்சப் பெண்ணாக அடையாளம் காணுகிற கவிதைகளில் பத்மஜா சாதிக்கவிரும்புவது பெண்ணை முதன்மையைக் குரலாய்க் கோரும் புரட்சிக்குரலாய் அல்லாமல் சக பெண்ணுக்காய் இறங்குகிற அன்புசெய்கிற அவளை அணைத்துக்கொள்கிற அழைப்பாகவே தோன்றுகிறது. அது ஒரு மென்குரல். பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் இருந்து இனப்பெருக்கம் செய்வதன் மூலம் தன் உயிரைப் பணையம் வைக்கும் ஒரு பெண்ணினம் அதை இன்னும் பேரன்பின் கருணையோடு தொடர்கிறது. ஒரு மகவை ஈன்று பேருவகை எய்தும் அவள், மகப்பேரில் இறந்துபோன ஒருத்தியை நினைத்து பெருவலி கொள்கிறாள். மீண்டும் மீண்டும் தங்களுக்குத் தாங்களே நிகழ்த்திக்கொண்டு இப்பிரபஞ்சத்தைல் மானுடத்தை வாழவைக்கும் அவர்களின் சிறு விசும்பல் ‘புனரபி ஜனனம்’ கவிதை.

இத்தொகுப்பின் இரண்டாம் குரல் தனிமனுஷியாக உறவுகளோடு கூடியும் கழித்தும் வருந்தியும் அழுதும் வாடும் குரல். இக் கவிதைகளில் பால் சுட்டப்பட்டே எழுதப்பட்டிருந்த போதிலும் பால் பேதம் இல்லாமல் அது வாசகனால் உள்வாங்கப்படும் கட்டிபட்டுப்போன கறுத்த அனுபவங்களை அடையாளம் காணுதல். ‘அலறும் ஆம்புலன்ஸைப் பின் தொடர்தல்’, ‘துக்கம் புணர்தல்’ ‘முடிச்சு’, ‘இறந்தவனின் புகைப்படம்’ ஆகிய கவிதைகள் அப்படியானவை. வலியும், துக்கமும் பிறக்கும் கணங்கள், மனிதர்கள் பால் பேதம் உடைந்து மிக எளிய ஆன்மாக்களாக வாழும் அபூர்வ கணங்கள். அவற்றைக் காணும் யாரும் தமக்குள்ளாக உறைந்து போன அப்படியொரு தருணத்தை மீட்டெடுப்பதும் அக்கணத்தை ஒரு கணம் வாழ்ந்து கடப்பதும் இயல்பானவை. அப்படியான வாசகனின் ஆழ்மனத் தருணங்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் பெற்றன இக்கவிதைகள்.

இறுதி ஊர்வலங்களில் மலர்களை உதிர்த்துக்கொண்டு செல்கிறார்கள். எல்லோருக்கும் அது மலர்களாகத் தெரிகிறது. ஆனால் இறந்தவனோடு தொடர்புடையவர்களுக்கு அது இறந்தவனைப் பற்றிய தீராத நினைவுகள். அதை அந்த இறுதிப் பயணத்தில் உதிர்த்துத் தீர்க்க முயல்கிறார்கள் என்கிறார் பத்மஜா.

\\ இறுதி ஊர்வலத்தில்\\ எடுத்துச் செல்லப்படுபவனைப் பற்றிய\\ நினைவுகள் வழியெங்கும் மலர்களாய்\\ பிய்த்து எறியப்படுகின்றன\\ என்கிற வரிகள் புனரபி ஜனனம் கவிதை போல வாழ்வை வெறுமையில் இருந்து தொடங்குகிற மற்றொரு கவிதையின் வரிகள்.

இத்தொகுப்பில் மிக இன்றியமையாத கவிதைகளாக ‘ஒருவன்(ள்)’, ‘அம்மா’, ‘தேஜாவு (DEJA VU) ஆகிய கவிதைகளைச் சொல்லலாம்.

“என் க்ரோமோசோமின் நெளிவை\\ என் மீசையை அல்ல\\ என் பூ போட்ட சட்டையை வைத்தே\\ கண்டுகொள்கிறாய்\\

“வலி மரக்கவைக்கும்\\ ஊசியின் போதையிலும் \\ அப்பாவின் செருப்போசை\\ மட்டும் உனக்குத் தெரியும்\\

\\ நான் ஒரு நிறுத்தாத முணுமுணுப்பு\\ நான்  அணையாச் சாம்பல் \\ நான் ஒரு கண்ணீரின் போதை\\” ஆகிய வரிகள் வாழ்வின் மீதான புகார்கள் அற்ற அதே வேளை அதன் நிர்பந்தங்களை மெலிதான விமர்சனங்களோடு கடக்கும் கவிதைகளின் வரிகள்.

பத்மஜாவின் கவிதைகளில் ஒலிக்கும் குரல் நமக்கு அந்நியமான பெண் குரல் இல்லை. அணுக்கமும் நெருக்கமுமான பெண் குரல். அன்னையாய், சகோதரியாய், மனைவியாய், தோழியாய், மகளாய் நம்மைச் சுற்றித் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் பெண் குரல். ஒருவகையில் பெண்ணும் ஆணும் நேசிக்கும் பெண்குரல். பெண்ணின் இத்தகைய குரலை வாழ்வில் கேட்கத் தவறியிருந்தால் அவற்றை நமக்காய் கவிதை செய்திருக்கிறார் பத்மஜா. தொடர் இலக்கியச் செயல்பாட்டின் மூலம் தன் இடத்தைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆழப் பதித்திருக்கும் பத்மஜா நாராயணனின் படைப்புவரிசையில் ‘பிணா’ குறிப்பிடத்தக்க ஓர் படைப்பு. அண்மைக் காலங்களில் வெளியான பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளில் ‘பிணா’ மாறுபட்ட மொழியும் கவித்துவமும் கொண்ட முக்கியமான ஆக்கம் என்று சொல்லலாம். சிறப்பான தொகுப்பை வளங்கிய கவிஞருக்கும், நூலினைப் பதிப்பித்த விருட்சத்திற்கும் பாராட்டுகள்.

Saturday, January 19, 2019

MARGAZHI DAY 30
When the girls with faces bright as moon
Reach Lord Madhavan,Lord Kesavan
Who churned the Bengal Sea,
And pray for his blessings
And if all the thirty songs
Seeking the blessings of the Lord
Rendered by Kothai
The loving daughter of Bhatter Piran
Who sports cool garlands_
Are sung religiously
Will sure be blessed by Thirumal -The lotus eyed
And strong shouldered
For ever oh my girl!



வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட-ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்
செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏