Sunday, April 25, 2010

A யும் B யும்



A யும் Bயும் இருந்தன


ஒரு நாள் இருவருக்கும் ஒரே நோய் .


A ஐ அனைவரும் பரிதாபத்துடன் அணுகினர் .


B ஐ பார்க்கக் கூட எவருக்கும் விருப்பமில்லை.


A யின் நோய்க்கு பல திசைகளிலிருந்தும் மருந்து வந்தது .


B கொஞ்சம் கொஞ்சமாய் அழுகிக் கொண்டிருந்தது .மனமும் கூட .


A எது செய்தாலும் எல்லாரும் easy ஆக மன்னித்துவிட்டனர்

B அழுகிப்போவதை தவிர்க்க வெளிச்சத்திற்கு வந்தது

B இப்போது அனைவரின் பார்வையிலும்

B க்கு ரகசியமாய் மருந்து கூறப்பட்டது .கூறியது கூட வெளியில் தெரியக்கூடாதென்ற கட்டளையுடன்

மருந்து உட்கொள்வது குற்றம் .ஆனால் அழுகியும் போகக்கூடாது .தெரியாமல் உண். take it easy .

B உடல் முழுதும் perfume அடித்துக்கொண்டு கடையில் விற்ற பிளாஸ்டிக் சிரிப்பை முகத்தில் ஒட்டிக்கொண்டது .

A இன் நோய் குணமாகிவிட்டது .மீண்டும் நோய் வந்தாலும் எதிர்கொள்ளும் திமிரோடிருந்தது.மக்கள் அதன் பக்கம் .

B இன் பிளாஸ்டிக் புன்னகை யாருக்கும் பிடிக்கவில்லை .அது ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டு ,செத்து போன மனதை ஒரு பையில் வைத்துக்கொண்டு அலைகிறது .


எங்கேயாவது Bஐ பார்த்தால் ஒரு நிமிடமாவது  மௌனமாய் இருங்கள் .PLEASE .

Friday, April 23, 2010

தெரியாமல் போன பிரார்த்தனை

இரண்டு கைகள் விரித்து
அந்தோணியார் சிலை எதிரே
தினமும் இறைஞ்சி நிற்பார் அந்த முதியவர்
கண்ணில் தோன்றும் இரங்கல்
கல்லையும் கனிய வைக்கும்
அவர் பிரார்த்தனையை நிறைவேற்று ..
என்பதே என் வேண்டுதலாயும்  ஆகிவிட்டது
பலநாள் காணாமல் போய் ஒருநாள்
ஊரெல்லாம் சிரித்தார்  போஸ்டரில் ....
ஒரு வேளை அதுவே அவர் வேண்டியதாய் இருந்திருக்குமோ?
இப்போதெல்லாம் அந்தோணியார் கோவில் தவிர்த்தே அலுவலகம் போகிறேன்
ஏதாவது பிரார்த்தனை என் கண்ணில் பட்டுவிடப் போகிறதென்று!

Thursday, April 22, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள்

தொடர் பதிவுக்கு பல அழைப்புகள் வந்துவிட்டன .என்னால் எழுத இயலுமா என்ற சந்தேகத்திலேயே எழுதாமல் விட்டேன் .


சைவ கொத்து பரோட்டா பிடித்த பத்து படங்கள் எழுத அழைப்பு விட்டதும் எழுதியே தீர்வது என்று முனைந்து விட்டேன் .


பிடித்த பத்து பெண்கள் போல ,என்ன பத்துகுள்ளேயே அடக்கி விடுகிறார்கள்? என் நினைவுக்கு முதலில் தோன்றிய பத்து படங்களை பட்டியல் இட்டுள்ளேன் ..



எனக்கு படம் பார்த்தல் சிறுவயதிலிருந்தே ஒரு சுவையான அனுபவம்.அழுவாச்சி படங்கள் பிடிக்காது,என்னுடைய all time favourite எப்பவுமே M G R படங்கள் தான் .அதில் தான் நல்லவன் ஜெயிப்பான் ,காதல் வெல்லும், முடிவு சுபம். M G R உம் பார்க்க அழகு .பாடல்கள் சுகம் .



இருப்பினும் மற்றபடங்களும் உள்ளன



NOT IN THE ORDER .



அழகன் .



இது  நானும் கணவரும் சேர்ந்து பார்த்த முதல் படம் .அதில் உள்ள ஜாதி மல்லி பூச்சரமே எங்கள் குடும்ப பாட்டாக ஆகிவிட்டது .





அனுபவி ராஜா அனுபவி



மூன்றாம் முறையாக திரையிடப்பட்ட போது பார்த்த படம். இதில் சிரித்த அளவுக்கு வேறு எதிலும் சிரித்ததாக நினைவில்லை .



ஜாதிமல்லி



சங்கீதமும் காதலும் நிறைந்த படம். ரொம்ப ஸ்பெஷல் ஏன்னா ஒரு மெச்சூர் காதல்.குஷ்பு

என் பிரிய நடிகையும் கூட



ஹேராம்



இதை விமர்சிக்க எனக்கு திறனில்லை .ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன் .என் ஆதர்சநடிகனின் masterpiece



வெள்ளிவிழா



எந்த காலத்திலோ வந்த புரட்சிப்படம் இது.பார்க்கும் போதெல்லாம் கதாசிரியரின் துணிவை பாராட்டாமல் இருக்க முடியாது .சக்திகொடு என்று இந்த படத்தை பார்த்து வேண்டிக்கொள்ளலாம் .'காதோடுதான் நான் பேசுவேன்' பாட்டும் இதில் தானே !



கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்



அழகு அழகு என்று கதறும் படம் .மனதுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சியான ,பாசிடிவ் முடிவு உள்ள படம் .நடித்த அனைவருக்காகவும் மிகப் பிடித்தது



மன்மதலீலை




என்னவோ தெரில இந்த படம் பிடிக்கும் .



தில்லானா மோகனாம்பாள்

நாதஸ்வர இசையில் பித்து பிடித்தவள் நான் .பத்மினியின் பரதம் அல்லாத நடனத்தை மன்னித்து விட்டால் ,இந்த படம் ஒரு காவியம் .



சட்டம்

இந்த படம் வந்தது பல பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது .அழகிய இரு கனவான்கள் .ஊடே ஒரு கன்னி .எல்லா படத்திலும் வருவது போல் தான் .ஆனால் இந்த இருவரும் நிஜமாகவே அழகிய கமல்ஹாசனும் ,சரத் பாபுவும் .அந்த பெண் மாதவி .இந்த மூவரின் கூட்டணிக்காகவே பிடித்த படம்



கடைசியாக நம் தலைவர் படம்

நம்நாடு

இது மிகப்பிடித்த காரணம் ,இதில் ஜெயலலிதா ஆடும் நடனம்  "ஆடை முழுதும் நனைய நனைய' வென்று .ஒரு பெண்ணுக்கு பிடித்தவனே மணாளனாக வரப்போகிறான் என்று உறுதியானதும்

அவள் மனம் போடும் குதியாட்டம் அப்பா என்ன அழகு .அதை மறைந்து நின்று ரசிக்கும் தலைவரும் என்ன அழகு !



எப்படியோ ஒருவழியாக எழுதி முடிச்சாச்சு.ஒரு சாதாரண layman போல வகைபடுத்தயுள்ளேன் .உலக சினிமால்லாம் எங்க ஊர் திரையரங்குக்கு வராது .வந்தாலும் புரியாது .மனதை சந்தோஷப்படுத்திய படங்கள் இவை .கலையின் நோக்கமே அது தானே



இந்த பதிவை தொடர

ஆதிரன்

ராகவன்


முகுந்த் அம்மா

அப்பாவி தங்கமணி

ஆகியோரை அழைக்கிறேன்

Sunday, April 18, 2010

நானாய் மாறிய இலை

நீண்ட இரு கைகளுக்குள் புக ஓடும் ஓட்டமாய் தான் என் கனவு
ஓடும்  போது கூட வரும் ஓர்  இலையின் அணுவாய் மாறிப்போனேன்
இங்கே அங்கே என்று மாறும்  நேரம் அணுக்களெல்லாம் ட்யூன் ஆகி போயிருந்தன  
இலையே நான்
நானே இலை
முகம் மட்டும் வேறாய் !
இலை உதிர்க்கும் பச்சை என் முகத்தில் தீற்றி
ஒரு பச்சை ஜந்துவாய் ஆகிப்போனேன்
மாறிய நேரம் நீண்ட  கைகள் காணாமல்  போயிருந்தன !
எனினும் அந்த காணாமல் போன கைகளின் அணைப்பில்
நானாய் போன இலையும்
இலையாய் போன நானும் 

Saturday, April 17, 2010

கன்ஃபர்ம்ட்

உறுதியாகிவிட்டது
கொஞ்சம் சீக்கிரம்தான்
மாமியார் வாயெல்லாம் பல்
மாமனார் கை பிடித்து புன்னகைத்தார்
ஊருக்கு போன் போட்டு சொல்லியாயிற்று
ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை செல்லில்
தங்கையின் உற்சாகக்  கிரீச்சிடல்
நிமிர்ந்து அவர் முகம் பார்க்க முடியாது
சந்தோஷம் அப்பி கிடந்தது ,
அடுத்த வீட்டு மாமி வந்து
" கல்யாணம் ஆகி வந்த பிறகு குளிச்சா இல்ல  ?"
என்று கேட்கும் வரை .

Tuesday, April 13, 2010

ஒரு கடிதம் --என்னவனுக்கு

அன்பே!

நானும் நீயும் மட்டுமே உள்ள ,அதிசயமாய் நமக்கு வாய்த்த ,விடுமுறை நாளை கழிக்கப் போகிறோம் வா !

வானில் பகலவன் தோன்றும் முன் தளராது எழுந்து கடற்கரை நோக்கி விரைநடை போட்டு உதிக்கும் சூரியனை  அலைகள் கால்கள் தழுவ வரவேற்று மகிழ்வோம்

இளமையான பின் காலைப் பொழுதில் நமக்கு மிகப்பிடித்த வயலின் இசை பின்னணியில் முழங்க நமக்கு நாம் தேர்ந்தெடுத்த சிறு உணவு உண்போம் .

பொடிநடை நடந்து நம் வயல் ஒட்டிய ஆற்றினூடே பாடிக்கொண்டே நீரில் திளைப்போம் .

பின் நீ காய் நறுக்க நான் சோறு வைக்க அன்பை கலந்து அங்கே சமைக்கும் நேரம் கொஞ்சம்   கவிதையும்  வாசித்து பார்ப்போம்

உனக்கு பிடித்த வரிகளை நீ சிலாகித்து எனக்கு புரியாத வரிகளை புரியவைத்து கவிதை நம்முள் அசைய அதை உற்று நோக்கி பரவசம் கொள்வோம்

எனக்கு மிகப்பிடித்த பின் மதியப் பொழுதில் நம் வீட்டு வாசலில் காற்று நம்மை தழுவி அணைக்க ஏதும் பேசாமல் கைப்பற்றி மௌனம் சுவைப்போம்  

அப்படியே என்ன் மடி சாய்ந்து உறங்கி விடுவாய் நீ.குழந்தைபோல் உறங்கும் உன் தலை கோதி உன் முகம் ரசித்து புன்னகைப்பேன் நான் .

கண் திறக்கும் நீ என்னவென்று கேட்க ,ஏதுமில்லை என  நான்  தலையாட்ட பொன்னால் ஆக்கப்பட்ட கணங்கள் அல்லவா அவை ?

ஞாயிறு மறையத் தொடங்கியதும் நாம் திரும்ப நடக்கத் தொடங்குவோம் .

உலகமே வியக்கும் நம் கோயில் சிற்பங்களின் நுணுக்கம் வியந்து சேர்ந்து ரசிப்போம்

சோழரும் பாண்டியரும் சேரனுமான  தமிழக வரலாற்றை சொல்லிக்கொண்டே வருவாய் நீ .அதில் திளைத்து, ஆண்டுகள் ஆயிரம் கடந்த வாயிலில் சிலிர்த்து நிற்ப்போம் நாம் .

எப்பொழுதும் எனக்கு தர எத்தனை விஷயங்கள் உன்னிடம் உள்ளன!

அந்த இளஞ்சூடான கருங்கல்லில் அமர்ந்து இலக்கியம் ,சித்தாந்தம்,காதல்,மனவியல் என சகலமும் கதைப்போம் நாம்

நிலவு வானில் நடக்கும் நேரம் ;இரண்டு வெள்ளரிக்காய்களை வாங்கி சுவைத்துக்கொண்டே நிலவொளியில் கடலைக் காணச்செல்வோம் .

எத்தனை பருகினாலும் தீராத தாகத்தோடு நிலவையும் கடலையும் உண்டு தீர்த்து மனதில்லாமல் வீடு ஏகுவோம்.

மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்து அந்த குளுகுளுக்கும் காற்றில் நிலவொளியில் நம் மனம் கவர்ந்த கீதம் இசைக்க புன்னைகையோடு உறங்கச்செல்வோம் .

எப்போதோ வாய்க்கும் இந்த நாளில் உன்னை விட்டு சிறிதும் விலகக்கூடாதென கைப்பற்றியே உறங்கி விடுவேன் நான்

உறங்காமல் நிலவொளியில் என்னையே பார்த்திருந்ததாக மறுநாள் சொல்வாய் நீ !

Sunday, April 11, 2010

கலவரம்

முத்தங்களுக்கான கணக்கினை தணிக்கை செய்து கொண்டிருந்தோம்....
என் தந்தவையும்,உன் தரநினைத்தவையும்  ஏட்டுக்களைக் கொண்டு
எப்போதும் உன் ஏட்டிலுள்ள கணக்கு கூடுதலாகவே இருந்து பாலன்ஸ் ஆகாமல் உயிரெடுக்கும்
கணக்கை நேர் செய்ய வேண்டி ஒற்றைக்காலில் நிற்பாய் நீ
ஆக ,என்றும் அடிதடியில் முடியும் நம் தணிக்கை நாள்
இன்று கலவரத்தில் வந்து முடிந்தது!
'தரவேண்டியது' என தலைப்பிட்டு நான் ஒளித்து வைத்திருந்த ஏட்டை நீ கண்டுபிடித்ததும் ..
திருடா!

Wednesday, April 7, 2010

எரியும் மௌனம்

ஒரு பஞ்சுப்பொதியின் மென்மை போல்
நம்மிடையே ஆன மௌனம்  

நம் கண்களிலிருந்து வார்த்தைகள் ஒரு
சிறகுபந்தைப் போல்மாறி மாறி பறக்கின்றன

நீ சிலசமயம் உன் இமைகளால் அவற்றைச்
சிறைபடுத்தி என்னை தோல்வியுறச் செய்கிறாய் 

என் முகம் நோக்கி வரும் சிலவற்றை
நானும் கண்ணில் ஏந்த விழைகிறேன்

ஆனால் அவை என் உதடு கிள்ளி
உன்னிடமே திரும்பச் சேர்கின்றன

அவற்றை கவனமாய் உள்ளங்கையில் சேகரித்து
நீ உன் கண்ணில் ஒற்றிக்கொள்கிறாய்

நம் மௌனம் பற்றி எரிகிறது    

Monday, April 5, 2010

வசந்தம்

தூரத்து நின்று இருத்தலைக்குறித்து அளவளாவும் வார்த்தைகளில் இன்று விசைகாணா ஈர்ப்பு

மாலை சூரியனில் கருகும் கருங்கலிடை மலர்ந்து விரிந்தது ஒரு நீலப்பூ

பதிலும் வினாவுமாய் ஒரேநிலையில் உதிர்ந்த பவளமல்லியில் ஒளிந்து கொண்டது கள்ள நேசம்

மருதாணி பூக்களின் மகரந்த வெடிப்பு சுமக்க முடியாது சுருண்டு விழுந்தது ஊழிக்காற்று

வாசல் கோலத்தை நெற்றியில் இட்டு குயிலோடு சேர்ந்து இசைத்தது மன இசைத்தட்டு

உயிர்க்கும் செடியினை வெடித்து கிளப்பியது நீள் மழை புணரும் பொறை பூமி 

வந்தது வசந்தம்

Sunday, April 4, 2010

பேய்க்கதை

கோடை விடுமுறை .வாடகைக்கு எடுத்த சைக்கிளை அது அழும் வரை சரவணன் ,மோகனா ,ஷாந்தி ,தம்பி ,நான் என மாற்றி மாற்றி ஓட்டி முடித்தாயிற்று .

எனக்கு சைக்கிளில் ஏற தெரியாது .ஆக தெரு முனையில் அங்கங்கே நாலைந்து கல் அடுக்கி வைத்திருப்போம் .அதில் கால் வைத்து இறங்கி சைக்கிளை  திருப்பி அந்த கற்களில் கால் வைத்து திரும்ப ஏறுவேன் .
எப்படியும் அதை நெருங்கும் சமயம் ஒரு உற்சாக கூச்சல் இருக்கும் .மணி எட்டரை !.உற்சாக கூச்சல் பொறுக்காமல் எதிர் வீட்டு மாமா ""நீங்களாம் போய் தூங்கவே மாட்டீங்களா"" என்று திட்டி அனுப்பினார் .
(அவர் தான் நாங்கள் ஊருக்கு போயிருந்த சமயம் நீங்களாம்  இல்லாமல் இந்த தெரு ஒரே சைலன்ட் என்று வருத்தபட்டவரும் கூட )

சைக்கிளை கடையில் விட்டு விட்டு அவசர அவசரமாக ரெண்டு பருக்கை விழுங்கிவிட்டு எங்கள் அடுத்த ஜமா பந்திக்கு கூடினோம் .
இப்போது சரவணன் வீட்டில் கிராமத்திலிருந்து வந்து டேரா போட்டிருந்த லச்சுமி பாட்டியும் எங்களோடு  சேர்ந்து  கொண்டார் .
சரவணன் தான் ஆரம்பித்தான் .
"நேத்து நம்ப புளியமரத்தில தூக்குபோட்டு செத்துப்போன டைலர்  ஆவியாய் வந்தாராம்னு " .
இப்பிடியே ஒருத்தர் ஒருத்தர் ஒன்று கூற அன்று பேய்கதை ராத்திரியாய் போனது.
அப்போது தான் கவனித்தோம் லச்சுமி பாட்டி பாவம் கொஞ்சம் பயந்து போய் இருப்பதை .உடனே நாங்கள் பல ஆவி கதைகளை எடுத்துவிட, பாவம் பாட்டி! .
 இப்படி அவரை போட்டு வாருவதை கண்டு அம்மா திட்டி எல்லாரையும் தூங்க போக சொல்லிவிட்டார் .சபை கலைந்தது .

அப்பா வர இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்பதால்  நாங்கள் தூங்காமல் பேசிக்கொண்டிருந்தோம் .அப்பா வந்தவுடன்
" இதோ கோவில் பிரசாதம் இருக்கு .எதிர் வீட்டில் போய் குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு வா"
என என்னிடம் கொடுத்தார் .நான் புளிசாதம் சுண்டல் அடங்கிய தூக்கு வாளியை எடுத்து கொண்டு எதிர்வீட்டுக்கு ஓடினேன்  .அவர்கள் வாசல விளக்கை அணைத்து விட்டிருந்தனர் .நான் நேராக போய் கதவை தட்டாமல் ஜன்னல் வழி எட்டி பார்ப்பதற்குள்
"ழெழெழெழ் " என்று இனம் புரியா கூச்சல் நானும்  "வீல்" என்று கத்தி ஒரே ஓட்டமாய் ஓடி வந்து விட்டேன் .
கடைசியில் பார்த்தால் நான் ஜன்னலில் எட்டி பார்த்த போது என் பாவாடை கீழே படுத்திருந்த லச்சுமி பாட்டி முகத்தில் உரசி இருக்கிறது .
பேய் கதை பயத்தில் இருந்த பாட்டி எதோ ஆவி தான் என்று "ழேழேழே"  என்று இருக்கிறார்
இந்த சப்தம் கேட்ட நான் அங்கு ஏதோ இருக்கிறதென்று பயந்து கத்தி ஓடிவந்துவிட்டேன் ,எங்கள் தெருவே கூடிவிட்டது   .
மொத்தத்தில் இருவருக்கும் ஆவி பயம் .

பின்னர் கொழுமோர் குடித்ததெல்லாம் தனிக்கதை
இதில் என்ன ப்யூட்டி  என்றால்  நாலு மாசம் சரவணன் வீட்டில் டேரா போட்டிருந்த லச்சுமி பாட்டி மறுநாளே ஊருக்கு போய் விட்டார்கள் .எதிர்த்த வீட்டு மாமி எங்களுக்கு ஸ்பெஷல் பிடிகொழுக்கட்டை  செய்து  தந்தார்கள் .ஆனால் கடைசிவரை லச்சுமி பாட்டி பயந்தது தான் தெரியுமே தவிர நான் நெஜம்மா பயந்தது யாருக்கும் தெரியவே தெரியாது