Wednesday, December 4, 2019

பிணா கவிதைநூல் விமர்சனம் ----சரவணன் மாணிக்கவாசகம் 

பிணா- பத்மஜா நாராயணன்:
ஆசிரியர் குறிப்பு:
காரைக்காலில் பிறந்தவர். சென்னையில் வங்கியில் வேலை பார்க்கிறார். மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். நான் மலாலா, வெண்ணிற இரவுகள், தடங்கள், நெருப்பிதழ்கள், ஷ் இன் ஒலி முதலியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள்.
பிணா:
1.
ஒரு கோட்டை விதை நெல் போல் எனதன்பை சேகரம் செய்து வைத்திருக்கிறேன்
ஒரு துளி மழையும்
அதை ஏற்கும் நிலமும்
மீபிறப்பிலேயே காணட்டும்
விதையன்பு
உறங்கும் வரம்
யாசிக்கிறதிப்போது
தா!
2. கண்ணாடி வழி கையேந்தியவளின் கண்கள் பட்டுத் தெறிக்கும்
ஒற்றைக் கதிரொளி
காண மறுப்பவர்கள் கைகளில்
ஃ பேஸ் புக் உரையாடல்கள்
கசியாத இதயத்தின் பின்புறம் அழும் குழந்தை கையால் காலாழாக்கு
தானமீந்த தந்தைப் படிமம்
பட்டே படாது பழுக்காது
அழுகிச் சொட்டும்
தவளை தோல் போர்த்திய
தக்காளி மனது.
3. சிறு கோப்பையில் சிவந்த வைனை ஊற்றுகிறாய்
மெழுகுவர்த்தி ஒளியில்
ரத்னசபாபதியாய் ஜொலிக்கிறது கவுன்களுக்கிடையே ஆறு கெஜம்
கூர்ந்து நோக்கப்படுகிறது.
நோக்கும் கண்ணில்
மது பேராசையாய் வழிகிறது
என் கை பற்றுகிறாய் நீ
மதுவன்றி உன் கண்ணில்
வழிகிறது பேரன்பு
காண மறுத்து சிவந்த திரவம் பருகுகிறேன் சபாபதி உன்னிடம் தாவுகிறான்
சிவப்பில் மூழ்குகிறேன் என்னைக் கொன்று அருந்துகிறாய் என் ரத்னா நீ!
4. அதென்னவோ தெரியவில்லை
இன்று நல்ல வெயிலும்
கூடவே சிலு சிலு மழையும். வேப்பிலைகளின்
ஊடே பாயும் கிரணங்கள்
என் முகத்தை தடவித் தடவிச்செல்கின்றன. மேலுதடு வளைந்திருக்கும்
ஆணின் முத்தம் அமிர்தமாமே?
உன் உதடு என்ன வடிவென்று புகைப்படத்தை எடுத்து
உற்று உற்று நோக்குகிறேன்.
உனக்குத் தெரியாதா?
முத்தச் சுவையாவும்
போன ஜென்மமே தீர்ந்துவிட்டன
போகட்டும்
இதோ தழுவும் கிரணங்களுக்கு வாகாய் முகத்தை திருப்பி அமர்கிறேன்
அவற்றின் உதடுகள்
வளைந்தெல்லாம் இருக்கத் தேவையில்லைதான்
கூடவே மேலே தெளிக்கின்றன
சூடான மழைத்துளிகளும்
என் கண்வழி உப்புநீருக்குப் போட்டியாய்
என் சிந்தனைகள் :
அகமனதின் கூவுதல்களை வார்த்தையில் வடிக்கும் யத்தனங்கள் பத்மஜா நாராயணின் கவிதைகள்.
வார்த்தைகள் வாதையை வெல்வதுமில்லை, கொல்வதுமில்லை. நாம் தான் கவிதை மூலம் எப்படியேனும் கடத்திவிட நினைக்கின்றோம். மரணம் கருப்பொருளாய் பல கவிதைகள். அம்மாவின் கை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மஞ்சள் முடிச்சு தூக்கி எறியப்படுகையில், படிப்பதை நிறுத்தி நிமிர்ந்து தெருவைப் பார்ப்பதைத் தவிர்க்க முடிவதில்லை. ஒருவருக்கு நெருக்கமாய் இருக்கும் கவிதைகள் அவர் உணர்வை புரிந்து கொள்ளாவிட்டால் அடுத்தவருக்கு நெருக்கமாக ஆகப் போவதில்லை. இறந்தவனின் பிறந்தநாள், கிரணமுத்தம், நம்பாதே மற்ற கவிதைகளை விட என்னளவில் நெருங்கியவை.
உறங்கும் வரம் நினைக்கையில் கிடைப்பதில்லையே.
காலாலாக்கு தானத்தில் கவிதையின் அழகியல் வடிகிறது
யாகத்திற்கு வந்து யுகங்கள் பலகடந்ததால் புதுயாகம் காணவந்த புது ரத்னசபாபதி.
என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.
பிரதிக்கு :
நவீன விருட்சம் & Amazon.in
முதல்பதிப்பு 2017
விலை ரூ 160 & 49.

No comments: