Wednesday, December 4, 2019

தெரிவை  நூல் விமர்சனம் -----சரவணன் மாணிக்கவாசகம்

தெரிவை- பத்மஜா நாராயணன்:
ஆசிரியர் குறிப்பு:
காரைக்காலில் பிறந்தவர். சென்னையில் வங்கியில் வேலை பார்க்கிறார். மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். நான் மலாலா, வெண்ணிற இரவுகள், தடங்கள், நெருப்பிதழ்கள், ஷ் இன் ஒலி முதலியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள்.
தெரிவை:
1. சாப்பிட்டு, துடைத்து மறுநாள் சமையலுக்கு கோலமும் போட்டுவிட்டு
ஒற்றை விளக்கெறியும் சமையலறையில்
அணைக்க மறந்த டிரான்ஸிஸ்டரின்
தனிமைப்பாடல்களைப் போல்
ஏதோ முணகுது மனம்
நீர் குடிக்க வந்து
தனக்குப் பிடித்த பாடல் ஒலிக்க
மெய்மறந்து நிற்பது போல்
என் முணுமுணுப்பை ரசிக்கிறாய் நீ
நீரருந்தியவுடன் பாடல் மறந்து
சென்றுவிடுவாய் நீ என
அந்த ரேடியோவைப் போல்
எனக்கும் தெரிந்து தான் இருக்கிறது
அணைக்கும் வரை ஆற்றுவது தானே கடன்.
2. அதுவாகத்தான் அமைகிறது
அசைந்தழைப்பதில்லை எப்போதும்
இலைகள் கூட அங்கங்கு தான்
பெரிதாக சுகந்தம் கூட பரப்புவதில்லை
எப்போதோ பூக்கும் பூக்கள்
எப்போதாவது தான் காயாகி
விலகாமல் காற்றிலசைகின்றன
வெட்டப்பட்ட கிளைகள் மட்டும்
எப்படியோ உடன் வளர்ந்து விடுகின்றன
ஊழிக்காற்று எத்துணை அசைத்தும்
சிறுசலனம்கூட காண்பதில்லை வேர்கள்
பூவும் மணமும் புகழும் சுற்றுதலும்
இல்லாதிருப்பினும்
விதிகூட இதை விலக்கி வைத்திருப்பினும்
இந்த மரத்தில் மட்டுமே கிளிகள் குடியேறுகின்றன
கூவிக்கூவிக் களிக்கின்றன
என்ன!!!
உயரப் பறக்கும் பருந்திற்கு மட்டும்
இதனகம் கண்ணில் படுவதில்லை.
ஹுயு ஷீ சீனக்கவிதைகள்:(மொழிபெயர்ப்பு)
கனவும் கவிதையும்
சாதாரண அனுபவங்கள் தாம் அனைத்தும்
பிம்பங்கள் கூட சாதாரணவை தாம்
மிகவும் எதேச்சையாய் அவை
கனவுகளில் மலர்கின்றன
பின் ஒரு புதுவுரு அடைகின்றன
சாதாரண உணர்வுகள் தாம் அனைத்தும்
வார்த்தைகள் கூட சாதாரணவை தாம்
எதேச்சையாய் அவை கவிஞனை அடைந்து
முடிவுறா புதுக்கவிதையாய் மலர்கின்றன
மதுவின் வீரியம் அது தரும் போதையில்
காதலின் பலம் அதன் தோல்வியில்
என் கவிதையை நீ எழுதமுடியாதது போல
உன் கனவை நான் காண இயலாது
என் சிந்தனைகள் :
தெரிவை என்ற வயதுக்கேற்ற உணர்ச்சி பிரவாகம். காமத்தை சொல்வதிலும் இனம்புரியா சோகம் கலந்த பத்மஜாவின் கவிதைகள். கவிதை மொழி இவருக்கு வெகு இயல்பாய் வருவதால் கவிதைகள் மொழிபெயர்ப்பும் இயல்பாய் அமைந்திருக்கிறது. முத்தமலை என்ற ஒரு கவிதையில் மட்டும் மிஞ்சுதல் மற்றவை எல்லாம் தணிந்த குரலில் தாபத்தைச் சொல்கிறது. முதல் கவிதை தெளிக்கும் உணர்ச்சிகள் ஏராளம். தண்ணீர் குடிக்கவந்து முணுமுணுப்பைக் கேட்டுப் போவதல்ல. இரண்டாம் கவிதையில் விதி விலக்கி வைப்பதை கவனமாகப் பாருங்கள். சீனகவிதை சொல்வது போல் யாருடைய கனவையும் யாரும் காணமுடியாது, அது போல கவிதையில் இருந்து எடுக்கும் மனம் வேண்டும். பெரும்பாலும் எளிமையான மொழி, மீண்டும் மீண்டும் ஒரு கருப்பொருளை வேறுவேறு சூழலில் வைத்து வடிவமைக்கப்பட்ட பத்மஜாவின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. என் வரையில் மொழிபெயர்ப்பை விட சொந்தக்கவிதைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகமாயிருப்பதால் அவையே நெருக்கமாகின்றன.
பிரதிக்கு :
டிஸ்கவரி புக் பேலஸ்
முதல்பதிப்பு டிசம்பர் 2013
விலை ரூ 70.

No comments: