Thursday, October 22, 2015

தெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.

 
கவிஞர் பத்மஜா நாராயணன் சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார் . ஆங்கிலம் , ஃப்ரென்ச் , தமிழ் என்று பன்மொழிப் புலமையும் , எழுத்து , நடிப்பு போல பன்திறமைகளும் கொண்டவர் . மொழிபெயர்ப்புத் தளத்திலும் சிறப்பாகப் பங்காற்றி வருகிறார் .
கதவு , கொம்பு , வெயில்நதி , பூவரசி , வலசை ஆகிய சிறுபத்திரிக்கைகளிலும் , மலைகள்.காம் , அதீதம் .காம் , பண்புடன். காம் , கீற்று.காம் ஆகிய மின்னதழ்களிலும் இவருடைய படைப்புகள் பிரசுரமாகி உள்ளன .
மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் (2012 ) , தெரிவை ( 2014 ) என்று இவருடைய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன . இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ,  கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 2012 வருடத்துக்கான முதல் பரிசை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஒரே ஒரு நல்ல கவிதையை எழுதிவிடுவதைக் காட்டிலும் ஒரு முழு கவிதைத் தொகுப்பை விமர்சனம் செய்து விடுவது மிக எளிதான ஒன்று என்பது தான் விமர்சனங்கள் எழுதும் போது எனக்கு எப்போதும் தோன்றுவது .
சில மாதங்களுக்கு முன்பு , இணையத்தில் அவர் முன்னர் பகிர்ந்திருந்த ..
சிறிது மூடியிருந்த / கதவின் இடையில் / தெரிந்த / உன் பாதங்களுக்கேற்ற / முகத்தை / நான் மனதில் / வரைந்துவிட்டேன். / வரைந்த அது / சிதையப் போகிறது / தயவு செய்து / என் கண்படாமல் போ நீ ..
என்ற , எளிய ஆனால் சொற்கச்சிதமும் , வெளிப்பாட்டில் அறிவுக்கூர்மையும் தெரிந்த இந்தக் கவிதை தான் எனக்கு பத்மஜாவின் முதல் தொகுப்பான “மலைப்பாதையில் நடந்த வெளிச்சத்தை” அறிமுகம் செய்து வைத்தது . கவிதைகளின் எண்ணிக்கையைப் பார்க்க தெரிவை முன்னதை விடவும் சிறியது என்றாலும் விசாலப்பட்டிருக்கும் கவிஞரின் கவித்தளத்தை பறைசாற்றும் விதத்தில் இரண்டாம் தொகுப்பு அமைந்துவிட்டிருக்கிறது .
நவராத்திரியின் போது கொலு வீற்றிருக்கும் தெய்வத்திருவுருவங்களை ரசிக்க விடாமல் , தம் பால் கவனம் ஈர்க்கும் ரங்கோலிகளைப் போல அல்லாமல் பொம்மைகளைத் தாங்கிப் பிடிக்கும் படிகளாக ட்ராட்ஸ்கி மருதுவின் கோட்டோவியங்கள் கவிதைகளோடு இயைந்து அருமை சேர்க்கின்றன .
கவிதையின் இந்தச்சொல்லுக்கான அர்த்தம் என்னவாக இருக்கக் கூடும் என்று வாசகனை பீதி அடைய வைக்கும் கரடுமுரடான வார்த்தைகளோ , அர்த்தமும் தொடர்புமற்ற படிமப்பிரயோகங்களோ இல்லாத , எளிய , இயல்பான மொழி , உண்மையை நேர்மையுடன் வெளிப்படுத்தும் தன்மை , வெகுகாலமாகப் பலராலும் பாவிக்கப்படும் வடிவத்தைச் சுவீகரித்துக்கொண்டு விடாமல் தனக்கேயான ஒரு தனி மொழி என்று நல்ல கவிதைகளை எழுதித் தொகுத்திருக்கிறார் பத்மஜா . மிக எளிய , இனிமையான ஒரு கவிதையைப் பற்றிச்சொல்லி துவங்குகிறேன் ..
“நாய்க்கனவு” என்ற ஒரு கவிதை
/ ….
குழந்தையென / ஊஞ்சலாட்டி தூங்கியபின் / அதன் முகம் பார்த்து / வினாவொன்று எழும் / என்றாவது / எப்பொழுதாவது / அதன் கனவில் / நான் வருவேனா ?
இதைப் படித்ததும் .. பசிக்கு அருந்தியபின்னும் , ஆசையில் , மிதமிஞ்சிப் பாலருந்தி விட்டு வாயிலெடுக்கும் குழந்தையின் மீது தாய்க்குப் போல கவிஞரின் மீது இரக்கம் சுரக்கிறது வாசகனுக்கு .. சுயஇரக்கம் , பச்சாதாபம் என்று தோன்ற விடாமல் இயல்பான ஒரு நெகிழ்வை உண்டாக்கி செல்லும் முடிவு .. இன்றைய எந்திரச்சூழலில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அன்புக்கான ஏக்கம் எத்தனை அழகான கவிதையாகி இருக்கிறது !
குத்தும் தனிமையின் வலி பேசும் கவிதைகள் பலவும் தொகுப்பில் உண்டு என்றாலும் ,
எல்லாப் பறவைகளும் / பறந்து சென்று விட்டன / ஒரே ஒரு மேகம் மட்டும்/ மெதுவாய் மிதந்தபடி / நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதில் / ஏனோ அலுப்பே இல்லை / மலையும் நானும் மட்டும்
எனும் இந்த சிறு கவிதை எனக்கு மிகப் பிரியமான ஒன்றாக இருக்கிறது ..
//கவிதையை வாசிக்கையில், கவிஞர் சொல்ல வருவது இதுவல்ல; வேறேதோ என்று வாசிக்கிறவருக்குத் தோன்றக் கூடாது . மாறாக, இதைக் கவிஞர் எவ்வளவு பொருத்தமாகச் சொல்லி இருக்கிறார் என்று முதலில் தோன்ற வேண்டும்; பிறகுதான், இதுமட்டும் அல்ல போல் இருக்கிறதே; கவிஞர் சொல்ல வந்தது வேறொன்றும் போலவே என்றும் ஒரு தோற்றம் தர வேண்டும். அதாவது, verbal level meaning should be the first priority; rest are all secondary and tentative. //
என்பார் கவிஞர் ராஜசுந்தரராஜன் .. எத்தனை அழகாக இந்த விளக்கத்துக்குப் பொருந்தி வருகிறது இந்தக் கவிதை ! காட்சிரூபமாக விரியும் வரிகளின் இடையில் ஒளிந்து கொண்டிருக்கும் கொடிய தனிமை , கவிதை முடிந்ததும் தன் ரீங்காரத்தை நம்முள் அதிரச்செய்யும் இந்த subtlety தான் கவிதைக்கு எத்தனை சிறப்புச் சேர்க்கிறது !
மனதில் பதிந்த , பாதித்த , ஏதோ ஒரு சம்பவம் , ஒரு காட்சி .. கிளர்த்திவிடும் எதிர்வினைகளே ஒரு கவிதையின் வடிவில் பெரும் பங்கு வகிக்கின்றன . சொல்லும் பொருளுமாகச் சேர்ந்து நனவிலியின் இயக்கம் சித்திரங்களாக வெளிப்பட்டு வரிகளாக உருக்கொள்கின்றன . கவிஞர் சொல்ல வருவது என்ன என்பதைத் தாண்டி வாசகனின் மனதில் அதிர்ச்சி தரத்தக்கதாக , வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்படுத்தக் கூடியதாக , தர்க்கரீதியான பொருளைத் தேடத் தோன்றாமலும் செய்ய ஒரு நல்ல கவிதையால் முடியும் . கவிதையின் சொல்லையும் பொருளையும் பொருள் தொடர்புகளையும் சரியான ஒரு கட்டமைப்பில் கவிஞன் அமைக்கும் போது இம்மாதிரியான கவிதைகள் சாத்தியப்படுகின்றன . இதற்கு நல்ல மொழியறிவும் ஆழ்மன பிம்பங்களை சொற்களாக கவித்துவமாக வெளிப்படுத்தும் திறனும் அத்தியாவசியமாகிறது ..
“என்னிடம் உள்ள விடைகளுக்கெல்லாம்” எனத் துவங்கும் கவிதையின் சில வரிகளை உதாரணமாகச் சொல்லலாம்
…..இங்கிருந்து காணும் போது / இரண்டாவது வானம் தெரிகிறது / நாளை மலரப் போகும் பூவின் / மணம் இதோ என் கைகளில்
…. / தேர் ஏறி ஊர்வலம் வர நடந்து வருகிறது சிவம் /
அதே போல்
“கோபம் திரும்பத் திரும்ப வருவது போல” எனத் துவங்கும் ஒரு கவிதையின் வரிகள்
…./ ஓர் உறைந்த ரத்தத்துளி போல் / நான் அணியும் ஒரு மாயத்தோற்றமும் / என்னிடமுண்டு / அதை என் இடது கையில் ஒளித்து வைத்திருக்கிறேன் / உன்னையும் உன் சிசுவையும் / அதன் பாலூறிய கண்ணில் பொதிந்திருந்தேன் / என் உதடமர்ந்த ஒரு கிழத் தவளையை / நான் வெட்டி வீசும் போது / உன்னை முத்தமிடுகிறேன் …//
இன்னதைத் தான் கவிஞர் சொல்ல முற்படுகிறார் , இந்தப் படிமம் இதைத்தான் குறிக்கிறது என்ற நிச்சமின்மைகளின் ஊடே வாசகனின் நனவிலியில் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற பிம்பங்களை , உணர்ச்சிகளைக் கிளர்த்தும் வரிகள் இவை .
“வன்புணர்ந்த வீடுகள் வடிக்கும் கண்ணீர்” , “அடகுக்கடை” போன்ற பட்டியல் கவிதைகளைப் பார்க்கும் போது “என்னிடம் உள்ள ..”. , “கோபம் .. ” போன்ற கவிதைகள் கவிஞரின் மீது மிகுந்த நம்பிக்கையை , எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன .
சிறிய ஊடல்கள் முதல் பெரிய மனத்தாபங்கள் வரை , சின்னஞ்சிறிய பிரச்சினைகளிலிருந்து தீர்க்க இயலாத துன்பங்கள் வரையிலும் கூட .. நம்பிக்கை ஏற்படுத்தும் , வாழ்வை இனியதாக்கும் , வாழத்தகுந்தது தான் என்ற நம்பிக்கையைத் தரும் ” வசந்தம் ” காதல் தானே .
…. மாலை சூரியனில் கருகும் கருங்கலிடை / மலர்ந்து விரிந்தது ஒரு நீலப் பூ / ….. உயிர்க்கும் செடியினை வெடித்துக் கிளப்பியது / நீள் மழை புணரும் பொறை பூமி / வந்தது வசந்தம் . /
என்ற இவை தொகுப்பின் காதல் கவிதைகளில் மிக உயிர்ப்பான வரிகள் !
“முத்தமலை” , “மரங்கீழ் மிழற்றல்” , “முத்தம் சரணம் கச்சாமி” ஆகிய தாபத்தைப் பேசும் கவிதைகளில் ஒரு கெஞ்சும் தொனியைக் காண்பதாக அம்பை தன் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் . அது கொஞ்சும் தொனியாகத் தான் எனக்குத் தெரிகிறது ..சிருங்காரத்தில் கொஞ்சலுக்கும் கெஞ்சலுக்கும் இடையிலான வேறுபாடு மிகச்சிறியது என்றாலும் முக்கியமானது அல்லவா ?
சர்வசுதந்திரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஆண் கவிஞர்களுக்கு இடையில் முத்தக் கவிதைகள் எழுதவும் அந்த மட்டுக்கு முடித்துக் கொள்ளவும் மட்டும் தான் பத்மஜா போன்றோரின் எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. பால்உணர்வுகளை , வேட்கைகளை , கட்டற்று , தங்கள் கவிதைகளில் பிரகடனப்படுத்தும் பெண் கவிஞர்களைக் கெட்ட வார்த்தைக் கவிஞர்கள் என்று என்னிடமே விமர்சித்த ( ஆண் ) கவிஞர்களை என்ன செய்வது ?
தமிழ்க்கலாச்சார வாழ்வின் உள்ளார்ந்த அலைக்கழிவுகளை எதிர்கொள்ளத் திராணியற்ற , அல்லது .. தன் மொழியின் துணையுடன் எதிர்கொள்ளத் துணியும் பெண்களை தன் கவிதைகளில் பிரநிதித்துவப்படுத்தியிருக்கி
றார் பத்மஜா நாராயணனன் என்று தான் சொல்ல வேண்டும் . வகுக்கப்பட்டிருக்கும் நியதிகளுக்குக் கட்டுப்பட்டு தன் எல்லைகளைச் சுருக்கிக்கொண்டிருக்கிறாரோ பத்மஜா என்ற கேள்வியும் கூட பல இடங்களில் எனக்குத் தோன்றியது .
இங்கு தான் “இன்றென் கருவறை ஒரு முறை புரண்டது” என்ற கவிதையைச் சொல்ல வேண்டி வருகிறது .. துயரமும் வலியும் நிறைந்த சொற்களான
/மருந்தொன்று கொண்டு வா / இல்லை ஒரு திராவகம் ! / பொசுங்கட்டும் / என் தூக்கம் கலைக்கும் துரோகி / … விலகு / ஐயோ ! அணை / இல்லை ! / இவள் பெண்மையைக் கொல் / ..
இவை .. வெறும் பாலியல் வேட்கையைப் பேசும் சொற்களாகப் பார்க்கப்படும் அபாயம் உள்ளது என்ற நினைப்பே ஆயாசம் அளிப்பதாக இருக்கிறது ! இம்மாதிரியான தளங்களில் பெண் பேசுவது இன்னமும் சலனங்களைத் தான் கொண்டு வருகிறது என்பது வேதனை . மேலும் அது கவிஞரின் துயரமாக / வேட்கையாகத் தான் இப்பொழுதும் பார்க்கப்பட வேண்டுமா என்ன ?
பழைய பாணியிலான ஒரு சில கவிதைகள் , சிலவற்றை முடித்திருக்கும் போக்கில் தட்டையான மற்றும் இணக்கமற்ற தன்மை
எ.கா /முதன் முறையாய் சந்தித்துவிடுவாய் / சொல்லிவிட்டேன் ஆமாம் ! / , /அதற்காக / பேராசைக்காரி என்று மட்டும் / என்னைக் கூறிவிடாதே ! /
போன்ற வரிகள் ..
கவித்துவமாய்த் துவங்கி வசனநடையில் சறுக்கும் சில என்று சில விமர்சனங்களையும் கவிஞரிடத்தில் சொல்ல வேண்டியவளாக இருக்கிறேன் .
தெரிவையின் மொழிபெயர்ப்புக்கவிதைகள் :
அபாரமான இரு மொழிப்புலமையும் மொழிபெயர்ப்புக்குத் தேவையான நுண்ணறிவும் உள்ளவராக இருக்கிறார் பத்மஜா ..not only is she proficient in her language skills she sure has the knack for translation ..
“without it ( translation ) we would live in arrogant parishes bordered by silence ” -
என்கிறார் George stainer
கலாச்சாரக் கூறுகளான நடை , உடை , பாவனை போன்றவற்றிர்க்கும் மிகுந்த அர்த்தம் இருக்கிறது என்பதோடு மூலத்தின் உச்சத்தை மொழிபெயர்ப்பில் கொண்டு வருவது என்பது ஏறக்குறைய இயலாது எனும் போது ஆங்கிலம் மற்றும் வெவ்வேறு மொழிக்கவிதைகளை ஆங்கிலத்தின் வழி தமிழாக்கி , வேறெப்படியுமே தமிழ் வாசகனின் பார்வைக்கு வர இயலாத கவிதைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்திருப்பது பாராட்டப்பட வேண்டியது . தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிதைகள் ஒவ்வொன்றுமே தனித்துவமானவை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது .
ஆந்ரி வோஸ்நஸென்ஸ்கி ஒரு கவிதையை வரையறை செய்கையில் கூறுகிறார் போல்
” a crystal , model of the world , structure of harmony , a method of thought penetrating to the essence of what is happening , a way of revealing the truth . Poetry knows no borders ; it has no capitals ,and no provinces , languages are many but poetry is one ”
Anne sexton இன் End middle beginning என்ற கவிதையை உதாரணத்துக்குப் பார்க்கலாம்
There was an unwanted child / Aborted by three modern methods / she hung on to the womb / hooked onto it / building her house into it / and it was to no avail / to black her out .. இதை வேறெப்படியும் , தன்னை விடச்சிறப்பாக மொழிபெயர்த்து விட முடியாது என்கின்ற நம்பிக்கை வாசகன் மனதிலும் ஏற்படுமாறு தமிழாக்கி இருக்கிறார் பத்மஜா ..
யாருக்குமே வேண்டாததாய் / ஒரு குழந்தை இருந்தாள் / மூன்று நவீன முறைகளில் / கருவிலேயே சிதைக்க முயலப்பட்ட
கருவறையை பற்றிக் கொண்டு / அதனோடு பிணைந்து / தன் வீட்டை அமைத்துக்கொண்ட / அவளை / எந்த ஒரு முறையாலும் / இல்லாமலாக்க இயலவில்லை -
இப்படி !
மொழிபெயர்ப்பு என்று வரும் போது நாம் சந்திக்கும் சிக்கல்கள் தான் எத்தனை எத்தனை ! நம் மொழி வளம் அல்லது அதன் குறைபாடுகளை , அதன் எல்லைகளைச் , சந்திக்க நேருகிறது . இந்த இடர்ப்பாடுகளை எல்லாம் மீறி மூலத்தை எழுதிய கவிஞனின் எல்லைக்குள் அத்துமீறாமலும் கவிதையை சிதைத்துவிடாமலும் , சாரம் இழந்து போகாமலும் பெரிய சமரசம் எதுவும் செய்து விடாமலும் ஓரளவுக்காவது original க்கு நியாயம் செய்வது என்பது பிரம்மப்பிரயத்தனம் தான் . பத்மஜா அதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் .
குடும்ப அமைப்பிலும் சமூகத்திலும் எத்தனையோ குரூரங்களையும் வன்முறைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கும் நமக்கு , நாடுகளுக்கிடையிலான போர்கள் , அந்நாட்டின் மக்களுக்கு – குறிப்பாக குழந்தைகளிடத்து ஏற்படுத்தும் விளைவுகளை //எழுதும் விரல்களின் கண்ணீரால் // சொல்லும் கவிதை நிஸ்ஸார் கப்பானியின் அரேபியக் கவிதை ” வரைதலில் ஒரு படம் ” . ஒரே ஒரு படம் வரைந்து கொடுக்கக் கோரும் மகனுக்கு , போரினால் சிதைந்து உருக்குலைந்திருக்கும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை மகன் ஒரு பறவையைக் கேட்கும் இடத்தில் சிறையையும் , கோதுமைச்செடியை வரையாமல் துப்பாக்கியையும் வரைந்து காட்டுகிறான் ..
மகன் தன் பேனாவையும் / வண்ண பென்சில்களையும் / என் முன் வைத்து / எனக்கான ஒரு தாய்நாட்டை வரையுங்கள் என்கிறான் / கையில் எடுத்த தூரிகை நடுங்க / உடைந்து அழுகிறேன் நான் .. என்று முடிகிறது கவிதை .
வாசிக்கும் யாரையும் சில தினங்களுக்கேனும் சமன் குலையைச்செய்யும் , வாசித்த நிமிடம் மனம் கசந்து , நம் குழந்தைகளின் உலகில் இத்தனை அவநம்பிக்கையையும் வன்முறையையும் நாம் விதைத்து விட்டோமா என எண்ணி குமுற வைக்கும் கவிதை ! தொகுப்பின் மொழிபெயர்ப்புக்கவிதைகளில் என்னை வெகுவாக உணர்ச்சி வசப்படச்செய்தது இந்தக் கவிதையே .
தனக்கு மிகவும் பிரியமான ஒரு பூச்சாடிக்கென மலர்களைச் சேகரிக்கும் சிறுமியைப் போல காதல் , வேட்கை எனவும் மொழிபெயர்ப்புக்கவிதைகள் தேர்வில் பிரத்யேக கவனம் கொண்டு மனம் பிறழ்ந்தவர்கள் பற்றின ஒன்று , பெண்ணியக் கவிதை , பெண் சிசுக்கொலை மற்றும் பெண் நிலையைச் சித்தரிப்பது , ஆணும் பெண்ணுமாய் இருக்கும் அர்த்தநாரிகள் பற்றியது என்று ஆர்வத்தோடு எழுதிச் சேகரித்துத் தொகுத்திருக்கிறார் பத்மஜா . நல்ல கவிதைகளைத் தேடும் வாசகனின் முன் நீண்டிருக்கும் .. காதலை , துயரத்தை , தீராத்தனிமையை , அர்த்தநாரிக்களின் சாபக்கனலை , தோட்டாக்களின் எரி மணத்துடன் கலந்து கமழும் ஒரு பூச்செண்டு இது ..
..ஷஹி ..

3 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை...

Tamilus said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

நன்றி..
Tamil US
www.tamilus.com

Anonymous said...

Hi outstanding blog! Does running a blog such as this take a lot of work?

I've absolutely no knowledge of coding but I was hoping to
start my own blog in the near future. Anyhow, if you have any
ideas or techniques for new blog owners please share.

I understand this is off topic however I just had to ask. Appreciate it!