Tuesday, August 6, 2013

பேராசைதான்





ஒரு குழந்தையின் முதலடி
கவனம் போலோ
மழைக்காலத்தின் முதற்துளியின்
தண்மை போலோ
மொட்டவிழும் மலரின்
முதல் மணம் போலோ
கடல் காணும் ஒரு யானைக் குட்டியின்
ஆச்சரியத்தோடோ
தன் சிசு முதல் கையேந்தும்
தகப்பன் போலோ

நூல் கண்டு பிரித்தாடும் பூனையின்
உற்சாகத்தோடோ
முதல் மதுவருந்தும் ஒருவனின்
தயக்கத்தோடோ
சுழித்தோடும் ஆற்றிலிறங்கும்
படபடப்போடோ
முதல் நீச்சல் கற்றுணர்ந்த
சிறுவைப் போலோ
உண்டு மகிழ்ந்து கண்ணயறும்
த்ருப்தியோடோ
என்னைக் கொண்டாடு
என்றெல்லாம்
நான் கேட்கவில்லை!

என்னை நானாகப் பாரேன்
ஒரு முறை

அதற்காக
பேராசைக்காரி என்று மட்டும்
என்னைக் கூறிவிடாதே!

No comments: