Thursday, September 13, 2012

"சுந்தர்ஜி' இன்னும் சொல்லலாம் இவரைப் பற்றி

இதை ஒரு பின்னூட்டமாக  சுந்தர்ஜி  அவர்களின் பக்கத்தில் எழுதலாம் என்றிருந்தேன் .நிச்சயமாக அவர் இதை பிரசுரிக்க மாட்டார் ..அதனால்  ஒரு இடுகையாகவே அதை இங்கு போட்டு விடலாம் என்று ...

அவரின் விட்டுப் போன சில பக்கங்களை வாசிக்க இன்று நினைத்திருந்தேன்
வாசிக்க வாசிக்க பிரமிப்பு மேலீட பின்னூட்டமிடலாம் என்றால் சொல்ல வந்ததை சொல்லத் தெரியவில்லை.எதோ தட்டு தடுமாறி தட்டச்சுகிறேன் .

சொல்ல நினைத்தவை இதை விட பன்மடங்கு .


ஒருவன்

ரசிகனாக நினைக்கலாம்
ரசிகனாக உருவாகலாம் ..
ரசிகனாக மாறலாம்

இவர் ரசிகனாகவே  பிறந்தவர் .

இதற்கு இவர் பட்டியலிட்டிருக்கும் பாடல்களே முதல் சாட்சி .

நாளுக்கு நாள் மாறும் இவர் தளத்தின் பின் புலம் மறு சாட்சி என்றால்

இவர் கவிதைகளுக்குத் தெரிவு செய்யும் படங்கள் மற்றுமொன்று ..

இது ஒரு சின்ன உதாரணம் ..இது போக இவர் வீடு மனைவி மக்கள் நாய்குட்டி

என பட்டியலே போடலாம் ..

சரி வெறும்காண்  ரசிகர் தானா?என வினவினால் அவர் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் பலாச்சுளைகள் ..

சரி அப்புறம்?

ருசி அறிந்து உண்பவர் ..அவராலே தானே கோமளவிலாஸ் போக வேண்டும்

என்று காத்துக்கொண்டு இருக்கிறோம்?

எழுத்துக்களில் எப்போதும் தெரியும் நாசுக்கு,நல்லவற்றை உடன் போற்றும்

நல்மனது ..

ஹ்ம்ம்ம் ...

இதல்லாம் விட பல விஷயங்கள் அவரிடம் ...

for eg?

நாலு எழுத்துக்களை கிறுக்கி விட்டு (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் )

எதோ சாதனை செய்து விட்டோம் என்று நினைப்பவர் மத்தியில்

சாதனைகளை செய்து இதழ்கள் வெளியிட்டு,மொழி மாற்றம் செய்து,பல

ஆளுமைகளுடன் கூடவே இருந்து

பேசி, பழகி, எழுதி,பின்  அமைதியாய் இருக்கும் இவரிடம் நிச்சயம் பாடம்

படிக்கணும்.

சரி

சுந்தர்ஜியின் நண்பர் என்று சொல்ல ஒரு கொடுப்பினை வேண்டும்

ஏய் இதெல்லாம் டூ  மச்

இல்லை இல்லவேயில்லை

நண்பர் என்றால் தன்னால் முடிந்ததும்,அதை விடஅதிகமாகவும் செய்வார்

என்பதை தஞ்சை கவிராயரிடமும்,அப்பாதுரையிடமும் கேட்க வேண்டும்.

கவிராயரின் உடல் நலம் குறைந்த வேளைகளில் அவருடனே இருந்து,

அதைப்பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து

அப்பப்பா இருந்தால் இவர் போல ஒரு நண்பர் இருக்க வேண்டும் .


இவரிடம் பீறிடும் சமூக அக்கறை,பயணங்களில் மக்களில் சந்திக்கும் ஆர்வம்

 அவ்வப்போது  தலை காட்டும் நகைச்சுவை ..

இவை எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் எழுத்து .

ஓர் உயர்ந்த எழுத்து இதைவிட எப்படி இருக்க முடியும் ?

அவர் எழுத்துக்களைப்  படித்த பின் சிலநிமிடங்கள் ஏதும் செய்ய இயலாமல்

இருந்த தருணங்கள் உண்டு.

அவர் எழுத்துக்களை அச்சில் கண்டு பொறாமையுடன்  அவருடன்

சண்டையிட்ட நாட்கள்  உண்டு .

எல்லாம் போக அவர் எழுத்துக்கள் பிடிக்க முக்கியமான  காரணம் உண்டு ..

அவரின் எல்லா எழுத்துக்களிலும் அவரைக் காண்பது தான் அது

ஏனெனில் அவர் கூறியிருக்கிறார்
                                
                              "என் எழுத்துக்களில் நானிருக்கிறேன் "



 

19 comments:

ரிஷபன் said...

சுந்தர்ஜியின் நண்பர் என்று சொல்ல ஒரு கொடுப்பினை வேண்டும்

நமக்கு இருக்கிறதுதானே பத்மா?!

பால கணேஷ் said...

உங்க தளத்தைக் கண்டுபிடிச்சுட்டேன். சுந்தர்ஜி ஒரு மிகச் சிறந்த ரசிகர் என்பதையும் நிறைகுடம் என்பதையும் நான் அவருடன் பழகியதில் உணர்ந்திருக்கிறேன். அவரைப் போன்ற நண்பர்கள் ஒரு கொடுப்பினைதான். உங்கள் வார்த்தைகளிலேயே சொன்னால்... சொல்லியிருப்பவை கொஞ்சம்தான். அருமையான பகிர்வும்மா. நன்றி.

க ரா said...

அருமையான பக்தரை பற்றிய அருமையான பகிர்வு...

வெங்கட் நாகராஜ் said...

சுந்தர்ஜி பற்றி நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை. அவருடன் சில சமயங்கள் பேச முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. இன்னும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு தான் அமையவில்லை. அடுத்த சென்னைப் பயணத்தின் போது சந்திக்க நினைத்திருக்கும் நபர்களில் முதலாவது அவர்தான்!

நல்ல பகிர்வு...

உமா மோகன் said...

இந்த இணைப்பைத் தரும் சுந்தர்ஜியின்
நண்பர் பட்டியலில் வைத்ததற்காக
முதல் நன்றி பத்மா.நான் கவனித்த பலவற்றைப்
பட்டியலிட்டு முந்திவிட்டீர்கள்.புதுச்சேரியில்
இருந்தாலும்,இன்னும் நேரில் சந்திக்க வாய்க்காத
ஒரு கண்ணாமூச்சிச் சூழல்..இதுவும் சுவாரஸ்யம்தான்...

உமா மோகன் said...

இந்த இணைப்பைத் தரும் சுந்தர்ஜியின்
நண்பர் பட்டியலில் வைத்ததற்காக
முதல் நன்றி பத்மா.நான் கவனித்த பலவற்றைப்
பட்டியலிட்டு முந்திவிட்டீர்கள்.புதுச்சேரியில்
இருந்தாலும்,இன்னும் நேரில் சந்திக்க வாய்க்காத
ஒரு கண்ணாமூச்சிச் சூழல்..இதுவும் சுவாரஸ்யம்தான்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

திரு. சுந்தர்ஜி அவர்களைப்பற்றிய மிகவும் அருமையான பகிர்வு.

அவரிடம் மிகவும் சிறந்த குணங்கள் உள்ளன.

ஆரம்ப நாட்களில், என் பதிவுகளுக்கு, அவர் அளித்த மிகச்சிறந்த வித்யாசமான தனித்தன்மை வாய்ந்த பின்னூட்டஙகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தின.

முன்பின் பார்த்திராத என்னை ஒரு நாள் முதன்முதலாக தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

“YES Sir, Sundarji Sir சொல்லுங்கோ என்றேன்” அது அவருக்குச் சற்றே அதிர்ச்சியாகிப் போனது.

அதன்பின் அன்றே அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், மிகவும் நகைச்சுவையானவை. அதுபற்றி நானே ஓர் தனிப்பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்.

அவர் மிகவும் நல்ல மனிதர். அவரை நம் நண்பர் + நலம் விரும்பி எனச் சொல்லிக்கொள்வதில் நானும் மிகவும் பெருமையாய் நினைப்பதுண்டு.

பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

அன்புடன்
கோபு [VGK]

Yaathoramani.blogspot.com said...

அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
அதிகத் தொடர்பில்லாத என்போன்றவர்களுக்கு
மிகச் சரியாக அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு
மனம் கவர்ந்த பதிவு
பதிவுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

venu's pathivukal said...

அன்பு பத்மஜா அவர்களுக்கு

உங்களது பதிவை வாசித்தேன்...

யானும் அவ்வணமே கூறும்

எஸ் வி வேணுகோபாலன்

பின் குறிப்பு:
சுந்தர்ஜி அவர்களது இதழைத் தான் முதலில் பார்த்தேன்...அப்புறம் அவரது அலைபேசி எண்ணைப் பிடித்து அவரை அழைத்தேன்...அவரது குரலைக் கேட்குமுன் அந்த நாதசுர இசை வெள்ளமாய்ப் பொழிந்த அந்த ரிங் டோனில் என்னை இழந்தேன்...
அப்புறம் கர் கர் என்று ஒலிக்கும் ஒரு ஷட்ஜமக் குரல் கேட்டது...

ஓர் அற்புதமான INLAND LETTER வந்தது அவரிடமிருந்து..அத்தனை ருசியாய்..

சீனக் கவிஞன் பை ஜூயி கவிதைகளை சுந்தர்ஜி மொழிபெயர்ப்பில் வாசிக்கையில் ஆண்டாளை தரிசித்தேன் அங்கங்கே...

இப்படியாக எங்கள் உறவு தொலைபேசியிலேயே கடந்தது..
இரண்டு ஆண்டுகளாக இருக்கும் என்றே நினைக்கிறேன்..

மிக மிக அண்மையில் காசியபன் அவர்களை சந்திக்கும் முயற்சியில் அவர் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டுச் சந்திப்பில் கண்டேன் சுந்தர்ஜியை நேரே..

அதற்கு முன்னும் பின்னும்
அவரைப் பார்த்தபடி இருக்கிறேன் அவரது எழுத்துக்களில்..

கனிவான அவரது குரலில்
அடுத்தவர் படைப்புகளை ஆசையோடு அறிமுகப் படுத்தும் அவரது நேயத்தில்
படைப்பூக்கம் குன்றாத அவரது முயற்சிகளில் அதை விட
அவரைப் போன்றே நடேசன் பூங்காவில் திடீரென்று ஒரு மாலை நேரத்தில் கூட்டமாக அறிமுகமான அன்பு தோய்ந்த உள்ளங்களின் உறவில்..

எஸ் வி வி

Matangi Mawley said...

"Good Books, Good Food and Good Music"- these are my Mantras for a wholesome intellectual development. I have rarely come across such perfect combination - and Sundarji is one of the few people to posses all these... And you have summed it up very well...
But apart from these- the blog space "Kaikal Alliya Neer"- itself is a treasure chest for me. For someone like me who has just stepped into the world of Tamil Writing- there is always something to learn- be it the posts about the old "silaasanam" in temples or "Dakshinaayanam"- a journey into the mystique world which our generation has lost to the Rat Race culture...

மோகன்ஜி said...

ப்ரிய பத்மா! சுந்தர்ஜி பற்றிய உங்கள் பதிவுக்கு வாழ்த்தை விட நன்றி சொல்லத் தோன்றுகிறது. பன்முகம் கொண்ட எளிய நண்பரும் படைப்பாளியும் அவர்.

எனக்கு சுந்தர்ஜியின் சொந்தம் வேறு தளத்தில்.. பலசமயம் எனக்கு நல்ல மாணவன் மேல் ஆசிரியனுக்கு ஏற்படம் வாத்சல்யமாயும், மகன் மேல் உண்டாகும் வாஞ்சையாகவும் உணர்வு சுந்தராவுடன் பழகும் போது தோன்றும்.

எங்கிருந்தோ வந்தான்... ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ....

அப்பாதுரை said...

முப்பது வருடங்களுக்கு முன் என் கண்ணில் படாமல் போனார்களே என்ற ஏக்கப்பட்டியலில் சுந்தர்ஜிக்கு இடம் உண்டு.

RVS said...

மொபைல்ல பேசும்போது நாம என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்னு பேசறதை வச்சே கண்டுபிடிக்கும் சாமர்த்தியசாலி சுந்தர்ஜிக்கு ஒரு ராயல் சல்யூட். :-)

rvelkannan said...

எவ்வளவு சொன்னாலும் தகும் என்பது தான் உண்மை. இருந்தாலும் மிக சிறப்பாக சொல்லியிருக்கிங்க பத்மா ,
எங்களின் சார்பாகவும் இதனை வழி மொழியலாம்

vasan said...

சுந்த‌ர்ஜி த‌ன்மையான‌வர், தண்ணீரானவ‌ர். க‌ட‌லாய் ப‌ர‌ந்து, அருவியாய் துள்ளி, ந‌தியாய் ஓடி, ஆறாய் ந‌ட‌ந்து, சுனையாய் சுர‌ந்து குளிர்ந்து, க‌ல்வி, அர‌சிய‌ல், அறிவிய‌ல் ச‌மூக‌ம், க‌லை யாவிலும், நேற்று,இன்று,நாளைக‌ளை அறிந்து தெளிந்த‌வ‌ர். அவ‌ர‌வ‌ர் பாத்திரம‌றிந்து ப‌ரிமாறுப‌வ‌ர்.
ந‌ம் கொள்ள‌ள‌வுக் கேற்ப‌ விஷ‌ய‌ங்க‌ளை விள‌க்குப‌வர். ஆசானாய், ந‌ல்ம‌ந்திரியாய், த‌லைவ‌னாய், தொண்ட‌னாய், அடியாளாய், அடியாருக்கு அடியேனாய், திரு மாறாது உருமாறும் சித்தர் அவ‌ர். இயற்கையின் காத‌ல‌ன், ந‌வீனத்தின் சகோதர‌ன், ந‌டேச‌ன் பூங்காவை, நால‌ந்தாவாக்கு"ப‌வர்". குறைக‌ள் குவிந்த‌ எழுத்துக‌களிடையேயும்,நிறைக‌ள் தேடி வாழ்த்தும் அன்ன‌க்குண‌ம் (அண்ண‌ன் குண‌ம்) கொண்ட‌வ‌ர்.

ப‌த்ம‌ஜா தொட‌க்க‌த்தில் சொல்லிய‌து (ப‌திவிட‌த் தோன்றிய‌தே அருமையான செய‌ல்,இன‌ம் இன‌த்தை சேரும். க‌விஞரை, க‌விஞரே அறிவ‌ர்.) "என்னவென்று சொல்வ‌த‌ம்மா" என்ற‌ விய‌ப்போடுதான் பின்னோட்ட‌த்தை தொட‌ங்கினேன். ரிஷ்ப‌ன், அப்பாதுரை, மாத‌ங்கி, வேணு சார், வைகோ, சிவ‌குமாரன், ர‌ம‌ணி, மோக‌ன்ஜி பின்னே நானும் ஒட்டிக் கொள்ள‌ மூச்சுவாங்க அவ‌ர்க‌ளி பின்னோடி வ‌ருகிறேன். க‌ண்ண‌தாச‌ன், ப‌க‌வ‌த்கீதையை உரிமையோடு எடுத்தாண்ட‌ கால‌ங்க‌ளில் அவ‌ன் வ‌ச‌ந்த‌ம் பாட‌லின் அனைத்து வ‌ரிக‌‌ளுக்கும் பொருந்த‌க் கூடிய‌வ‌ர். நிறைவாய் ஒரு துளியாய் மாறினும் தீர்த்த‌மாய் சுவைப்ப‌வ‌ர் சுந்த‌ர்ஜி. "சுந்த‌ர்ஜி எனக்கும் ந‌ண்ப‌ன்" என்ப‌தே இந்த‌ ச‌பையில் இட‌ம்பெறும் பேற்றினை த‌ந்த‌து. ந‌ன்றி ப‌த்மா மேட‌ம். காகித‌ ஓட‌ம் திக்கெட்டும் ப‌ய‌ணிக்க‌ட்டும்.

G.M Balasubramaniam said...


பதிவுலகில் ஆரம்ப பள்ளி மாணவனாய், அறிமுகமான சில நாட்களில் என்னையும் என் பதிவுகளையும் வாசித்து உற்சாகமான பின்னூட்டங்களை எழுதியவர். அவருடைய ஒரு பதிவில் அவர்கள் எழுத்தாலேயே அறியப் பட்டு அவர்கள் பதிவுகள் பேசப் படும் என்று எழுதி , சில வலைப் பூக்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார். அப்படி அடையாளம் காட்டப்பட்ட வலைப் பூக்களில் நான் எழுதும் gmb writes இருந்தது. என் நினைவு சரியானால் காகித ஓடம், சைக்கிள் என இன்னும் சில வலைப் பூக்களும் இருந்தன. எனக்கு சுந்தர்ஜியை வலை மூலம்தான் தெரியும். அவரது தொலைபேசி எண் என்னிடம் இல்லை. நானும் சாதாரணமாக முகம் பரிச்சயமில்லாதவர்களிடம் தொலைபேசியில் பேச முயன்றதில்லை. ஆரம்ப பதிவுகளில் கருத்து வேறுபாடு இருந்ததுண்டோ என்னும் சந்தேகம் இருந்தது. அவர் ஒரு முறை எழுதியதாக நினைவு, விருப்பமில்லாவிட்டாலோ, உடன்பாடு இல்லாவிட்டாலோ தாண்டிப் போகலாம் என்று. கருத்து வேறுபாடுள்ளவர்களுடன் ஒத்துப் போவதையோ, எடுத்துக் கூறுவதையோ அவர் விரும்பமாட்டார் என்பதே என் எண்ணம். நேரில் சந்தித்துப் பேசும்போதுதான் ஒருவரைப் பற்றி முழுமையாகக் கூறமுடியும் என்பது என் எண்ணம். அன்பானவர் திறமைசாலி எழுத்தாற்றல் மிக்கவர் வஞ்சனை இல்லாமல் புகழ்வார் என்பதில் எந்த அபிப்பிராய பெதமும் இல்லை. உங்கள் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை அவரும் படிப்பார் என்று நம்புகிறேன். எல்லா நலமுடன் அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். கமெண்ட் மாடெரேஷன் இருப்பது பார்க்கிறேன் . பிரசுரிப்பீர்கள்தானே. வாழ்த்துக்கள். .

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஒரு விழாவில் என் மீது படும் வீடியோ வெளிச்சமே என்னை அதிகப்படியாய்க் கூசவைக்கும். நிழலிலேயே இறுதிவரைக்கும் ஒதுங்கியிருக்க விரும்புகிறேன்.

இந்த திடீர் அஸ்திரத்தை ஏவிய பத்மஜாவுக்கு என்ன சொல்ல எனத -விரல்நகங்களைப் பார்த்து சட்டென்று வராத வார்த்தைகளுக்காகத் தவிக்கும் ஒரு சிறுவனைப் போலவே- தவிக்கிறேன்.

ரிஷபன், பாலகணேஷ், க.ரா., வெங்கட் நாகராஜ், சக்தி, வை.கோபாலகிருஷ்ணன், ரமணி, எஸ்.வி.வேணுகோபாலன், மாதங்கி, மோகன்ஜி, அப்பாதுரை, ஆர்.வி.எஸ்.,வேல்கண்ணன், வாசன், ஜி.எம்.பாலசுப்ரமண்யம் ஆகியோருக்கு
என் கண்களை மறைக்கும் திரையால் நன்றி சமர்ப்பிக்கிறேன்.

இந்தப் பின்னூட்டங்களில் நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் என் மீது காட்டும் அன்பின் அளவுகோலாகவே எடுத்துக்கொள்கிறேன்.

பாலு சார் கிட்டத்தட்ட என் அப்பாவின் வயதை ஒத்தவர்.என் மீது அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு நாங்கள் இருவரும் இன்னும் சந்திக்காத இடைவெளியே காரணமாயிருக்கும் என நினைக்கிறேன்.அவரின் மனம் புண்பட்டதாகத் தெரிந்த அந்தப் பின்னூட்டத்துக்கு நான் உடனே மன்னிப்பு தெரிவித்திருந்ததாக நினைவு. என் மீது அவர் கொண்டிருக்கும் அபிப்ராயம் மாறுவதற்கும் நான் முயல்கிறேன்.

பத்மஜா! உங்களை ஒரு சரியான சந்தர்ப்பத்தில் பழி வாங்குவேன்.

அப்பாதுரை said...

பின்னூட்ட நேர்மைக்குப் பாராட்டுக்கள் GMB சார்.
சுந்தர்ஜி தானே.. கருத்து வேறுபாடுனு ஏதாவது கலாட்டா பண்ணினா ரெண்டு போடு போடுங்க. இல்லின்னா எனக்குத் தெரிஞ்ச Bangalore TAXI காரரை விட்டு சுந்தர்ஜியை உங்க வீட்டுக்குப் பசி நேரத்தில் விருந்துக்குக் கூட்டிவரச் சொல்றேன் :)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்...

நன்றி...