Sunday, September 16, 2007

கடவுளே!!!

கடந்தும் உள்ளிருப்பதால்
கடவுளென்றும்,
காணாப் பேரின்பமாய்
இறையென்றும்,
மூன்றுலகம் ஆட்டுவிக்கும்
ஆண்டவனென்றும்
பிறவிப் பெருங்கடல் நீக்கும்
பேரொளி என்றும்
காலமெலாம் புகழப்படும்
நித்ய ஜீவஒளியே!!!

பலமுறை அடிப்பினும்
அன்னை தேடும் குழந்தையாய்
அன்பு அரவணைப்பு எல்லாம்
மறுக்கப்பபட்ட அனாதையாய்
கண்ட கனவை கண்ணில்
தேக்கும் ஊமையாய்
உன்னிடமே வந்து நிற்கிறேன்
ஊண் மறுக்கப்பட்ட குழவியென

என்னுடானான உன் விளையாட்டை
என்றுதான் நிறுத்த எண்ணம்?
அன்றுதான் மலரும் என் மனம்
இதும் நீ அறிவாய் அது திண்ணம்!!

Friday, September 14, 2007

வலி

வலி பெற்ற மொட்டு
பூவாய் மலரும்
உளி கொடுத்த வலியில்
சிலையும் சிரிக்கும்
வலி இல்லா வாழ்க்கை
வையத்தில் இல்லை
கலி என்றில்லை இது
காலத்தின் உண்மை

மனதின் வலியில்
மனது மலருமா?
பிரிவின் வலியில்
உறவு தொடருமா?
தனிமை வலியில்
இனிமை வருமா?
மரண வலிதனில்
ஜனனம் பிறக்குமா?

வலியின் விளைவு
வல்லதே ஆனாலும்
வலியே வாழ்வானால்
வாழ்வதெங்கணம்???
வலிக்கு வல்லமை
தந்த இறைவனவன்
வலி தாங்கும் இதயம்
மட்டும் தர மறந்ததேன்??

வலிக்கு வாழ்க்கைப் பட்ட
நிழல் தேடும் நெஞ்சங்கள்
வலிந்து வரும் துயரதை
வாழ்நெறி என உணருமோ ?
இல்லை வலியுணரா மரணம்
வரக் காத்திருக்குமோ??

வலிக்கு வலி வரும் நேரம்
இறைவனும் உணர்வானா அதை?
வழிந்தோடும் கண்ணீர் மாற்ற
விரைந்தோடி வருவானா ?நினை!

Wednesday, September 5, 2007

யாதும் வீணே

தான்
வண்ணத்துப் பூச்சியென
மயங்கித்திரிந்தது
சிறகொடிந்த விட்டில் பூச்சி!
பொழுது போகா விஷ(ம)ப்பூச்சிகள்
விசிறி விட்டன
அவ்வெண்ணமதை !
காயங்களை விழுப்புண்ணெனக்
கர்வத்துடன் நோக்கி .....
கண்ணாடிகதவுக்கப்பால்
கசியும் நிலவொளியை ,
சேரத்துடித்தது
சிறகொடிந்த விட்டில் பூச்சி!!
விட்டில் பிறந்தது
வீழ்வத்ற்கென
விதியை எழுதிய
விண்ணவன் சிரித்தான்
மனதோடு!
சற்றும் மனம் தளரா
முயற்சியொடு,
முட்டாள் விட்டில் பூச்சி!!

Saturday, September 1, 2007

இன்று

அன்று!
கண்ணிலே கனவு!
மங்கலாய் மனவெளியில்;
கனவெனினும்,
ஆழ் மன பெட்டகத்தில்
பூட்டிய நினைவு!
காலசுழற்சியில்
கனவுகள்! கனவுகள்!
ஆசைகளின் கூப்பாடுகள்!
நிதர்சனம் உரைத்தது
கனவு கனவுதானென்று!
நடைமுறை முரண்கள்
கனவினை கொல்லும்!
கல்லறைக் கனவுகள்
எனக் கற்றுத்தெளியும் நேரம்
சட்டென ஒரு கனவுப் பூ!
மனமெல்லாம் பூ வாசம்!
மூடிய கதவின்
மறுபக்கம்
நிலவொளியாய்
சிறு ஜன்னல்!
நனவாகும் கனவின்
வாயிற்படியில் நான்!!!