Friday, November 19, 2010

ஜிங்கிள் ஆல் த வே !


நவம்பர் துவங்கியவுடனேயே
எழுப்பி விடுகிறார்கள் .

வரிசையான கோரிக்கைகள்
மடியில் அமர்ந்தும் ,கனவில் கிசுகிசுத்தும் ,கடிதம் போட்டும்
ஆசைகள் ஆயிரம்.

வீடு வீடாக அலங்கரிக்கப்பட்டமரங்களில்
தொங்கும் காலுறைகளையெல்லாம் நிரப்பி நிரப்பி
வாதமேறிய விரல்கள் மேலும் விறைக்கின்றன.

ஆண்டுகள் ஈராயிரம் ஓடிக்களைத்த ரெயின்டீர்கள்
இனி ஓடுமோ என வருடந்தோறும் தோணுகிறது !

ஆசைகள் விகசித்து
ரொம்பிவழியும் ஸ்லெட்ஜின் அச்சாணி
இற்றுபோகாததொரு அதிசயம் தான் ..

ஜிங்கிள் மணியின் ஓசைகூட
மந்தமான காதில் மெதுவாய்த்தான் கேட்கிறது .

புகைபோக்கி வழி வெளிவந்து ருமாடிச காலைத் தேய்த்து நடக்கையில்...
இரண்டாயிரத்து பத்தாவது முறைகூட
தன் ஆசை என்னவென்று யாருமே கேட்கா ஏமாற்றத்தில்..
அடுத்த வருடமாவது !என்ற ஏக்கத்தோடு நீளுறக்கம் கொள்வார்..
மீட்பன் பிறந்த தினம், கொடுத்துச் சிவந்த ஆதித் தாத்தா

Tuesday, November 9, 2010

உடைந்த நகங்களும் ,கூர் பற்களும்

நகங்கள்
மிருகங்களிடம் மட்டுமே
நீண்டு வளரும் என நான் நம்பியது
உனக்குத் தெரிந்திருந்தது.  
அதனால் உன் கூரிய நகங்களை
என்றும்
மடக்கி,மறைத்தே வைத்திருந்தாய் .

உன் பின்விரல்களால்
என் முகம் தடவும் போதும்
உன் விரல்கள்
மழுங்கியேதான் தோன்றின .

ஆயின்
துரோகத்தின் சுவையறிந்து
ரத்தவிளாரான என் முகம் பொத்தி
விக்கித்து அமர்ந்த போது,
உன் உடைந்த நகங்களும்
இனி வளராது போகும்
என்றறிந்து வந்தமரும் புன்னகையை
மறைக்கவே முடியவில்லை....

நீ உன் விஷப்பற்களை
சாணை பிடிக்கப் போயிருக்கலாம்
எனத் தெரிந்திருந்தும் கூட .

Sunday, November 7, 2010

என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே

நிலவு தராத மயக்கம் உண்டா?
அதுவும் முழு நிலவில் தன் காதலியின் முகத்தைக் கண்டு பாடும் காதலன் எத்தனை உன்மத்தனாக மாறி இருக்க வேண்டும்..?
வெண்ணிலாவிடம் போய் "நான் கெஞ்சினால் அவள் தர மாட்டாள் ,நீயாகவே வாங்கிகொள் ,இதும் அவள் சொல்லிக்கொடுத்தது தான் என பிதற்றும் காதலனை நாம் ரசிக்காமல் இருக்க முடியுமா ?
T M S இன் குரலில் இந்த அழகிய பாடல் ..
கேட்க கேட்க சலிக்காமல் .....

Monday, November 1, 2010

வளரும் முத்தம்


தராமல் போன முத்தமொன்று 
நம்மிடையே வளர்ந்து கொண்டே 
போகிறது 

எந்த ஒரு கட்டுக்கும் 
அடங்காமல் 
உடன் என்னிடம் சேர 
துடிக்கிறது 

அதில் நேற்று முளைத்த 
சிறகுகள் 
என் வயிற்றினுள் 
படபடத்துக் கொள்கின்றன 

என் ஒரு சிறுமுத்தம் 
போதும்
அதை மரணிக்க 
இல்லை ஒரு சொல் 
மாத்திரம் !

இருந்தும் 
பேருரு எடுக்கும் அதனை 
புன்னகையோடே வளரவிடுகிறேன் .
வியாபித்து 
என்னையது 
கொல்லும் நாளுக்காக !